

ஹிஜாப் பெண் அடக்குமுறையின் அடையாளம்: ஆண்களையும் அவமதிக்கிறது - தஸ்லிமா நஸ்ரின்
Pexels
‛‛ஹிஜாப் என்பது அடக்குமுறையின் அடையாளம். இது பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவமானம்'' என வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி இந்த சர்ச்சை ஆரம்பித்தது. நம் ஊரில் இருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மேல்நிலை வகுப்புகளை கர்நாடகாவில் பி.யூ கல்லூரியில் படிக்கிறார்கள் மாணவர்கள். பெயர்தான் கல்லூரி என்றாலும், பள்ளி வயது மாணவர்களே இங்கு படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு முதல்வர் ருத்ர கவுடா அனுமதி மறுத்ததாகச் சொல்லி எட்டு முஸ்லிம் மாணவிகள் கல்லூரியின் வாசலில் போராட்டம் நடத்தினர்.
'கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை இல்லை. ஆனால், வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஹிஜாப்பை அகற்றிவிட வேண்டும். வகுப்பறையில் எல்லோரும் சமமே. கல்லூரி சேர்க்கையின்போதே இதைத் தெளிவாகக் குறிப்பிட்டு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறோம்' என்று முதல்வர் ருத்ர கவுடா சொன்னார்.
ஹிஜாப் சர்ச்சை தொடர்பான ஐந்து வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித், இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்தார். 'அரசியல் சாசனம் தொடர்பான பல கேள்விகளை அடக்கிய வழக்கு இது. பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எனவே, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்' என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ண திட்சித், நீதிபதி ஹாஸி ஜைபுன்னிசா மொஹியுதின் ஆகிய மூன்று நீதிபதி அடங்கிய அமர்வு இதை விசாரிக்க உள்ளது. 18 மாணவிகள் சார்பில் தொடுக்கப்பட்ட ஐந்து வழக்குகளை மொத்தமாக இந்த அமர்வு விசாரிக்கும். ஹிஜாப் அணிவது அரசியல் சட்டப்படி வழங்கப்பட்ட அடிப்படை உரிமையா, சீருடை தொடர்பான கர்நாடக அரசின் உத்தரவு செல்லுமா ஆகிய கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு பதில் சொல்லும்.
இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கும் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால், அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும்.
தஸ்லிமா நஸ்ரின்
NewsSense
இப்படியான சூழலில் வங்கதேசத்தை சேர்ந்தவரும், டெல்லியில் வசிப்பவருமான பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “ மத உரிமை என்பது அனைவரும் கல்வி பெறுவது தான் என நான் நம்புகிறேன். ஹிஜாப், புர்கா, நிகாப் ஆகியவை அடக்கு முறையின் அடையாளங்கள். முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் ஹிஜாப் அவசியம் என்றும், இன்னொரு தரப்பினர் அவசியம் இல்லை எனவும் நினைக்கின்றனர்.
அறிமுகம் எப்போது 7ம் நூற்றாண்டில் சில பெண் வெறுப்பாளர்களால் ஹிஜாப் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பெண்கள் வெறும் பாலியல் பொருளாக கருதப்பட்டனர். பெண்களை பார்த்தால் ஆண்களுக்கு பாலியல் ஆசை இருக்கும் என்று நம்பினர். இதனால் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்தனர். ஆண்களிடமிருந்து தங்களை மறைத்து கொண்டனர்.
பெண், ஆண்களுக்கு அவமானம் தற்போதைய 21ம் நூற்றாண்டில் பெண்களுக்கும் சம உரிமை உள்ளதை நாம் அறிந்துள்ளோம். அதனால் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை அடக்கு முறையின் அடையாளமாக உள்ளது.
இருப்பினும் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் அவமானப்படுத்துவதாக கருதுகிறேன்'' என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறி உள்ளார்.