விஜய் நடிப்பில் இன்று வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய், “சும்மா எல்லாத்தையும் இந்தியில விளக்க முடியாது. வேணும்னா தமிழ் கத்து கிட்டு வா” என ஒரு வசனத்தில் பேசியுள்ளார். இந்த வசனத்தின் மூலம் அவர் இந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் பேசுவதாகக் கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ரா ஏஜென்டாக நடித்திருக்கிறார். Raw Agent என்பவர் அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கவனித்தல், உளவுத்துறையை ஆய்வு செய்தல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்தல், உள்நாட்டுக் கொள்கைகள் உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்குதல் போன்ற வேலைகளைச் செய்பவர்.
விஜய் மாலில் மாட்டிக்கொள்ளும் போது தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது தீவிரவாதிகளுக்கு இந்தியில் விளக்கம் சொல்லி ஓய்ந்து விட்டு “போய் தமிழ் கத்துகிட்டு வா” என விஜய் பேசும் வசனம் தான் இப்போது பேச்சு பொருளாகியிருக்கிறது.
விஜய்யின் அனைத்து படங்களிலும் குறைந்தபட்ச அரசியல் பேசப்படுவது வழக்கம். ஆடியோ லாஞ்ச் மேடைகளில் சொல்லவே வேண்டாம். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததால் அரசியல் தவிர்க்கப்பட்டது. சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இயக்குநர் நெல்சன் “எனக்கு அரசியல் தெரியாதுங்க” எனக் கூறியதால் பீஸ்ட்டில் அரசியல் இருக்காது என ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போதைய அரசியல் ட்ரெண்டையும் பிடித்து ஒரு வசனத்தில் அரசியல் பேசியிருக்கிறார் விஜய் என நெட்டிசன்கள் சலசலக்கின்றனர்.
ட்ரெய்லரில் விஜய் காவி நிற திரையைக் கிழிக்கும் காட்சி அரசியல் குறியிடு எனவும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.