வங்கி அதிகாரியான துப்புரவு பணியாளர் - மும்பை பெண்ணின் ஊக்கமளிக்கும் கதை
SBI வங்கியின் மேலாளராக நியமனம் ஆகியிருக்கிறார் அதே வங்கியில் துப்புரவாளராக பணியாற்றிய பெண் ஒருவர்.
பூனேவை சேர்ந்த பிரதிக்ஷா டோண்ட்வாகர் என்ற பெண், பாரத ஸ்டேட் வங்கி மும்பை கிளை துப்புரவாளராக பணியாற்றி வந்தார். தற்போது அதே வங்கியின் ஏஜிஎம் ஆக இருக்கிறார்.
படிப்பு கனவு கலைந்தது
பூனே நகரை சேர்ந்த பிரதிக்ஷா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது படிப்பை பாதியில் விடவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், பதினாறு வயதிலேயே திருமணமாகி, கணவருடன் மும்பைக்கு வந்துவிட்டார் பிரதிக்ஷா.
பிரதிக்ஷாவின் கணவர் சதாஷிவ் கடு மும்பையின் பாரத ஸ்டேட் வங்கியில் புக் பைண்டராக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
இரண்டாவது துரதிர்ஷ்டம்
திருமணமாகி முதலாம் ஆண்டு இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அப்போது மகன் மற்றும் கணவருடன் சொந்த ஊரில் இருக்கும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் பிரதிக்ஷா தனது கணவரை இழந்தார்.
கணவர் வேலை பார்த்த இடத்திலேயே வேலை
பிறகு தன் மகனை வளர்ப்பதற்காக பல விதமான வேலைகளை செய்து வந்த பிரதிக்ஷா, தன் கணவர் வேலை செய்த அதே வங்கியில் வேலைக்கு சேர்ந்தார். முறையான படிப்பு இல்லாத காரணத்தினால், அங்கு துப்புரவு பணியாளராக வேலைக்கு சேர்க்கப்பட்டார் பிரதிக்ஷா.
"என் கணவருக்கு தரவேண்டியிருந்த நிலுவைத் தொகைகளை பெறச் சென்றபோது, எனக்கு உதவுமாறு வங்கியிலுள்ளவர்களிடம் கேட்டிருந்தேன். எனக்கு வேலை என்ற ஒன்று நிச்சயம் வேண்டும் என்ற நிலை இருந்தபோதிலும், அதற்கான தகுதி என்னிடம் இல்லை" என்ற பிரதிக்ஷா, காலை வேலைகளில் இரண்டு மணி நேரம் வங்கியில் துப்புரவு பணியாளராக பணியாற்றினார்.
மீண்டும் தொடர்ந்த படிப்பு
அதன் பின்னர் அங்கும் இங்குமாக சிறிய வேலைகளை செய்து வந்தார் பிரதிக்ஷா. எனினும், தான் செய்யும் வேலையில் திருப்தி இல்லாதவராக இருந்தார். மற்றவர்களை போல தானும் ஒரு அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்க்கவேண்டும் என்பது அவரது கனவு. அதற்கான திறன் தன்னிடம் இருப்பதில் உறுதியாக இருந்த பிரதிக்ஷா, பாதியில் நின்று போன தனது படிப்பை தொடர முடிவெடுத்தார்.
வங்கி ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்களின் உதவியுடன் தனது பத்தாம் வகுப்பை 60% மதிப்பெண்களுடன் முடித்தார். ஆனால் வங்கியில் வேலைக்கு சேர வேண்டும் என்றால், குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பையாவது முடித்திருக்க வேண்டும் என்பதால், பிரதிக்ஷா, விக்ரோலியில் இரவு கல்லூரியில் (நைட் காலேஜ்) சேர்ந்து பன்னிரண்டாம் வகுப்பை படித்து முடித்தார். 1995 ஆம் ஆண்டு பிரதிக்ஷா உளவியல் படிப்பு முடித்து பட்டமும் பெற்றார்.
மறுமணம் மற்றும் பதவி உயர்வு
குறைந்தது 12ஆம் வகுப்பாவது வேண்டும் என்றிருந்த நிலையில் பட்டதாரியாக SBI இல் கிளர்க்காக பணியமர்த்தப்பட்டார் பிரதிக்ஷா. இதன் பின்னர் தோல்வி என்ற சொல்லுக்கு இடமில்லாமல் இருந்தது பிரதிக்ஷாவின் வாழ்க்கையில். தன்னுடன் வங்கியில் வேலை பார்த்த பிரமோத் டோன்வாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரதிக்ஷாவின் கனவுகளுக்கு உறுதுணையாக நின்றார் கணவர் பிரமோத்
பின்னர் 2004ல் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரதிக்ஷா, உதவி பொது மேலாளர் ஆக உயர்ந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளார் பிரதிக்ஷா.
ஆனால் இத்துடன் நின்றுவிட விரும்பவில்லை இவர். இயற்கை மருத்துவத்தில் ஒரு படிப்பை மேற்கொண்டுள்ள பிரதிக்ஷா, தான் கற்றுக்கொண்டவற்றை வைத்து மக்கள் சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார் SBI வங்கியின் ஏஜிஎம் !
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

