Morning News Today தமிழகம் வரும் பிரதமர் மோடி முதல் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம் வரை
தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் ரூ.12,413 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்கின்றனர். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைசச்ர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாநிலங்களவை MP தேர்தல்; காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: 3 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் இருந்து மொத்தம் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கிறார்கள். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 29-ம் தேதி முடிவடைகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை காரணமாக அ.தி.மு.க.விடம் உள்ள 3 இடங்களில் ஒன்று தி.மு.க. வின் வசம் செல்கிறது. இதனால், தி.மு.க.வுக்கு 4 இடம் கிடைக்கிறது. 4-ல் ஒரு இடத்தை காங்கிரஸுக்கு தி.மு.க வழங்கியுள்ளது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள் பயணமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஊட்டி வருகை
குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு 5 நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகைத் தர இருக்கிறார். ஹெலிகாப்டர் மூலம் இன்று ஊட்டி வரும் அவர் அங்குள்ள ராஜ்பவனில் தங்கவுள்ளார். ஊட்டியில் பல விழாக்களில் பங்கேற்க இருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி ஊட்டியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு வாகன அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகின்றன.
இலங்கை: அதிபருக்கு எதிரான போராட்டத்துக்கு பிரதமர் ஆதரவு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் கடும் போராட்டங்கள் வெடித்தன. பிரதமர் பதவியிலிருந்து, மகிந்த ராஜபக்சே கடந்த 9-ம் தேதி பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன.
ஆனால், ரணில் விக்ரமசிங்கேவுக்கு ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவு தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் இடைக்கால அரசில் இடம் பெறாவிட்டாலும், இலங்கையை மீட்பதற்கான விக்ரமசிங்கேவின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ம் தேதியிலிருந்து காலிமுக திடலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, யாரும் எதிர்பாராதவகையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் நிலவரம்
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp