

உலகின் பல மதங்கள் மற்றும் சமயங்களில் உணவுக்கு ஒரு கடவுள், காற்றுக்கு ஒரு கடவுள், சுப நலன்களை அள்ளிக் கொடுக்க ஒரு கடவுள், மழை, சூரியன், சந்திரன்... என பல கடவுளர்கள் இருப்பர்.
அதே போல ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளுக்குத் தகுந்தாற் போலச் சடங்குகளும் இருக்கும். கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும், முதலையைத் திருமணம் செய்து கொண்டால் நாடு வளம் பெறும், வாழை மரத்துக்குத் தாலி கட்டி வெட்டிச் சாய்த்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்... எனப் பல நம்பிக்கைகள் இந்த 2022ஆம் ஆண்டில் கூட கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அப்படி, வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி, இந்திர தேவனுக்கு எதிராக அரசு அலுவலகத்தில் புகார் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
இந்து மத நம்பிக்கையில், இந்திர தேவர், சூரியன், சந்திரன், வாயு, அக்னி... போன்ற அனைத்து உப தேவர்களின் தலைவனாகப் பார்க்கப்படுகிறார். செல்வச் செழிப்பையும், மழையையும் வழங்கும் இறைவனாகப் பார்க்கப்படுகிறார் இந்திர தேவன்.
தமிழ் திணைகளில் வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றழைப்பர். மருத நிலத்துக்கு இந்திரனையே தெய்வமாகக் கூறப்பட்டிருக்கிறது.
ஜாலா கிராமத்தைச் சேர்ந்த சுமித் குமார் யாதவ், தன் கிராமத்தை நிர்வகிக்கும் தாசில்தாரிடம் இந்திரனுக்கு எதிரான புகாரைக் கொடுத்தார்.
தாசில்தார் அலுவலகம் அப்புகாரை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக டி என் ஏ பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அது அரசு அதிகாரி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
அப்புகாரில், தன் கிராமத்தில் போதிய அளவுக்கு மழை பொழியாததால், மிகக் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், அதற்கு இந்திர தேவர் தான் காரணம் என்றும் கூறப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தன் கிராம மக்கள் வறட்சியால் படும் துயரத்தை உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இப்படி ஒரு புகாரை எழுதுவதாகவும், அதிகாரிகள் உதவுவார்கள் என நம்புவதாகவும் அப்புகாரிலேயே குறிப்பிட்டுள்ளார் சுமித் குமார்.
சுமித் குமாரின் புகாரை மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அலுவலகத்துக்கு அனுப்பியதாகக் கூறப்படும் எம் என் வர்மா என்கிற அதிகாரி, சுமித் குமாரின் புகாரைத் தான் படிக்கவில்லை என்றும், அப்புகாரை தன் உயரதிகாரிகளுக்கு இன்னும் அனுப்பவில்லை என்றும் வியான் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
"சம்பூர்ண சமாதான் திவஸ் அன்று பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். மேலே குறிப்பிட்டது போன்ற மனுக்கள் எந்த அலுவலகத்துக்கும் அனுப்பப்படாது. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என எம் என் வர்மா தைனிக் ஜாக்ரன் பத்திரிகையிடம் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust