

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுகளைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை அமெரிக்கர்கள் சொர்க்கம் என்று கூறி கொண்டாடுவர். அமெரிக்க கண்டத்துக்கு வெளியில் இருக்கும் ஒரு சிறிய தீவுக் கூட்டமது.
அதில் லனாய் (Lanai) என்கிற, மாய் (maui) கவுண்டியில் உள்ள தீவில் சுமார் 98 சதவீத நிலப்பரப்பை ஒராக்கில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் லாரி எல்லிசன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டார். இதை நியூயார்க் போஸ்ட் என்கிற பத்திரிகை உறுதி செய்துள்ளது.
உலகின் டாப் 15 பணக்காரர்களில் ஒருவரான லாரி எல்லிசனின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 86 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.4 லட்சம் கோடி ரூபாய்.
தற்போது, ஹவாயில் உள்ள லனாய் தீவைச் சேர்ந்த 90,000 ஏக்கர் நிலபரப்பு, அதில் இருக்கும் இரு ஃபோர் சீசன்ஸ் என்கிற சொகுசு ரிசார்ட்கள் உட்பட எல்லாமே இவருடையதுதான். இந்த ரிசார்ட், அத்தீவிலிருந்த சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
சரி, அத்தீவை லாரி எல்லிசன் வாங்கிவிட்டார் என்பதால் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?
அத்தீவுப் பகுதியிலிருந்த சிறு குறு வியாபாரிகள், நடுத்தர மக்களால் வாழ முடியாத அளவுக்கு விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்துவிட்டதாக ப்ளூம்பெர்க்கில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் எல்லிசன் குழுவினரின் விருப்பப்படிதான் அத்தீவு மக்கள் வாடகைக்கோ, குத்தகைக்கோ நிலம் மற்றும் கட்டடத்தில் வாழ வேண்டி இருக்கிறதாம்.
ஹவாய் தீவு எங்களுக்கு வீடாக இருந்தது, ஆனால் லாரி எல்லிசன் குடியேறிய பின், இந்தத் தீவு எங்களின் வீடு போலவே இல்லை என சில குடும்பங்கள் வருத்தத்தோடு அத்தீவைவிட்டு வெளியேறி உள்ளனர்.
வேறு சில குடும்பங்கள், அத்தீவின் விலைவாசியைத் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். உயர் பள்ளி கணித அசிரியராக இருக்கும் மிஷெல் ஃபூஜே (Michelle Fujie), தன் எதிர்கால கணவர் மற்றும் மூன்று குழந்தைகளோடு வாழ, தங்கள் பட்ஜெட்டுக்குள் போதிய அளவுக்கு பெரிய வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வருத்தத்தில் இருக்கிறார். இது போன்ற இக்கட்டான தருணத்தில் ஹவாய் தீவை விட்டு வெளியேறிவிட்டால், தங்களால் எப்போதும் ஹவாய் தீவுக்கு திரும்பி வரவே முடியாது என்கிற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
"ஹவாய் தீவு பணக்காரர்கள் மற்றும் பில்லியனர்களின் விளையாட்டு மைதானம் போல் மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் எனது பெரிய கவலை" என்றும் குறிப்பிட்டுள்ளார் மிஷெல்.
முதன்முதலில் லனாய் (lanai) தீவை வாங்கிய லாரி எல்லிசன், நோபு என்றழைக்கப்படும் மிக உயர் ரக சொகுசு உணவு விடுதி ஒன்றைக் கட்டினார். அங்கு ஒருவேளை உணவு விருந்துக்கே 1,000 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 75,000 ரூபாய்) மேல் செலவழிக்க வேண்டி இருக்கும் என்கிறது நியூயார்க் போஸ்ட்.
பீட்டர் ஃப்ராங்க்ளின் என்பவர் லனாய் வுட்வொர்கர்ஸ் என்கிற பெயரில் ஒரு சிறு வியாபாரத்தை நடத்தி வந்தார். அவருடைய நிறுவனம் வாடகைக்கு இருந்த கட்டடத்தையும் லாரி எல்லிசன் குழுவினர் வாங்கிவிட்டனர்.
அக்கட்டடத்திலிருந்து நிறுவனத்தை காலி செய்வது அல்லது ஒட்டுமொத்த லனாய் வுட்வொர்க்கர்ஸ் நிறுவனத்தை லாரி எல்லிசன் குழுவுக்கு விற்றுவிடுவது மட்டுமே அவர் முன்னிருந்த வாய்ப்புகள். லாரி எல்லிசன் குழுவிடம் தன் நிறுவனத்தை விற்றால், பீட்டர் ஃப்ராங்க்ளினுக்கு ஒரு வேலை கொடுப்பதாகக் கூறப்பட்டது. அதை நம்பி தன் வியாபாரத்தை எல்லிசன் குழுவுக்கு விற்றார்.
ஆனால் அவர் வயதைக் காரணம் காட்டி எல்லிசன் குழு, ஃப்ராங்க்ளினுக்கு வேலை கொடுக்கவில்லை. தற்போது 64 வயதில் வேலையின்றி, தேவாலயங்களின் உதவி மூலம் தன் வாழ்கையை நடத்தி வருகிறார் பீட்டர் ஃப்ராங்க்ளின்.
லனாய் தீவில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வாங்கி வைத்திருக்கும் எல்லிசன் குழுமம், தன் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு அத்தீவிலேயே தங்கும் வசதிகளைச் செய்து கொடுக்கிறது.
தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ அல்லது பணியிலிருந்து வெளியேறினாலோ மிக குறுகிய காலத்துக்குள்ளேயே வீட்டை காலி செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில் லனாய் தீவில், சில பல ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கட்டடங்கள் மற்றும் நிலங்களைப் பயன்படுத்தி வந்த சிறு குறு வியாபாரிகள், தற்போது 30 நாட்களுக்கு மட்டுமே குத்தகை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். காரணம் எல்லிசன் குழுவினர்.
ஒருகாலத்தில் எளிமையாக இருந்த தீவை, எல்லிசன் வாங்கிய பிறகு பணக்காரர்களுக்கு பிடித்தது போல பிரம்மாண்டமாக பல மாற்றம் செய்துள்ளனர். இதனால் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், பில்லியனர்கள் லனாய் தீவுக்கு வந்து போவது அதிகரித்துள்ளது.
மறுபக்கம் ஆண்டுக்கு 59,000 டாலர் சராசரி வருமானம் ஈட்டி வந்த மக்களால் தற்போது லனாய் தீவில் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை என்கிறது நியூ யார்க் போஸ்ட்.
ஒருபக்கம் அமெரிக்க பொருளாதாரத்தின் பணவீக்கமும், மறுபக்கம் லாரி எல்லிசன் குழுவினரால் பல்வேறு கட்டமைப்புகள் மாற்றப்பட்டு, பணக்காரர்களின் வரவால் ஏற்படும் விலைவாசி அதிகரிப்பு என இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஜீரணிக்க முடியாமல், குறைந்த வருமானத்தில் திணறிக் கொண்டிருக்கிறார்கள் ஹவாய் தீவு மக்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust