Breast Feeding Twitter
ஹெல்த்

குழந்தைகளின் லைஃப்ஸ்டைல் நோய்கள் முதல் தாய்மார்களின் புற்றுநோய் வரை தடுக்கும் ஒரு மருந்து!

மினு ப்ரீத்தி

ஆகஸ்ட் 1-7

உலக தாய்ப்பால் வாரம்


மனிதர்கள், விலங்குகள் உட்படப் பாலூட்டி வகைகளில், பிறக்கும் எந்த உயிர்க்கும் 'தாய்ப்பாலே' பிரதான சத்துணவு. அதில் இருக்கும் சத்துக்கள் வேற எந்த உணவிலும் இல்லை. பிறந்த முதல் உயிருக்கு அதுவே ஆகச் சிறந்த ஆகாரம். எனவேதான், தாய்ப்பாலை 'திரவத் தங்கம்' (Liquid Gold) என்று சிறப்பித்து சொல்கிறார்கள்.

பிறந்த உயிரின் முதல் உணவு என்ற மகத்துவம் இருந்தாலும், இந்த நூற்றாண்டிலும் கூட தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இதை உண்டாக்க, உலக சுகாதார நிறுவனம் (WHO) பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு, 'தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு ஆதரவு அளித்தல்' (Step Up for Breastfeeding: Educate and Support) என்னும் கருத்தை முன்னிறுத்தி அது குறித்த பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

தாய்ப்பாலின் மகத்துவம், ஏன் தாய்ப்பால் புகட்ட வேண்டும்? அதன் நன்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமானதா? என்பதை பற்றியெல்லாம் இங்கே விவரிக்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் எம்.சங்கமித்திரை.

பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரையாவது, ஒரு தாய் கட்டாயம் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட வேண்டும். அதுவே ஆரோக்கியமான 'தாய்ப்பால் புகட்டல் முறை' (Exclusive Breastfeeding) என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால் இன்றும் 3ல் 2 குழந்தைகளுக்கு அவ்வாறு தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என்பதே ஆய்வுகளின் மூலம் வெளிவந்திருக்கும் உண்மை.

புரோட்டின், மினரல்கள், விட்டமின்கள், கார்போஹைட்ரேட், ஃபேட், ஆண்டிபாடிஸ் எனப் பிறந்த குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் தாய்பாலில் உள்ளன. குழந்தையின் முதல் 6 மாத காலத்திற்குத் தண்ணீர் உட்பட வேறு எந்த உணவும் தரத் தேவையில்லை. அதுவே அவர்களுக்கு நன்கு செரிமானம் ஆகக்கூடிய உணவும் கூட. தவிர, குழந்தைகள் மிக ஆரோக்கியமாக வளரவும் அவை உறுதுணை புரிகின்றன.

பெண்கள் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் எம்.சங்கமித்திரை.

நோய்கள் வராது.. ஆயுள் கூடும்..

தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகள், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போதும், நோய்கள் எதுவும் நெருங்காமல் தற்காத்துக்கொள்ள தாய்ப்பால் மிகவும் உதவிக்கரமாக இருக்கிறது. வாழ்வியல் நோய்களான நீரிழிவு, உடல் பருமன் ஆகியவை பரவலாகப் பெருகிவரும் வேளையில், தாய்ப்பாலை சரிவிகிதத்தில் பருகிய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல்கள் நேரும் ஆபத்தும் குறைவு. தவிர நுரையீரல் தொற்று, டயரியா உட்பட பலவிதமான தொற்றுக்களும் நெருங்கவிடாமல் தாய்ப்பால் காக்கிறது. சத்துக் குறைபாடு உண்டாவதும் தவிர்க்கப்படுகிறது. குழந்தைகளின் எலும்பு, மூளை மற்றும் நரம்பியல் வளர்ச்சிக்கும் அது தொடர்பான குறைகள் நேராமல் தவிர்ப்பதிலும் தாய்ப்பாலின் பங்கு ரொம்பவே அதிகம்.

எதிர்பாராத மற்றும் சரியான காரணம் அறியப்படாத பச்சிளம் குழந்தைகள் மரணத்தை 'SIDS' (Sudden Infant Death Syndrome) என்போம். தாய்ப்பால் பருகும் குழந்தைகள், இந்த சிக்கலிலிருந்து ஓரளவுக்குத் தப்பிக்கின்றனர் என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

தாய்ப்பால் தாய்க்கும் நல்லது.!

தாய்ப்பால் தருவது பச்சிளம் குழந்தைக்கு மட்டுமே நன்மை தரக்கூடியது அல்ல! அது தாய்க்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் வராமல் தவிர்ப்பதில் தாய்ப்பால் புகட்டலின் பங்கு மிக அதிகம்.

தாய், தனது மார்போடு அணைத்து குழந்தைக்குப் பால் புகட்டும் போது 'தாய் சேய்க்கு இடையேயான பிணைப்பும்' அதிகரிக்கிறது. இது, 'உளவியல் ரீதியான நன்மைகளை' இருவருக்குமே தருகிறது.

முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், அந்த அனுபவத்தை அப்போதுதான் முதன் முதலில் உணர்வார். இளமைக்காலம், அடுத்து திருமணம் ஆன மகிழ்வான காலம் என இருந்துவிட்டு, திடீரென குழந்தை பெறுவது அவருக்கு மன ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்தும். கர்ப்பம் தரித்திருந்த காலங்களிலும், குழந்தை பிரசவித்த பிறகும் அவர் சமூகத்தோடு ஒன்றி, சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதுமே மன அழுத்தத்தையும், மனச் சோர்வையும் உண்டாக்கும். தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் இது ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவேதான், மருத்துவர்கள் "குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் மூளை வளரும்!" என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு.

பால் சரியாகச் சுரப்பதில்லை என்பது உண்மையா?

இன்றைய இளம் தாய்மார்கள் பலரும் சொல்லக் கூடிய பொதுவான ஒரு விஷயம் 'தனக்குப் பால் சரியாகச் சுரப்பதில்லை!' என்பது. வேலை காரணமாக.. டென்ஷனில் இருக்கிறேன்.. உடலில் சத்துக்கள் இல்லை.. என அவர்களாகவே அதற்குக் காரணங்களையும் சொல்லிவிடுகிறார்கள். இது உண்மை அல்ல! குழந்தை பெற்ற எந்த பெண்ணுக்கும் பால் நிச்சயமாகச் சுரந்தே ஆகும். பால் சுரக்கவில்லை என்பதற்கு, பால் புகட்டும் முறையும் மிக முக்கிய காரணமாகிவிடுகிறது. தாயின் மார்பகங்களில் வாய் வைத்து குழந்தை பாலை சுவைக்கும் போது, தாயின் மூளையில் உள்ள 'ஆக்சிடோசின்' ஹார்மோன் தூண்டப்படும். அந்த தூண்டலால் மார்பிலிருந்து பால் சுரக்கும். தனக்குப் பால் சுரக்கவில்லை எனச் சொல்லும் இளம் தாய்மார்கள், குழந்தைக்குச் சரியான முறையில் பால் புகட்டுகிறார்களா? என்பதைக் கவனித்து, சரி செய்தாலே இந்த சிக்கல் நேராமல் தவிர்க்கலாம்.

தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் குழந்தை, 34 வது வாரத்திலிருந்து தாய்ப்பால் குடிப்பதற்குத் தன்னளவில் தயாராகிவிடும். பிறந்தவுடனேயே முதல் அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள்ளாகத் தாய்ப்பால் குடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும். ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கும் நிலைக்குச் சென்றுவிடும். எனவே, அவர்களுக்குப் பால் புகட்டுவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும். எனவேதான், பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாகத் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.

எனவேதான், இதை 'பொன்னான நேரம்' (Golden Hour) என்கிறோம். முதன் முதலாகக் கொடுக்கப்படும் தாய்ப்பாலில் 'கொலஸ்ட்ரம்' அதிகமாக இருக்கும். சிசேரியன் முறை பிரசவம், பிரசவத்தின்போது தாய் மயக்கம் அடைதல் உள்ளிட்ட சில காரணங்களால் முதல் ஒரு மணி நேரத்தில் பால் புகட்ட முடியாவிட்டாலும் அடுத்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள்ளாக வாவது கொடுத்து விடுவது நல்லது. மூன்று முதல் நான்கு நாட்கள் வரையிலும் கொலஸ்ட்ரம் தாய்ப்பாலில் அதிகமாக இருக்கும்.

பிறந்தது முதல் 2 வயது வரையிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தாராளமாகக் கொடுக்கலாம். குடும்பம், வேலை உட்பட இன்னபிற காரணங்கள் எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் 6 மாதங்களாவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவது, அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமுடன் வளருவதற்கு உறுதுணையாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?