![இம்ரான் கான்](http://media.assettype.com/newssensetn%2F2022-02%2F725dd48c-f984-4238-b74b-78bcbcc6479e%2Fimran_kahan.jpg?rect=0%2C0%2C1200%2C675&w=480&auto=format%2Ccompress&fit=max)
பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ எனப்படும் பாகிஸ்தான் தெஹிரிக் இ இன்சாப் ( பாகிஸ்தான் நீதிக்கான இயக்கம்) கட்சியின் தலைவர் வாவ்டா கடந்த புதன்கிழமை அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைக் கூறினார். நாட்டை விற்க மறுத்ததற்காகப் பிரதமர் இம்ரான் கானைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஏஆர்ஒய் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போது மேற்கண்ட தகவலை அவர் கூறினார். மார்ச் 27 அன்று இஸ்லாமாபாத்தில் பிடிஐ கட்சி ஒரு பேரணியை நடத்தியது. அதில் பிரதமருக்கு வந்த கடிதம் ஒன்றில் அவரது அரசாங்கத்தைக் கவிழ்க்க அந்நிய சதி நடக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பான கேள்வியின் போதுதான் வாவ்டா கொலைச் சதியைக் கூறினார்.
மத்திய அமைச்சர்கள் ஆசாத் உமர் மற்றும் ஃபவாத் சவுத்ரி ஆகியோர் செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பின் போது இம்ரான் கான் பிரதமராக நீடித்தால் "பயங்கரமான விளைவுகள்" ஏற்படும் என்று கடிதம் எச்சரித்ததாகப் பகிர்ந்து கொண்டனர்.
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வாவ்டா இன்று கூறினார், ஆனால் பிரதமரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
கடிதத்தின் உள்ளடக்கம் பகிரப்பட்ட பத்திரிகையாளர்களில் நெறியாளர் காஷிப் அப்பாசியும் ஒருவர். அவரிடம் பேசும் போது வாவ்டா, "இம்ரான் கான் அவர்களின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. நீங்கள் கடிதத்தின் அந்தப் பகுதியைப் படித்தீர்களா என்று தெரியவில்லை" என்றார்.
கடிதத்தில் இம்ரான் கானைக் கொல்லப்போவதாகக் கூறியிருப்பதை நீங்கள் உறுதி செய்கிறீர்களா என்று அப்பாசி, வாவ்டாவிடம் கேட்டார். வாவ்டா அதற்கு குறிப்பான பதிலை தெரிவிக்கவில்லை.
பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையின்மை தீர்மானத்தோடு அவரது உயிருக்கு உலை வைக்கும் அபாயம் உள்ளது. அது ஒரு 'அரசியல் படுகொலையாக' இருக்கும் என்றார் வாவ்டா. அப்படி தனிச்சிறப்பாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று அப்பாசி திரும்பவும் அழுத்திக் கேட்டார். அதற்கு வாவ்டா கடிதத்திற்கு அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது, அது வெறும் கடிதமல்ல என்றார்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு அப்பாசி "நீங்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்" என்றார். எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன், நாங்கள் எங்களது தலைவர் குறித்து கவலைப்படுகிறோம். அவரைக் கொல்வதற்கு ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றார் வாவ்டா.
மேலும் வாவ்டா கூறும் போது இம்ரான் கான் ஒரு மிகப்பெரும் தலைவர். அவர் தனது நாட்டை ஒருபோதும் விற்க மாட்டார். அதற்காக டாலர்களை ஈட்ட மாட்டார். தனது நாட்டின் தளங்களை எவரும் தங்களது விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டார்.
அதன் விலை தற்போது அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட இருக்கிறது, அவரது உயிருக்கு அபாயம் இருக்கிறது என்று மேலும் கூறினார் வாவ்டா.
பிடிஐ தலைவர் வாவ்டா கூறும் போது இம்ரான் கான் பிரதமர் ஆவதற்கு முன்பே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. பெரும் பேரணிகளில் நாங்கள் அவருக்கு முன்பு கேடயமாக நின்று கொள்வோம். அவர் பல முறை தாக்கப்பட வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை அமைப்புகள் தகவல் தெரிவித்திருக்கின்றன என்றார்.
இது குறித்து பிரதமர் இம்ரான் கானிடம் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறோம். ஆனால் அவை குறித்து அவர் அஞ்சுவதில்லை. அதற்குப் பயந்து நடந்து கொள்வது ஒரு பலவீனம் என்று சொல்வார் என்கிறார் வாவ்டா.
இம்ரான் கானின் அமைச்சரவைக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் அவர் மீதான இந்த தகவல்கள் பாகிஸ்தான் அரசியலைக் கலக்கி வருகிறது.