

உலகின் மிகப் பிரபலமான குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஷாம்பூ... போன்ற பொருட்களைத் தயாரிக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் என்கிற அமெரிக்க நிறுவனம், அடுத்த ஆண்டிலிருந்து உலகம் முழுக்க தன் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்த உள்ளதாக பிபிசி வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளாக அமெரிக்கா & கனடாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் விற்கப்படுவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
2020 காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தங்கள் நிறுவன பேபி பவுடருக்கான தேவை, தவறான செய்திகள் பரவியதன் காரணமாகக் குறைந்ததாகவும், ஆகையால்தான் அங்கு விற்பனையை நிறுத்தியதாகவும் ஜான்சன் & ஜான்சன் கூறியது. அப்போது பிரிட்டன் உட்பட மற்ற அனைத்து உலக நாடுகளில் தொடர்ந்து விற்கப்படும் என்றும் கூறியிருந்தது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கலந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்துவதால் தங்களுக்குக் கருப்பை புற்றுநோய் வருவதாக ஆயிரக்கணக்கான பெண்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்திருந்ததும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜான்சன் & ஜான்சன் நிறுவனமோ தொடர்ந்து தங்கள் பவுடரில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறி வருகிறது. தங்கள் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர் பாதுகாப்பானது என்கிற நிலைப்பாட்டில் வலுவாக நிற்கிறது ஜான்சன் & ஜான்சன்.
உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்கள் தங்களின் குழந்தைகளுக்கான பவுடரில் சோளமாவு (Corn Starch) கலந்திருப்பதாகவும், அவை தொடர்ந்து உலகின் பல நாடுகளில் விற்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது ஜான்சன் & ஜான்சன்.
மேலும் தங்கள் பவுடர் பொருட்களில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்றும், தங்கள் பவுடர் பொருளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படாது என்றும் கூறி வருகிறது.
டால்க் (Talc) என்கிற ஒருவகையான தாதுப் பொருள் பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த டால்க் என்கிற தாதுப் பொருளும், ஆஸ்பெஸ்டாஸ் என்கிற பொருளும் பார்ப்பதற்கு ஒரே போலத் தான் இருக்கும். ஆனால் ஆஸ்பெஸ்டாஸைப் பயன்படுத்தினால் அது புற்றுநோயை உண்டாக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு ராய்டர்ஸ் செய்தி முகமை மேற்கொண்ட ஆய்வில், பல ஆண்டு காலமாக தங்கள் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலக்கப்பட்டு வருவது ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்குத் தெரியும் எனச் செய்தி வெளியிட்டது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பதிவுகள், விசாரணை சாட்சியங்கள் எனப் பல ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது குறைந்தபட்சமாக 1971ஆம் ஆண்டிலிருந்து 2000களின் தொடக்கக் காலம் வரை டால்கம் பவுடரில் சிறிய அளவில் ஆஸ்பெஸ்டாஸ் இருந்தது சில பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆதாரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வாத பிரதிவாதங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை அல்லது செட்டில்மென்ட் தொகை மட்டுமே சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது. இதில் 22 பெண்கள் சேர்ந்து தொடுத்த வழக்குக்கு மட்டும் 2 பில்லியன் டாலர் வழங்க வேண்டி வந்தது.
இந்த தலைவலியே வேண்டாம், பேசாமல் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் வியாபாரத்தை நிறுத்திவிடலாம் எனக் கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவன பங்குதாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாகத் தான் இனி ஜான்சன் & ஜான்சன் பேபி டால்கம் பவுடர் தயாரிப்பே நிறுத்தப்பட உள்ளது.
கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக விற்கப்பட்டு வந்த நீண்ட வணிக பாரம்பரியம் கொண்ட ஒரு பொருள், மக்கள் மத்தியில் பெரும்புகழ் கொண்ட ஒரு பேபி பவுடர்... அடுத்த சில மாதங்களில் சந்தையிலிருந்து காணாமல் போக உள்ளது, வியாபாரம் செய்யும் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust