
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்போடு மக்கள் வாழ்வது, மக்கள் கையில் பணம் புழங்குவது போன்ற விஷயங்கள் எல்லாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ… அதே அளவுக்கு அந்நாட்டில் நிலவும் விலைவாசியும் அதீத முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்தால், அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே அதிக அளவில் பணத்தை செலவிட வேண்டி இருக்கும்.
இதனால் அந்நாட்டு மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்வதற்கான மற்ற பொருட்களை எல்லாம் வாங்குவதற்கு பணத்தை செலவிடுவது தானாக குறைந்து விடும். இப்படிப்பட்ட பிரச்னையை துருக்கி, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகள் எதிர் கொண்டு வருகின்றன.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் ஜப்பானில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த டிசம்பர் 2022 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் 4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இது அந்நாட்டின் மத்திய வங்கி நிர்ணயித்திருந்த அளவை விட இரு மடங்கு அதிகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்படி விலைவாசி அதீதமாக அதிகரிக்கும் போது, அதே அளவுக்கு மக்கள் கையில் பணப்புழக்கமும் அதிகரித்தால் தான் மக்களால் தங்களுடைய வழக்கமான செலவுகளை தொடர்ந்து செய்ய முடியும். அப்படி இல்லை எனில் மிக அத்தியாவசியமான மற்றும் கட்டாய செலவுகளுக்கு அதிக பணத்தை செலவழித்துவிட்டு, மிகக் குறைந்த அளவிலான பணத்தை மட்டுமே சொகுசு சார்ந்த, வாழ்கைத் தர உயர்வு சார்ந்த விஷயங்களுக்கு செலவளிப்பர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, விலைவாசி பிரச்னையை சமாளிக்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) கோரிக்கை வைத்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஜப்பானின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஜாம்பவான்களான டொயோடா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள், வரலாறு காணாத அளவுக்கு ஒரு பெரிய சம்பள உயர்வை கொடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜப்பான் நாட்டில் உள்ள நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் சங்கங்களோடு கலந்தாலோசித்து, மார்ச் மத்தியில் தங்களுடைய முடிவுகளை அறிவிப்பர்.
ஆனால் இந்த ஆண்டு, சில வாரங்களுக்கு முன்பே ஊழியர்களுக்கு வழங்கவிருக்கும் சம்பள உயர்வு குறித்து இரு பெரு நிறுவனங்களும் அறிவித்திருக்கிறார்கள். ஏன் இப்படி முன்கூட்டியே அறிவிக்கிறார்கள் என்பது குறித்து இரு நிறுவனங்களும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
டொயோடா நிறுவனம் தங்களுடைய யூனியன் அமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்று சம்பளம் மற்றும் போனஸ் தொகையை உயர்த்துவதாகவும், இந்த சம்பள உயர்வு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியது என்றும் கடந்த புதன்கிழமை தெரிவித்தது. மேற்கொண்டு எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்கவிருக்கிறார்கள், போன்ற விவரங்கள் எதையும் ஊடகங்களிடம் டொயோடா பகிர்ந்து கொள்ளவில்லை.
அதேபோல ஜப்பானின் மற்றொரு மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா, தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை சம்பள உயர்வு கொடுக்கவிருப்பதாகவும், இது கடந்த 1990ஆம் ஆண்டுக்கு பிறகு கொடுக்கப்படும் மிகப்பெரிய சம்பள உயர்வு என்றும் கூறியுள்ளது.
மேலும் தங்கள் நிறுவன யூனியன் தரப்பினர் வைத்த அனைத்து கூலி உயர்வு மற்றும் போனஸ் உயர்வு கோரிக்கைகளுக்கு பதிலளித்திருப்பதாகவும் கூறியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், யுனிக் லோ (Uniqlo) என்கிற ஃபேஷன் ஃபாஸ்ட் ரீடெயில் துறை சார்ந்த நிறுவனம், தன்னுடைய சொந்த நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு 40 சதவீதம் வரை சம்பள உயர்வைக் கொடுக்கவிருப்பதாக அறிவித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த சம்பள உயர்வு அறிவிப்பு மார்ச் முதல் அமலுக்கு வரும் என்று கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
5 சதவீதம் எல்லாம் ஒரு மிகப்பெரிய சம்பள உயர்வா..? என இந்தியாவில் இருக்கும் நாம் கேட்கலாம். ஆனால் ஜப்பான் நாட்டில் கடந்த பல தசாப்த காலமாகவே, விலைவாசியும் அதிகரிக்கவில்லை, சம்பளமும் அதிகரிக்கவில்லை. எனவே தான் ஜப்பானில் பல நிறுவனங்களும் பெரிய சம்பள உயர்வைக் கொடுக்கவில்லை என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போது கூட உக்ரைன் & ரஷ்யாவுக்கு இடையிலான போர் காரணமாக எரிபொருட்களின் விலை அதிகரித்தது ஜப்பான் நாட்டின் பணவீக்கத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இல்லையெனில் ஜப்பானின் விலைவாசி (பணவீக்கம்) இந்த அளவுக்கு அதிகரித்திருக்காது என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நம் இந்தியப் பிரதமரும் இந்திய நிறுவனங்களிடம் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கச் செய்யுமாறு வலியுறுத்தினால் நன்றாக இருக்கும். கொஞ்சம் பாத்து பண்ணுங்க மோடிஜி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust