![Money Heist Series](http://media.assettype.com/newssensetn%2F2022-01%2F7af3db2c-b651-410e-9859-6664746f1705%2F2915038.jpg?rect=0%2C0%2C3556%2C2000&w=480&auto=format%2Ccompress&fit=max)
Money Heist Series
மணி ஹெய்ஸ்ட் தொடரை விமரிசிப்போரும் கூட உலகளவில் கணிசமாக இருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் இந்தக் கருத்து கந்தசாமிகள் தொடரை முழுவதும் பார்த்து விட்டே தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். பிடிக்கவில்லை என்பதால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சில அதி தீவிர இடது சாரியாக கருதிக்கொள்ளும் சிவப்பு கந்தசாமிகள் மணி ஹெய்ஸ்ட் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பை மடைமாற்றும் ஏமாற்று உத்தி என்று அடித்து விடுகிறார்கள்.
Money Heist Characters
ஐரோப்பாவிலும், தென் அமெரிக்காவிலும் அரசு – பொருளாதார அமைப்புகளுக்கான எதிர்ப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மணி ஹெய்ஸ்ட்டின் கரு திருட்டு என்றாலும் அதன் அடிநாதமான இந்த அரசு நிறுவனங்கள் அதாவது போலீசு, இராணுவம், வங்கி போன்றவைகள் மீதான எதிர்ப்பு மக்களிடம் இருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பை மையப்படுத்தி மணி ஹெய்ஸ்ட் படைப்பாளிகள் தமது கதையை எழுதவில்லை.
மணி ஹெய்ஸ்ட்டின் கதையோட்டம் என்பது ஹாலிவுட் – இங்கிலாந்து ஹெய்ஸ்ட் வரிசைப் படங்களிலிருந்து நிறைய மாறுபடுகிறது. ஹாலிவுட்டில் ஒரு திருட்டு குறித்த படம் என்பது பக்கா பிளானிங்கில், அறிவியல் பூர்வமாக கச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கும். மணி ஹெய்ஸ்ட்டில் அறிவியல் இருந்தாலும் பாத்திரங்கள் சில்லறை பிர்ச்சினைகளுக்காக சண்டை போடுவார்கள், உணர்ச்சி வசப்படுவார்கள், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முன்யூகிக்க முடியாது.
Narendra Modi
படம் விறுவிறுப்பாக இருக்க வேண்டும், திட்டம், தடைகள், முடிச்சுகள், இடையிடையே காதல், காதல் பிரிவு, குடும்பம், மகிழ்ச்சி போன்ற சென்டிமெண்டுகள் போன்ற ஃபார்முலாவில்தான் மணி ஹெய்ஸ்ட் எழுதப்பட்டுள்ளது. பிறகு சாதா காமடி, டார்க் காமடி என்ற அம்சமும் இருக்கிறது. பொதுவில் ஆக்சன் படங்களில் எமோஷனல் டிராமா இருக்காது. எமோஷனல் டிராமாவில் ஆக்சன் இருக்காது. மணி ஹெய்ஸ்ட்டில் இரண்டும் இருக்கிறது.
ஒருவேளை மணி ஹெய்ஸ்ட் தொடரை இந்தியாவில் எடுத்திருந்தால் எப்படி இருக்கும்? Quora-வில் எமில் சிரியாக் என்பவர் பதில் சொல்கிறார்.
இந்தியாவில் இத்தொடர் எடுக்கப்பட்டிருந்தால் ஹீரோ புரபசராக இருக்க மாட்டார். எனில் யார் ஹீரோ? மோடிஜிதான். ரிசர்வ் வங்கி பணம் அச்சிடும் தொழிற்சாலையில் கொள்ளையர்கள் நுழைந்த உடனேயே மோடி பழைய பணத்தை தடை செய்துவிடுவார். பிறகு புரபசர் இன்னொரு 15 வருடங்களுக்கு வேறு ஒரு புதிய திருட்டுக்காக திட்டமிட வேண்டும். கவனியுங்கள் மணி ஹெய்ஸ்ட் தொடர் குறித்த பார்வையில் ஒரு இந்தியர் தனது அரசியல் சூழலை ஒட்டி கருத்து தெரிவிக்கிறார். அது நகைச்சுவையாக இருப்பது வேறு விசயம். இப்படித்தான் உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் அரசியல், பொருளியல், வாழியல் சூழலியலோடு மணி ஹெய்ஸ்ட்டை பொருத்திப் பார்க்கிறார்கள்.
தமிழ் டிவி தொடர்கள்
தமிழ் டிவி தொடர்கள் அன்றைய படப்பிடிப்பின் காலையில்தான் திரைக்கதை – உரையாடலை முடிவு செய்கிறார்கள். இதற்கு டிஆர்பி ரேட்டிங், நடிகர்களின் பங்கேற்பு பிரச்சினைகள், கதையில் தொய்வு, கொரோனா இன்டோர், அவுட்டோர் சாத்தியங்கள் என்று பல தடைகள் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால் படப்பிடிப்பின் வசதியை வைத்து ஸ்க்ரிப்டை முடிவு செய்கிறார்கள். இவர்கள் இவ்வளவு கன்னாபின்னாவென்று அராஜகமாக முடிவு செய்வதற்கு தோதாக பார்வையாளர் ரசனை இருக்கிறது. ஒரு கதா பாத்திரமோ இல்லை நான்கைந்து கதாபாத்திரங்களோ சிரிப்பு, துரோகம், சதி, கோபம் என்று மேலோட்டமான நான்கைந்து உணர்ச்சிகளை மாற்றி மாற்றி காண்பித்து காலத்தை ஓட்டி நம் நேரத்தை கொல்கிறார்கள். இது தமழ் டிவி தொடர் ஃபார்முலா. தற்போது ஓடிடி வந்த பிறகு இதில் சில மேம்பாடுகள், முன்னேற்றங்கள் வரலாம். காத்திருப்போம்.
Marseille
மணி ஹெயஸ்ட்டின் பிரச்சினை வேறு. அது ஒரு த்ரில்லர் என்ற வகையிலும், உலக அளவில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்ப்பந்த்த்திலும் இருக்கிறது. அதனால் இங்கும் கதை, திரைக்கதை, உரையடால் எழுதும் குழுவினர் படப்பிடிப்பின் கடைசி நேரம் வரை ஸ்க்கிரிப்டை மாற்றுகிறார்கள். அந்த மாற்றம் கதை செல்லும் போக்கை வைத்தும், கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்களை வைத்தும் தனது திசை வழியை தீர்மானிக்கிறது. அடிப்படையில் பார்வையாளரை கட்டிப்போடும் முடிச்சுக்கள், திருப்பங்களை அலெக்ஸ் பினா தலைமையிலான கதைக்குழுவினர் தீர்மானிக்கின்றனர்.
மணி ஹெய்ஸ்ட்டின் கடைசி பாகத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அலிசியாவுக்கு புரபசர் பிரவசம் பார்ப்பார். அங்கே ஸ்பெயின் வங்கியிலோ இராணுவம் துப்பாக்கி சூடுநடத்தும். இதை மாறி மாறி எடிட் செய்து காட்டும் போது கதையின் உணர்ச்சி அங்காங்கே அலைபாய்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே பார்வையாளர்கள் தீர்மானிக்கின்றனர்.
தற்செயலாக நடக்கும் கதை திருப்பமெல்லாம் பார்வையாளர்களின் தத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுகின்றன. இவை கதைக்கு வெளியே நடக்கும் காமடிகள். சான்றாக மூன்றாவது பாகத்தில் புரபசர் அவசர காலத்தில் அறுவை சிகிச்சை எடுப்பது குறித்து வகுப்பு எடுக்கிறார். அப்போது இறந்த பன்றி உடலை வைத்து நடைமுறை சோதனையைக் கற்றுக் கொடுக்கிறார்.
அதில் மார்செய்ல் எனப்படும் பிரெஞ்சு நகரத்தினை பெயர் கொண்ட அடியாள் பாத்திரம் அந்த பன்றியை அறுக்க மாட்டேன் என்பான். மனிதர்களை குறித்துக் கொடுத்தால் சுட்டுக் கொல்லும் அடியாள் தன்னை விலங்குரிமை ஆர்வலர் என்பதால் பன்றியை அறுக்கமாட்டேன் என்பான். கதைக்குழு இதை கதை சீரியசாக நடக்கும் போது ஒரு காமடி இருக்கட்டுமே என்று நினைத்து வைத்தது. ஆனால் பார்வையாளர்களோ இது குறித்து மாபெரும் மனித உரிமை தத்துவ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரு கொலை செய்யும் அடியாளுக்கு விலங்குரிமை ஆர்வம் இருக்கக் கூடாதா என்றெல்லாம் பேசுகிறார்கள். கதைக்குழுவோ இப்படி ஓரு விவாதம் வந்த பிறகு அந்த பாத்திரத்திற்கு ஒரு ஃபிளாஷ் பேக் வைத்து தனது நாய் மற்றும் இதர விலங்குகளோடு அன்னியோமாக இருக்கும் காட்சியை மார்செய்லுக்கு வைக்கிறார்கள்.
Professor and Nairobi
மணி ஹெய்ஸ்ட்டின் கதாபாத்திரங்கள் ஒரு படித்தானவை அல்ல. அவை அனைவராலும் இணைத்துப் பார்த்து ரசிக்கக்கூடிய ஒன்று. அமெரிக்க கொள்ளைப் படங்களில் இத்தகைய இணைப்பை பார்க்க முடியாது. அவர்கள் தொழில் முறை திருடர்கள் மற்றும் கச்சிதமான தொழில் நேர்த்தியைக் கொண்டிருப்பார்கள். மணி ஹெய்ஸ்ட்டில் அது தலைகீழாக இருக்கிறது.
இங்கு எல்லா பாத்திரங்களையும் காணலாம். அதே நேரம் பொது மக்களின் அரசியல், மனிதநேய பார்வைகளைக் கொண்டு இந்த பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களை நெருக்கமாக்கும் மணி ஹெய்ஸ்ட்டின் ரகசியம் இங்கேதான் இருக்கிறது.
ஆரம்பத்திலிருந்து நைரோபி குழுவின் நம்பகமான உறுப்பினர். பணம் அச்சிடலை மேற்பாற்வையிடும் போது அந்தப்பிரிவு தலைவரிடம் நான்தான் சிறப்பான பாஸ் என்கிறாள். இங்கிலாந்து தூதரின் மகளான அலிசன் பார்க்கர் பிணையக் கைதிகளில் முக்கியமானவள். அவள் தனது வகுப்பு நண்பர்களால் கேலி செய்யப்படும் போது அவளுக்கு நைரோபி உதவுகிறாள். ஹெல்சிங்கி ஓரினச் சேர்கையாளராக இருந்தாலும் அவனை தெரிந்தே உண்மையாக காதலிக்கிறாள் நைரோபி. புரபசர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பினும் அவர் தனது குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என்று கூறுகிறாள். நைரோபியின் மரணம் ரசிகர்களை உருகச் செய்திருக்கிறது.
புரபசர் சூப்பர் மேன் போன்று போற்றப்பட்டாலும் அவரால் பறக்கவோ, அதிரடி ஆக்சனில் இறங்கவோ முடியாது. அவருடைய பெருந்தன்மையான அறிவுத் திறன், ஒரு செஸ் கிராண்ட்மாஸ்டர் போல இரண்டு திருட்டுகளின் பிரச்சினைகளை அணுகுவது, எதிரிகளின் சாத்தியமான நகர்வை கண்டுபிடிக்குமளவு ஆழ்ந்து யோசிப்பது, படிப்பது போன்றவற்றை செய்கிறார். தனது அராஜகமான சகோதரர் பெர்லினைப் போன்றில்லாமல் எதனையும் நிதானமாக அணுகுகிறார். கடைசிக் காட்சியில் போலீசு வந்த போது கூட இனி யாரும் மரணமடையக் கூடாது என்று சரணடைகிறார். எனவே புரபசரோடு கொஞ்சம் நிதானமான அறிவுத் திறன் உள்ளவர்கள் இயல்பாக ஒன்றுவார்கள்.
Tokyo
டோக்கியோதான் இந்த தொடரின் கதை சொல்லி. ஆரம்பத்தில் அவள் போலீசிடமிருந்து தப்பிப்பதற்கு புரபசர் உதவி செய்து குழுவில் சேர்க்கிறார். வாய்ப்பு கிடைத்தால் முதலில் சுடுபவளாக இருந்தாலும் தேவையான நேரத்தில் அவள் கூலாக விசயங்களை அணுகுகிறாள். வாழ்வை பெரும் சக்தியுடன் சந்திப்பதே அவளது பலமும் பலவீனமும். அவள் கவனமாக இருக்கும் போது யாரும் அவளை வெல்ல முடியாது. உணர்ச்சிவசப்படும் போது அவளது கூட்டாளிகள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் மாஸ்கோ கொல்லப்படுகிறார். சில நேரம் பிரச்சினை நெருக்கடி வரும்போது புரபசரைத் திட்டுகிறாள். இறுதியில் குழுவிற்காக தன்னைத் தியாகம் செய்கிறாள். ரியோவுடனான காதலாக இருக்கட்டும், அவளது முதல் காதலனோடு செலவிட்ட ப்ளாஷ் பேக்காக இருக்கட்டும் டோக்கியோ அக்கணத்தில் வாழ்வை அனுபவிக்கின்ற அஞ்சாத பெண்மணி. பிறகு ஏன் டோக்கியோ உங்களுக்கு பிடிக்காது?
இப்படி டென்வர், ரியோ, மணிலா, என்று அனைத்து பாத்திரங்களும் யாரோ ஒரு ரசிகரை பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள். ரியோவை ஐ.டி துறை போன்றவற்றில் பணிபுரிவோரும், டென்வரை தொழிலாளி போன்று வேலை செய்வோரும் விரும்பக் கூடும். ஹெல்சிங்கி தனது உடல்பலத்துடன் மிகவும் நம்பிக்கையாகச் சொன்னதைச் செய்யும் விசுவாசமான நபராக இருக்கிறான். தனது சகோதர்ர் ஓஸ்லோ மூளைச் சாவு அடைந்த உடன் அவனைக் கொல்வதற்கும் தயாராக இருக்கிறான். சாதாரண மனிதர்கள் தம்மை ஹெல்சிங்கியுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பார்கள்.
இன்னும் வில்லனாக இருப்பவர்கள், கொடூரமான போலீஸ் கமாண்டோ, நிதானமான போலீசு அதிகாரி,காமடியான போலீசு அதிகாரி, மணி ஹெய்ஸ்ட் குழுவின் நேரடி தலைவர்களாக இருக்கும் பெர்லின், பாலெர்மோ போன்ற கறாரான தலைவர்கள் என்று மணி ஹெய்ஸ்ட் விதவிதமான பாத்திரங்களைக் கொண்டிருக்கின்றது. அதனால் அதிரடிக் காட்சிகளும், எமோஷனல் காட்சிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து பயணிக்கின்றன.
Money Heist
மணி ஹெய்ஸ்ட் யதார்த்தத்தில் நடக்க சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் மக்கள் தமது மூளையைக் கழட்டி வைத்து விட்டு இந்த கதை மாந்தர்களோடு பயணிக்கிறார்கள். அதில் பல அவர்களது வாழ்க்கையோடு சேர்ந்திருக்கிறது.
வருங்காலத்தில் மணி ஹெய்ஸ்ட்டின் வெற்றி குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் மண்டையை குடைத்துக் கொண்டு ஆய்வு செய்வார்கள். ரசிகர்களோ தமது வாழ்விலிருந்து இயல்பாக ரசிப்பதை செய்வார்கள். நெட்பிளிக்ஸ் இந்த காம்பினேஷனில் பிரபலமாகியிருக்கிறது. நடிகர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று, இனி மணி ஹெய்ஸட் போன்ற கொள்ளைப் படம் எடுப்பவர்களின் நிலை அதோ கதிதான். அவர்கள் எளிதில் மணி ஹெய்ஸ்ட்டை தாண்டிச் செல்ல முடியாது.
பகுதி இரண்டை படிக்க...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust