நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், அதிகாரிகள் என பலரும் தங்களின் வார்டுகளில் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின், மனைவியுடன் வந்து, வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசுகையில், ``நான் எனது ஜனநாயக கடமையை செய்திருக்கிறேன். மக்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைகிறது. எனவே மக்கள் கட்டாயம் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும்” என்றார்.
செய்தியாளர்கள் கோவையில் நேற்று நடைபெற்ற போராட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு, ``கோவையில் அதிமுகவினர் சொல்வது போல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. தோல்வி பயத்தில் இது போல் பேசி வருகிறார்கள். தோல்விக்கான காரணத்தை சொல்ல அவர்கள் நாடகம் நடத்துகிறார்கள். அவர்கள் ராணுவம் வர வேண்டும் என கேட்கிறார்கள். ராணுவம் வரும் அளவுக்கு இங்கு எதுவும் நடைபெறவில்லை” என்றார்.