சீனா: கொரோனாவால் எகிறும் மரணங்கள்; சூடுபிடிக்கும் சவப்பெட்டி வியாபாரம் - என்ன நடக்கிறது?

சீன கிராமங்களில் ஒருவருடைய வீட்டில் ஒரு பெரியவர் உயிரிழந்தால், அவர்களுடைய உடலை புதைத்த இடத்தில் ஒரு மண் குவியலை போல செய்து, அதன் மீது ஒரு கொடியை நடுவர். அப்படி சீன கிராமங்களில் பயணிக்கும் போது பல மண் குவியல்களையும் கொடிகளையும் பார்க்க முடிகிறது
China Covid: Coffins sell out as rural losses mount
China Covid: Coffins sell out as rural losses mount Twitter
Published on

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்ஷி மாகாணம் ஷின்சோ (Xinzhou) நகரத்தில் சவப் பெட்டிகள் செய்யும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

சவப் பெட்டிகளை தயாரிப்பதற்கான மரங்கள் வந்து இறங்கி கொண்டே இருக்கின்றன. அதை அறுத்து சவப்பெட்டி வடிவத்தில் மாற்றி அதன் மீது அலங்கார வேலைப்பாடுகளை எல்லாம் அந்த நகரத்தில் உள்ள ஊழியர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக சவப்பெட்டி செய்யும் பணிகளுக்கு ஓய்வு கொடுக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து வேலை செய்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

சில நேரங்களில் ஒட்டுமொத்த சவப்பெட்டிகளும் விற்றுத் தீர்ந்து விடும் என ஒரு சீன கிராமவாசி கூறுகிறார். உயிரிழந்த மனிதர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் துறையில் இருப்பவர்கள் தற்போது கொஞ்சம் காசு பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் மிகப்பெரிய பிரச்னையாக வெடித்த போதில் இருந்து, சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது சீனாவின் பல்வேறு பெருநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து, மரணங்கள் தொடர்பான விவாதம் மீண்டும் தற்போது வலுத்திருக்கிறது.

சீனாவில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு (கடந்த டிசம்பர் மாதம்) சீனாவில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 80% பேர் அதாவது சுமார் 100 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முன்னணி நோய் தொற்றியல் நிபுணர் வூ சுன்யோ (Wu Zunyou) பிபிசியிடம் கூறியுள்ளார்.

கடந்த வார இறுதியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 13,000 பேர் உயிரிழந்திருப்பதாக சீனா குறிப்பிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இந்த உயிரிழப்புகள் அனைத்தும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே. சீனாவின் கிராமப்புறங்களில் அத்தனை பெரிய அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லாததால், வீட்டிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்கிறது பிபிசி வலைதளம். சொல்லப் போனால் சீனாவின் கிராமப்புறங்களில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமான மதிப்பீடுகள் ஏதுமில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சவப்பெட்டிகள் செய்வதை தொடர்ந்து, சீனாவில் ஒருவர் உயிரிழந்த பிறகு அவரவர் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பான பல பொருட்களின் தேவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதாக சீன கிராமவாசிகள் சில சர்வதேச ஊடகங்களிடம் கூறியுள்ளனர். இதில் காகித அலங்காரங்கள் தொடங்கி, புத்தர் படங்கள் வரை அனைத்தும் அடக்கம்.

ஷான்ஷி மாகாணத்தில் இறுதி அஞ்சலி செலுத்துவது தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வந்த பலரும் இதே கருத்தை கூறுகிறார்கள். இவை அனைத்தும், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதி செய்கிறது.

பொதுவாக நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வருபவர்கள் உடலளவில் தளர்ந்து இருப்பர் அல்லது பலவீனமாக இருப்பார். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் போது அவர்களுடைய உடலால் அதை எதிர் கொள்ள முடியாமல் இறந்து போகிறார்கள்.

அப்படித்தான், கடந்த பல ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வந்த வாங் பெய்வை (Wang Peiwei) அவர்களின் அண்ணி, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து காலமானார்.

அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, அவர்களுடைய வீட்டின் முற்றம் முழுக்க அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீன வழக்கங்களின் படி அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

China Covid: Coffins sell out as rural losses mount
சீனா - தைவான் பிரச்னை: ஏன்...? எதனால்? - விரிவான விளக்கம்

இதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளுக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்து இருப்பதால், அப்பணிகளுக்கு கூடுதலாக பணத்தை செலவழிக்க வேண்டி இருப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். தங்கள் அன்பிற்குரியவர்களுக்காக, கொஞ்சம் அதிக பணம் செலவழிப்பதை பெரிதாகக் கருதுவதில்லை.

சீனாவில் நிலவை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டு கொண்டாட்டம் மிக விமர்சையாக கொண்டாடப்படும். இந்த காலகட்டத்தில் பல ஊர்களுக்கு சென்று வேலை பார்த்து வரும், தொழில் செய்து வரும் சீன இளைஞர்கள், தங்களுடைய கிராமங்களுக்கு சென்று உற்றார் உறவினர்களோடு கொண்டாடுவர். தற்போது கிராமங்களில் மிகப்பெரிய அளவில் வயதானவர்கள் மட்டுமே தங்கி இருக்கிறார்கள்.

எனவே இந்த பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்கள் பயணங்களை மேற்கொள்வது, கொரோனா வைரஸை மேலும் அதிகமாக பரவச் செய்யும், சீனாவின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் இதன் தாக்கம் ஏற்படலாம் என்கிற கவலை பல தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.

சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் பெரியவர்கள் இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றால், சீனாவின் பல்வேறு நகரங்களில் வாழ்பவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கோ வீட்டுக்கோ இந்த ஆண்டு செல்ல வேண்டாம் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களோ தங்களுடைய அன்பிற்குரியவர்களைப் பார்ப்பதில் தடை ஒன்றும் இல்லை, பயம் ஏதும் இல்லை என்கிற மனநிலையிலேயே இருக்கிறார்கள். என்ன தான் ஒளிந்து ஓடினாலும் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது, எங்களில் பலருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது, நாங்கள் இப்போதும் நன்றாக தான் இருக்கிறோம் என்கிறார்கள் கிராமவாசிகள்.

டாங் யங்மிங் என்கிற மருத்துவர், சீனாவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். தன்னுடைய கிராமத்தில் உள்ள 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார் அந்த மருத்துவர்.

கிராமவாசிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் அனைவரும் எங்களிடம் தான் வருகிறார்கள். காரணம் இந்த கிராமத்திலேயே எங்கள் கிளினிக் மட்டும் தான் இருக்கிறது என்றும் பிபிசி வலைதளத்திடம் கூறியுள்ளார்.

கிராமத்தில் உயிரிழந்த பலருக்கும் ஏற்கனவே சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த மருத்துவர் கூறியுள்ளார். கிராமங்களில் உள்ள குறைவான மருந்து விநியோகத்தை மிக கச்சிதமாக பயன்படுத்த, ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்றால், அவருக்கு எத்தனை நாட்களுக்கு மருந்து தேவையோ அத்தனை நாட்களுக்கு மட்டுமே மருந்துகளை வழங்கி உள்ளனர்.

இருப்பினும் சில ஆயிரம் பேர் மட்டுமே வாழும் தன்னுடைய கிராமத்திலேயே 40-க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்திய கொரோனா வைரஸ் பெருந்தொற்று அலையில் உயிரிழந்திருப்பதாக மருத்துவர் டாங் கூறியுள்ளார்.

சீன கிராமங்களில் ஒருவருடைய வீட்டில் ஒரு பெரியவர் உயிரிழந்தால், அவர்களுடைய உடலை புதைத்த இடத்தில் ஒரு மண் குவியலை போல செய்து, அதன் மீது ஒரு கொடியை நடுவர். அப்படி சீன கிராமங்களில் பயணிக்கும் போது பல மண் குவியல்களையும் கொடிகளையும் பார்க்க முடிகிறது என பிபிசி வலைதள கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இனியாவது சீனா, உண்மையான கொரோனா மரணங்கள் தொடர்பான தரவுகளை வெளிப்படுத்துமா..? வெளிநாடுகளிடமிருந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளுமா..? சீன அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

China Covid: Coffins sell out as rural losses mount
சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com