தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களெல்லாம் நேற்று முன்தினம் மாலை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புகளெல்லாம் தேர்தல் ஆணையத்தால் பலப்படுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்தது.
திருச்சி தில்லைநகர் வார்டு 22-க்குட்பட்ட மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, ``நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். சேலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருச்சி மாநகராட்சியில் 1300 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். திருச்சி மாநகராட்சியிலும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.
நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறவில்லை என முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டி உள்ளது தொடர்பான கேள்விக்கு, ``குறை கூறுவதால் தான் அவர் முன்னாள் முதல்வர்” என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. இந்த முறை திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கோவையில் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.