![டாடா, அதானி](http://media.assettype.com/newssensetn%2F2022-09%2Fb9d8dc21-5dd5-46e3-948a-28c03b60c626%2Fhero_image_kk__16_.png?rect=0%2C0%2C976%2C549&w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்தியாவின் அதிக மதிப்புடைய வர்த்தக குழுமங்கள் பட்டியலில் அவ்வப்போது இந்தியாவில் வெளியாகி விவாதிக்கப்படும். அப்பட்டியலில் தற்போது அதானி குழுமம் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இதில் மதிப்பு என்று குறிப்பிடப்படுவது என்ன? அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? அதானி மற்றும் டாடா குழுமங்களின் மதிப்பு என்ன? வாருங்கள் பார்ப்போம்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பை ஆங்கிலத்தில் மார்கெட் கேப்பிட்டலைசேஷன் என்பர். அதாவது அந்த நாளில், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டுமோ அதைத் தான் சந்தை மதிப்பு என்கிறோம்.
உதாரணத்துக்கு ரஹீம் & கோ என்கிற நிறுவனத்தின் 100 பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஒரு பங்கின் விலை 10 ரூபாய் என்றால் ரஹீம் & கோவின் மொத்த சந்தை மதிப்பு 1,000 ரூபாய். நாளை இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 11 ரூபாய் ஆகிவிட்டால், மொத்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,100 ரூபாயாக அதிகரிக்கும். இதைத்தான் நாம் சந்தை மதிப்பு என்கிறோம்.
சமீபத்தில் அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. இதன் பிறகு இந்தியாவிலேயே நம்பர் 1 சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக இன்று கொடிகட்டிப் பறக்கிறது.
அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் என எல்லாவற்றையும் சேர்த்து தற்போது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 22.25 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருப்பதாக இந்தியா டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதானி குழும பங்குகளின் விலை கடந்த ஓராண்டுக் காலத்துக்குள் மட்டும் சுமார் 10.16 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது.
இந்தியாவின் பழம்பெரும் தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் தான் டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டைட்டன், டாடா கெமிக்கல்ஸ், டாடா பவர், டாடா கன்ஸ்யூமர், டாடா கம்யூனிகேஷன், வோல்டாஸ்... எனப் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. டாடாவின் 27 பெரிய நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
அவைகளின் மொத்த மதிப்பு சுமார் 20.8 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருப்பதாக இந்தியா டைம்ஸ் கூறுகிறது. என்ன தான் சந்தை மதிப்பில் அதானி குழுமம் டாடா குழுமத்தை முந்தி இருந்தாலும், மொத்த வருவாய் எடுத்துக் கொண்டால், அதானி குழுமத்தின் 2.02 லட்சம் கோடி ரூபாயை விட, டாடா குழுமத்தின் வருவாய் சுமார் 4 மடங்கு அதிகமாக 8.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. 2021 - 22 நிதியாண்டு விவரங்கள் இது.
அதே நிதியாண்டில் நிகர லாபத்தை எடுத்துக் கொண்டால் அதானி குழுமம் 13,423 கோடி ரூபாயாகவும், டாடா குழுமத்தின் நிகர லாபம் 74,523 கோடியாகவும் இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சில மணி நேரங்களுக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸை பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்கிற இடத்தைப் பிடித்தார். பிறகு பங்கு விலை மாறுபாடுகள் காரணமாக மீண்டும் உலகின் மூன்றாவது பணக்காரரானார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கெளதம் அதானி, கூகுள் நிறுவனர்களான லாரி பேர்ஜ், செர்கி பிரின், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், உலக முதலீட்டாளர்களின் பிதாமகன் வாரன் பஃபெட்... ஆகியோர் பின்னுக்குத் தள்ளி உலகின் 3ஆவது பெரிய பணக்காரராகத் தொடர்வது இங்கு நினைவுகூரத்தக்கது.
எலான் மஸ்க் சுமார் 275 பில்லியன் டாலரோடு உலகின் நம்பர் 1 பணக்காரராகவும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 155 பில்லியன் டாலரோடு இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust