

உலகப் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர். ட்விட்டர் வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்,"தான் இனி தனது கம்பெனியின் பங்குகளை விற்பதாக இல்லை!" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 12 சதவிகிதம் சரிந்த நிலையில்தான் அதன் பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள இலங்கைத் தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே இலங்கைக்கு உதவி செய்யத் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த உதவிக்கு மத்திய அரசின் அனுமதி தேவை. எனவே, அதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி பெறக்கூடிய தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய ஸ்டாலின், " 40 ஆயிரம் டன் அரிசி; இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.80 கோடி; அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்து பொருட்கள்; இதன் மதிப்பு ரூ.28 கோடி; குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர்; இதன் மதிப்பு ரூ.15 கோடி. இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. மத்திய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும்" எனக்கூறி தீர்மானத்தை முன்மொழிய, அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழக சட்டசபையில் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சீனாவில் 23,000 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் மருத்துவப் படிப்பு படிப்பவர்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்குப் படிக்கும் மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர். கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், சீனாவில் கல்வி நிலையங்கள் நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்திய மாணவர்களும் தங்கள் படிப்பைத் தொடர சீனாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.ஆனால், விமானப் போக்குவரத்தைச் சீனா நிறுத்தி விட்டது. இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. தற்போது சீனா இதுகுறித்து தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
"எந்தெந்த மாணவர்கள் அவசியம் சீனாவுக்கு திரும்ப வேண்டியவர்கள் என்ற பட்டியலை இந்தியா அளிக்க வேண்டும். அந்த மாணவர்களை நாங்கள் அனுமதிப்போம்." என சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்திருக்கிறார்.
மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு வழக்கமாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி இம்மாநாடு நடந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் நடக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com