Dreaming

 

Facebook

ஹெல்த்

கனவுகள் மரணத்தை எப்படி அறிவிக்கும்? கனவு மூலம் புரிந்துகொள்ள வேண்டியவை

மினு ப்ரீத்தி

சின்னச் சின்ன விஷயங்களை மனிதன் கண், காது, மூக்கு வைத்து பேசும் பழக்கத்தை, மனிதன் கனவுகளிடம் இருந்து கற்றுக்கொண்டான். ஏனெனில் உணர்வுகளைக் கனவு மிகைப்படுத்திக் காட்டுவதாகவும் நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியக் குறைவை கனவில் அறிவித்துத் தூக்க நிலையில் சிந்தனையாகவும் வரும் என்பதாக அரிஸ்டாட்டில் சரியாக அறிந்து வைத்திருந்தார். தீ மிதிப்பது போலக் கனவு வந்தால் அருகில் யாராவது கொசுவர்த்தியோ மெழுகுவர்த்தியோ ஏற்றி வைத்திருக்கலாம். நிஜத்தில் வேறு ஒரு நிகழ்வு. ஆனால், கனவில் வேறு மாதிரி வருகிறது. ஏன்? இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

கனவுகளைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு ஆராய்ச்சிகள் பற்றிய தேவை அவசியமாகிறது. அதில் முக்கியமான ஆராய்ச்சியில் சிக்மண்ட் ஃப்ராய்டின் ஆராய்ச்சியும் ஒன்று. ஆயிரகணக்கான ஆண்டுகளாக மனிதன் கனவுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முயலுகிறான். அரிஸ்டாட்டிலுக்கு முந்தைய காலத்தில், கனவுகள் தெய்வீக அறிவிப்பாகவும் தீர்க்கதரிசியாகவும் புரிந்துகொள்ளப்பட்டது. எனினும், இக்காலத்தில் சில உண்மைகளும் அறியப்பட்டன.

ஹைபர்னீஸிக் கனவுகள்

மறந்துவிட்டதை நினைக்காமலே வெளிப்படுத்தும்

கனவு தானாக எதையும் சொல்வதில்லை. நம் நனவு வாழ்வில் அனுபவங்களில் இருந்தே அது காட்சிகளை அமைக்கிறது. நமது விழிப்புநிலை அனுபவங்கள் கனவில் நினைவுகொள்ளப்படுகின்றன. அல்லது மறு உயிர்ப்புச் செய்யப்படுகின்றன.

ஆனால், கனவுக்கும் நனவுக்கு உள்ள தொடர்பைப் புரிந்த்கொள்வது கடினம். நாம் அறவே மறந்துவிட்டதை, நினைவில் கொண்டு வர முடியாததைக் கனவு துல்லியமாக நினைவுப்படுத்தும். இதை ‘ஹைபர்னீஸிக் கனவுகள்’ என்கின்றனர் உளவியலாளர்கள்.

கனவுகளின் குறியீட்டுத் தன்மை

கனவுகளின் குறியீட்டுத் தன்மை

அடுத்ததாக, கனவுகளின் குறியீட்டுத் தன்மை பற்றிப் பார்க்கலாம். உதாரணமாக, நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விட்டு விடுவதாகக் கனவு காண்பதாக வைத்துக்கொள்வோம். இக்கனவு மரணத்தைப் பற்றிய பயத்தை வெளியிடுகிறது. இக்கனவின் படி நாம் ரயிலை விட்டுவிட்டோம். அதாவது நாம் புறப்படவில்லை.நமக்கு இப்போது புறப்பாடு, அதாவது மரணம் இல்லை. நீ இப்போது சாகமாட்டாய் என்று கனவு கூறுகிறது. புறப்பாடு என்பது இறப்பைக் குறிக்கும் பிரபஞ்சக் குறியீடு. கனவில் ரயிலும் நம்மை விட்டுவிட்டுப் புறப்படுவதும் ‘நமக்கு மரணம் இப்போது இல்லை’ என்பதன் குறியீடுகள்.

புறப்படுகின்ற எந்த வாகனத்தையும் மரணத்தின் குறியீடாக அது காட்டலாம். இன்ன மனிதருடைய கனவில் கனவு ஏன் மரணத்தின் குறியீடாக ரயிலைத் தேர்ந்தெடுத்தது? மற்ற வாகனங்கள் ஏன் வரக்கூடாது? இது போன்ற கேள்விகளுக்குக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் பின்புலத்தை அறிந்தால்தான் விடை கிடைக்கும்.

Sigmund Freud

கனவில் விருப்பம் நிறைவேறுமா?

ஒவ்வொரு கனவும் ஏதோ ஒருவிதத்தில் நம் ஆழ்மனத்தில் இருக்கும் விருப்பத்தை நிறைவேறி விட்டதாகக் காட்டும். அது பெரும்பாலும் பாலுணர்ச்சி தொடர்பாக இருக்கும் என்கிறார் ஃப்ராய்ட். கனவைப் பற்றிய அவரது ஆராய்ச்சியில், மிக முக்கியமான அம்சம் கனவு நமது விருப்பம் நிறைவேறுவதாகக் காட்டும் தன்மை கொண்டது என்பதுதான். இந்த விருப்பம் பெரும்பாலும் குழந்தை பருவத்திலிருந்து அமுக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம்.

மேற்சொன்ன, ரயில் உதாரணத்தில்… நம் விருப்பம், ‘இப்போது சாகக் கூடாது’ என்பதுதான். இதனால்தான், ரயில் கனவு கண்டவரை விட்டுவிட்டுப் போகிறது.

ஃப்ராய்டின் நண்பர் ஒருவர், அவரிடம் தனது மனைவிக்கு மாதவிடாய் வருவதாகக் கனவு கண்டதாகக் கூறுகிறார். அப்படியானால் உண்மையில் மாதவிடாய் வரவில்லை எனவும் அதாவது நண்பரின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் எனவும் ஃப்ராய்ட் விளக்கம் தருகிறார். அதாவது, மாதவிடாய் வராததால், வரவேண்டும் என்ற விருப்பம் அவள் கனவில் நிறைவேறியுள்ளது.

இப்படிப்பட்ட விருப்பம் நிறைவேற்றம் கனவுகள், பெரியவர்களுக்கு வருகையில் அது அவர்களின் ஆழ்மனத்தில் அமுக்கப்பட்டுக் கிடந்த விருப்பமாகவும், குழந்தைகளுக்கு வருகையில் அது அவர்களின் நனவு வாழ்வில் நிறைவேற்றப்படாத சின்னச் சின்ன ஆசைகளாகவும் இருக்கும்.

Madness

கனவு காணாத மனிதன் பைத்தியமாகிவிடலாம். ஏன்?

நமது கனவு கழிவாகவும் வெளிப்படுகிறது என்கிறார் ஃப்ராய்ட். நம் நனவு வாழ்வில் எந்த முக்கியத்துவமும் கொடுத்து வைத்துக்கொள்ளாத அற்பமான விஷயங்களைப் பற்றியே அதிகமாகக் கனவு காண்கிறோம். இதனால்தான் கனவை விளக்க கடினமாக உள்ளது.

மேலும், கனவு காணத் தகுதியில்லாத ஒரு மனிதன் காலப்போக்கில் பைத்தியமாகிவிடலாம். மூளை ஏற்கெனவே நம்மை மிகவும் பாதித்த, சிந்தனை செய்த எண்ணங்களின் சுமையால் அழுத்தப்படுகிறது. இச்சமயம் சம்பந்தமில்லாத அற்ப விஷயங்கள் மூட்டையாகச் சேர்ந்துவிட்டால் மூளை குழம்பிவிடுமாம். எனவேதான், கனவு நம் மூளை பதிவு செய்த தினசரி அற்பங்களின் சுமையில் இருந்து கனவுக் காட்சிகள் மூலம் நம் சுமையைக் குறைக்கிறது. அந்த அற்ப விஷயங்களைக் கனவாக வெளியேற்றுவிடுகிறது.

Dreaming

கனவு எப்படியெல்லாம் வருகிறது?

நம்மைத் தூக்கத்தில் வந்தடைகின்ற ஒவ்வொரு உணர்வும் அதற்குத் தொடர்புள்ள கனவுப் படிமங்களை அல்லது காட்சிகளை உருவாக்குகிறது. இடியின் சத்தம், நம்மைப் போர்க்களத்தில் நடுவில் நிறுத்துவதாகக் கனவில் உணரலாம்.

சேவல் கூவினால், பயங்கரமான ஒரு மனிதன் கனவில் அலறலாம். நனவில் யாரோ நீங்கள் தூங்கி கொண்டிருக்கையில் கதவை திறந்தால் அந்தக் கதவு கிறிச்சீடும் சத்தம் கேட்டால், கனவில் திருடர்கள் வரலாம். நம் படுக்கைத் துணியோ அல்லது அருகில் உள்ள தலையணையோ கீழே விழுந்துவிட்டால், அந்த நேரத்தில் கனவில் நாம் நிர்வாணமாக நடக்கலாம் அல்லது தண்ணீரில் விழலாம்.

ஒருவேளை நம் தலையணைக்கும் கீழ் நம் தலை போய்விட்டால், இதுவே நம் கனவில் ஒரு பெரிய பாறைக்குக் கீழ் தலை நசுங்கிற மாதிரி கனவு காணலாம்.

விந்து பெருகிவிட்டால் காமம் தொடர்பான கனவுகள் வரலாம். சுடுதண்ணீரில் கால்களை வைத்துக்கொண்ட ஒருவருக்கு, எரிமலையின் மீது தான் ஏறிவிட்டதாகவும் அதன் தகிப்பைக் கனவில் உணர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இதுபோல ஒருவர் உறங்கி கொண்டிருக்கும்போது, அவர் நெற்றியில் ஒரு துளி நீர் விடப்பட்டது. உடனே, அவர் தான் இத்தாலியில் இருப்பதாகவும் பயங்கரமாக வியர்த்துக் கொட்டுவதாகவும் வெள்ளைநிற பானம் அருந்திக் கொண்டிருந்தாகவும் கனவு கண்டதாகச் சொன்னார்.

மனது எந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட உணர்வை வாங்கிக் கொள்கிறதோ அந்தச் சூழலுக்குத் தகுந்த வடிவங்களைக் கனவில் அடைகிறது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். கனவில் பின்னப்படும் காட்சிகள் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தக்கபடி வெவ்வேறாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?