![Earth](http://media.assettype.com/newssensetn%2F2022-08%2F585f9afc-7b39-4b5e-a972-02c22aed5bd4%2FHero_Image__17_.png?rect=0%2C0%2C976%2C549&w=480&auto=format%2Ccompress&fit=max)
மனிதர்கள் பூமியை தங்களுக்கு மட்டுமே சொந்தமான இடமெனக் கருதி, கொள்ளையடிக்கத் தொடங்கியதிலிருந்து, பல்வேறு சூழலியலாளர்களும் அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அதற்கு சமீபத்தில் அமேசான் காடுகளை எரித்தது குறித்த விஷயங்களைக் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
என்னதான் நம்மிடம் கோடிக் கணக்கில் காசு பணம் இருந்தாலும் சுவாசிக்க நல்ல காற்று இல்லை, சாப்பிட நல்ல ஆரோக்கியமான உணவு இல்லை, மனிதர்கள் வாழத்தகுந்தாற் போன்ற சுற்றுச்சூழல் இல்லை என்றால், மனித இனம் கண்ட அறிவியல் வளர்ச்சி அனைத்தும் வீண்தான்.
மனிதர்கள் இந்த பூமியையும் இயற்கையையும் தங்கள் இஷ்டத்துக்கு வளைக்கத் தொடங்கிய பிறகும், ஒருகட்டத்தில் உணவு இல்லாமை, பூமியால் மனிதர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் என பல விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
கடந்த 18ஆம் நூற்றாண்டில் தாமல் மல்துஸ் (Thomas Malthus) என்கிற தத்துவவியல் அறிஞர் சில கசப்பான விஷயங்களைத் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். மனித இனத்தின் எதிர்காலம் அத்தனை சிறப்பாக இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.
மனிதர்கள் தங்கள் இனத்தை பெருக்க வேண்டும் என்கிற தணிக்க முடியாத ஆசையோடு இருப்பதால், ஒரு கட்டத்தில் பூமியால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கும், பூமியில் உள்ள எல்லா வளங்களையும் மனித இனம் சாப்பிட்டு செரித்து, கடுமையான பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு இறந்து போகும் என தாமல் மல்துஸ் கூறினார். இந்த தத்துவவியல் அறிஞர் சொல்வது சரியா..?
தாமல் மல்துஸ் சொல்வது உண்மையாகவே நடக்கும் என ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, எத்தனை கோடி மக்களை இந்த பூமியால் தாங்க முடியும்? என்கிற கேள்வியை நாம் அடுத்து கேட்க வேண்டியுள்ளது.
பூமியால் எத்தனை கோடி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்று கூட அந்த கேள்வியைக் கேட்கலாம். வேறு ஒரு வகையில் கேட்க வேண்டுமானால், மனித இனம் எப்போது பூமி கோளின் எல்லையைத் தாண்டும் என்றும் கேட்கலாம்.
பூமியால் 900 முதல் 1000 கோடி மனிதர்களைச் சுமக்க முடியும் என பல்வேறு அறிஞர்கள் பல ஊடகங்களிடம், பல கணிப்புகளின் அடிப்படையில் கூறியுள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சோசியோ பயாலஜிஸ்ட் எட்வர்ட் ஓ வில்சன் அப்பேற்பட்ட அறிஞர்களில் ஒருவர். இவர் 'தி ஃப்யூச்சர் ஆப் லைஃப்' என்கிற பெயரில் ஒரு புத்தகத்தை 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பூமியின் உயிர்கோள வளிமண்டலத்தை நம்மால் மாற்றியமைக்கவோ, நீட்டிக்கவோ முடியாது. அது இப்போது எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்குத் தான் இருக்கும் என குறிப்பிடுகிறார்.
பூமிப் பந்தில் நன்னீர் அளவுக்கு குறைவாகவே உள்ளது. அதே போல பூமி கோளில் எவ்வளவு உணவு உற்பத்தி செய்ய முடியும் என்கிற கேள்விக்கும் ஏறத்தாழ ஒரு குறிப்பிட்ட அளவைத் தான் விடையாகக் கூற முடியும்.
ஒருவாதத்துக்கு பூமியில் வாழும் மனிதர்கள் அனைவரும் சைவ உணவைச் சாப்பிடக் கூடியவர்களாக மாறிவிட்டால், உலகில் உள்ள எல்லா கால்நடைகளுக்கும் உணவு வழங்க முடியாது என்கிறார்.இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் கூறியுள்ளார்.
உலகில் சுமார் 1.4 பில்லியன் ஹெக்டேர் நிலபரப்பு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏறத்தாழ 2 பில்லியன் டன் தானியங்களை ஆண்டு ஒன்றுக்கு மகசூலாகக் கிடைக்கலாம்.
இதைக் கொண்டு 10 பில்லியன் மனிதர்கள் மற்றும் 2.5 பில்லியன் கால்நடைகளுக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்கிறார் எட்வர்ட் ஓ வில்சன். எனவே உணவு உற்பத்தியைப் பொறுத்தவரையில் பூமியின் அதிகபட்ச மக்கள் கொள்ளவு 10 பில்லியன் என்கிறார்.
ஆனால் இது எதார்த்தத்தில் நிச்சயம் சாத்தியப்படாத ஒன்று. உலகில் பல மக்கள் பல வகையான உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்தியா என்கிற ஒற்றை நாட்டை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான உணவு வகைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சரி, மீண்டும் மக்கள் தொகை பிரச்சனைக்குத் திரும்புவோம்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாபுலேஷன் பயாலஜிஸ்டான ஜோயல் கோஹென் மக்கள் தொகை எண்ணிக்கையை பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளும் இணைந்து தீர்மானிப்பதாகக் கூறுகிறார்.
உதாரணத்துக்கு நைட்ரஜன் சுழற்சி, பூமியில் இருக்கும் பாஸ்பரஸ், வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் அளவு போன்றவைகளை அவர் குறிப்பிடுகிறார். உண்மையில் எப்போது, எந்த எண்ணிக்கை அளவில் மக்கள் தொகை எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என யாருக்கும் தெரியாது என்கிறார் ஜோயல் கோஹென்.
மனிதர்களின் எண்ணிக்கை வரும் 2050-ல் 9 பில்லியனைத் தொடலாம், 2100ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை 10 பில்லியனைத் தொடலாம் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவு சில ஆண்டுகளுக்கு முன் தன் மதிப்பீடுகளில் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையைத் தொடுவதற்குள் பூமியிலோ அல்லது மனித இனத்துக்குள்ளேயே சில திருப்பங்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
1950ஆம் ஆண்டு முதல் 230 நாடுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, கருவுறுதல் விகிதம் (Fertility Rate) கணிசமாகக் குறைந்து வருகிறது என முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் மதிப்பீடு பிரிவின் முதன்மை அதிகாரி என்பிசி செய்தி தளத்திடம் 2011 காலகட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
ஒரு பெண் 2.1 குழந்தையைப் பெற்றெடுத்தால் தான் இருக்கும் மக்கள் தொகை அப்படியே தொடரும். ஆனால் உலக அளவிலேயே பொதுவாகக் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
ஆக மக்கள் தொகை எண்ணிக்கை பூமியை அழிக்கும் அளவுக்குச் செல்வதற்கு முன், தன்னிச்சையாகவே பல்வேறு காரணங்களால் சமன் செய்யப்பட்டுவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust