துருக்கி நிலநடுக்கம்: சரிந்த ஊழல் கட்டடங்கள், கைவிடப்பட்ட மக்கள் - மன்னிப்பு கேட்ட அதிபர்
துருக்கி நாட்டில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இதுவரை சுமார் 50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என பல்வேறு சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுபோக ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்றும் செய்திகள் வெளியாயின.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பேரிடர் மேலாண்மைப் படையினர் எதிர்பார்த்த அளவுக்கு துரிதமாக செயல்பட முடியாமல் போனதற்கு, துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன், தன் நாட்டு மக்களிடம் திங்கட்கிழமை மன்னிப்பு கேட்டார்.
![துருக்கி நிலநடுக்கம்](http://media.assettype.com/newssensetn%2F2023-02%2Fa8b853d4-1edf-447f-bb1c-57f763ade0e8%2Fbe205dcb-1994-41b4-a7ac-ea6aa91d6c1b.png?w=640&auto=format%2Ccompress)
மோசமான இயற்கைப் பேரிடரிடரைத் தொடர்ந்து, மோசமான வானிலை, சிதலமடைந்த கட்டமைப்புகள் காரணமாக எங்களால் திட்டமிட்டபடி மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட அதியமான் மாகாணத்தில் பாதிப்புகளையும், மீட்புப் பணிகளையும் பார்வையிடும் போது கூறினார் எர்தோகன். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகள், மருத்துவ மையங்கள், பார்க்குகள் என அனைத்தும் மீண்டும் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார் அதிபர் எர்தோகன்.
பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, இதுவரை நான்கு நிலநடுக்கங்களும், 45 முறைக்கு மேல் 5 முதல் 6 ரிக்டர் அளவுக்கான நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக துருக்கி நாட்டின் பேரிடர் & அவசர மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இப்படி தொடர்ந்து நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது மிகவும் அரிதானது என அந்த அமைப்பின் தலைவர் ஆர்ஹன் ததர் கூறியுள்ளார்.
பிப்ரவரி முதல் வாரத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரங்களாகியும், மீட்புப் படையினரோ, காவல்துறையினரோ, மருத்துவ உதவியாளர்களோ, பேரிடர் மேலாண்மைப் படையினரோ களத்தில் தென்படவில்லை என அதியமான் பகுதியைச் சேர்ந்த மெஹ்மெத் யில்டிரிம் என்பவர் ஏ எஃப் பி முகமையிடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தன் வருத்தத்தையும் கோபத்தையும் பதிவு செய்திருந்தார்.
![](http://media.assettype.com/newssensetn%2F2023-03%2F2e6247a8-36ac-41f3-8f41-ea4aadfd5df2%2FHero_Image__82_.png?w=640&auto=format%2Ccompress)
அரசாங்கமோ, மாகாண அரசோ, காவல்துறையோ, ராணுவத்தினரோ எவரும் இல்லை. இது வெட்கக் கேடானது. எங்களை நாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு எங்களைத் தள்ளிவிட்டீர்கள் என்று குமுறினார்.
இந்த பாதிப்பால் சுமார் 15 லட்சம் மக்கள் வீடு வாசல் அனைத்தையும் இழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோருக்கு தங்க இடமும், அடிப்படைச் சுகாதாரத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. நிலநடுக்க பாதிப்புகளில் சிக்காமல் உயிர் பிழைத்தவர்களுக்குக் கூட போதிய டென்டுகள் அமைக்கப்படவில்லை.
நிலநடுக்க பாதிப்புகளைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படாதது & மக்களுக்குப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், துருக்கி அரசு மீதே அந்நாட்டு மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம் : குர்து இன மக்களை அழிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டதா? உண்மை என்ன?
![](http://media.assettype.com/newssensetn%2F2023-03%2Fcec79ed8-786d-4bb8-a49a-a567d680c3b0%2FHero_Image__83_.png?w=640&auto=format%2Ccompress)
பாதிப்புக்கள் & சேதாரங்கள்
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு துருக்கி நாட்டில் சுமார் 1.60 லட்சம்கட்டிடங்கள் (இதில் சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கலாம்) தரைமட்டமாகியுள்ளன.
கட்டிடங்கள் சேதமடைந்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரர்கள், வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் வெளியாகியுள்ளன.
துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என உலக வங்கி கூறியுள்ளது. இதை மீண்டும் கட்டமைக்க, அதைவிட இரு மடங்கு செலவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது உலக வங்கி.
இதில் கவனிக்கப்பட வேண்டிய வருத்தமான விஷயம் என்னவென்றால், அரசு நிர்வாகத்தில் மலிந்திருக்கும் ஊழல் காரணமாக, பல்வேறு புதிய கட்டிடங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை என கடந்த பல ஆண்டுகளாக நிபுணர்கள் எச்சரித்து வந்துள்ளனர். அப்போது துருக்கி அரசு அதை ஒரு முக்கியப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளவில்லை.
வரும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துருக்கியில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக துருக்கி நாட்டின் அதிபராக இருக்கும் எர்தோகன், இந்த முறையும் தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். மக்கள் நிலநடுக்க பிரச்சனைகளை மறந்து மீண்டும் எர்தோகனுக்கே வாய்ப்பளிப்பார்களா..?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust