Morning News Today : மும்பையில் ஜூலை மாதம் கொரோனா 4-வது அலை! - மும்பை மாநகராட்சி
மும்பையில் கொரோனா 4- வது அலைக்கு வாய்ப்பு!
சில நாள்களாக கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா 4-வது அலை வரும் ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். இந்த எச்சரிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது 4-வது அலை வரும் வாய்ப்பை மறுத்து விட முடியாது. சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்." என்றார்.
தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு!
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகியிருக்கின்றனர். அதன்படி, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் வெற்றி சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரத்தின் வெற்றிச் சான்றிதழை அவரின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின்
Twittert
எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கிய தமிழக அரசு!
தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், முனைவர் கு.மோகனராசு, இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இம்ரான்கான் மீது தேசத்துரோக வழக்கு - பாகிஸ்தான் அரசு முடிவு!
பாகிஸ்தானில், தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றதையும், இம்ரான்கான் ஏற்க மறுத்துவருகிறார். தனது பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களைத் திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் அரசு சொத்துக்கள் மீதான தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி இம்ரான்கான் மீது தேசத்துரோக வழக்கு தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
கச்சா எண்ணெய்
Pexels
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 30 உயர்வு!
பாகிஸ்தானில், ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு ரூ. 30 (பாகிஸ்தான் மதிப்பில்) அதாவது 17 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 209.86- ஆக உள்ளது. டீசல் விலை ரூ. 204.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 181.94 ஆக விற்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

