

பூணூல்
கர்நாடக அரசு அறிவித்த ஹிஜாப் தடை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிஜாப் அணிந்ததற்குச் சிலர் எதிர்வினையாற்றியும் வருகின்றனர்.. அந்த வகையில், அவர்களுக்குப் பதிலடி தரும் விதமாகப் பூணூல் அறுப்பு போராட்டம் இன்று நடத்தப்படும் என்று இந்தியத் தேசிய லீக் கட்சி உள்ளிட்ட சில அமைப்பினர் அறிவித்துள்ளன. ஹிஜாப் அணியக்கூடாது என்று வலியுறுத்துபவர்களை எதிர்க்கவும், இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் வலி என்ன என்பதைப் பிறருக்கு உணர்த்தவும்தான் இந்த பூணூல் அறுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்தை, தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டித்துள்ளது.
Hijab
இது தொடர்பாக மாநில தலைவர் நா. ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் "காஞ்சி சங்கர மடத்திலிருந்து கோட்சேயின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டம் தொடர்வோம்" என்று தெரிவித்துள்ளதை வன்மையான கண்டிக்கிறோம்.
ஹிஜாப் பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் மாநில அரசு தொடர்புடையதே இன்றி எந்த ஒரு சமூகத்திற்குத் தொடர்புடையதும் அல்ல.
இவ்விவகாரத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத பிராமணர்களையும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் குறிவைத்துத் தாக்குவோம் என்று அறைகூவலாகச் சொல்லுவதை கண்டிக்கிறோம்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் போற்றுதற்குரிய காஞ்சி சங்கராசார்யருக்கும். சங்கர மடத்திற்கும். பூணூல் அணிவோர்களுக்கும் அவர்களின் நிறுவனங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.