முஸ்லீம் பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களை ஏலம்விடும் புல்லிபாய் செயலியை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் விஷால் குமார் ஜா, உத்தரகண்ட்டைச் சேர்ந்த சுவேதா சிங், இன்ஜினியரிங் மாணவர் மயங்க் ஆகியோரை மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
தொடர்ந்து நேற்று அசாமை சேர்ந்த நீராஜ் பீஷ்னோய் என்ற இஞ்சினியரிங் மாணவரைக் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வரும் பிஷ்னோய்க்கு, புல்லி பாய் செயல்பாட்டில் முக்கிய பங்கு உள்ளது என தெரிவித்த காவல்துறை, அவரை டில்லிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பீஷ்னோய் கல்லூரியிலும் சஸ்பண்ட் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தவிருக்கும் பஞ்சாப் மாநிலம் மேகா எனும் கிராமத்தை சேர்ந்த 1000 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க முடிவு செய்துள்ளதாக சோனுசூட் அறிவித்திருக்கிறார்.
சமூக நலப் பணிகளில் ஆர்வம் மிகுந்த சோனு சூட் பல உதவிகளை ஏழை எளிய மக்களுக்குச் செய்து வருகிறார். தற்போது முதற்கட்டமாக 100 மாணவிகளுக்குச் சைக்கிளை வழங்கியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், மாணவிகளின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையில் வெகு தூரம் இருப்பதனால் காலையில் கடுமையான பனி மூட்டத்தைத் தாண்டி செல்வது அவர்களுக்குக் கடினமானதாக இருக்கிறது இதனால் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை எளிதாக்க, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 1000 பேருக்கு சைக்கிள் வழங்க முடிவு செய்துள்ளேன் எனக் கூறினார்.
நேற்று முன்தினம் பிரதமர் மோடி பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தைத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. பிரச்சாரத்துக்கு அவரது கார், விவசாயிகள் சாலை மறியல் நடத்தியதால் பாதியிலேயே நிற்க நேரிட்டது.
20 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருந்த பிரதமர் அங்கிருந்து திரும்பி செல்லும் போது “குறைந்தபட்சம் நான் உயிருடன் திரும்பி வந்ததுக்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்” எனக் கூறியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் நேற்று ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் பஞ்சாபிலிருந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு என்பது அதிர்ச்சியளிக்கிறது” எனக் கூறினார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியது, “பிரதமர் பஞ்சாப் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டது வருத்தமளிக்கிறது. ஆனால் இதில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை, இதனைக் காரணமாக வைத்து பஞ்சாப் அரசை பதவிநீக்கம் செய்ய சதி நடக்கிறது என தெரிவித்தார். “பிரதமர் இங்கு 20 நிமிடங்கள் காத்திருந்தார். ஆனால், விவசாயிகள் டெல்லி சாலையில் சுமார் ஒன்றை ஆண்டுகள் காத்திருந்தனர்” எனவும் அவர் கூறியிருக்கிறார்.
பிரதமருக்கு நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட உள்துறை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தவிர, “லாயர்ஸ் வாய்ஸ்” என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு வரலாற்றையும் திராவிட இயக்க வரலாற்றையும் புரட்டிப் பார்க்கும் போது நமது வெற்றிகள் அனைத்து. நீண்ட நெடிய சட்ட, அரசியல் மற்றும் மக்கள் போராட்டத்துக்கு பிறகே கிடைத்துள்ளன” எனப் பேசினார்.
“நீட் தேர்வு போன்றவற்றுக்கு எதிரான நமதுப் போராட்டத்தையும் சமூக நீதி இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் எனக் கருதி நமது கொள்கையிலிருந்து எள் அளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்து செல்வோம்” எனக் கூறிய முதல்வர், “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியது தான். இதன் அடுத்தகட்டத்தை குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு நீங்கள் அனைவரும் அனைத்துகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் கூறினார்.
அனைத்துகட்சி கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர்.
ரோலா மருத்துவமனையில் 4 வயது சிறுவனுக்குச் சிறுகுடல் மாற்றுச் சிகிச்சை செய்த மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.
பெங்களூரைச் சேர்ந்த குகன் எனும் 4 வயது சிறுவனுக்குச் சிறுகுடல் சுருண்டு அடைப்பு ஏற்பட்டு, குடல் வளையம் செயல்படாமல் போனது. சிறுகுடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து, சிறுவனது தந்தை தனது சிறுகுடலின் ஒரு பகுதியை அளிக்க முன்வந்தார்.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பேராசிரியர் முகமது ரோலா தலைமையில் மருத்துவர்கள் குழு இந்த சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சிறுவனுக்கு சில வாரங்கள் நரம்பு வழியாகவும் பின்னர் வாய் வழியாகவும் உணவு வழங்கப்பட்டது.
இப்போது சிறுவனும் அவனது தந்தையும் பூரண குணமடைந்துள்ளனர். ரோலா மருத்துவமனையின் இந்த மிக அரிதான சிகிச்சை ஆசியா புக்ஸ் ஆஃப் ரெகார்டில் இடம் பெற்றுள்ளது.