பாபு

 

News Sense

இந்தியா

கேரளா பாபு : 40 மணி நேரமாக மலை இடுக்கில் சிக்கி தவிக்கும் இளைஞர், களம் இறங்கிய விமான படை

Antony Ajay R

கேரளாவில் செங்குத்து மலையின் இடுக்கில் இளைஞர் ஒருவர் சிக்கி அங்கிருந்து மீள முடியாமல் 40 மணி நேரமாக உயிருக்குப் போராடி வருகிறார். இராணுவம் மற்றும் NDRF உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தனது மொபைலில் இருந்து புகைப்படங்கள் மற்றும் இருப்பிடத்தை அனுப்பிய பாபுவின் மொபைல் போனும் அணைந்து விட்டது. இதுவரை அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க முடியவில்லை.

பாபு தரையிலிருந்து 1000 அடி உயரத்தில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. “என் மகனுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும். நான் அவரைப் பார்க்க முடிகிறது, அவன் என்னிடம் சைகை செய்தார். அவன் சோர்வடைவான் என்பதால் அங்கிருந்து கத்த வேண்டாம் என்றேன்’’ எனப் பதைபதைப்புடன் கூறியாயிருக்கிறார் பாபுவின் அம்மா.

குரும்பாச்சி மலை

கடந்த திங்கட்கிழமை 23 வயதான மலம்புழா, சேரடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாபு அவரது மூவருடன் எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில் மலையேறியுள்ளார். அப்போது குறுகிய பாதை வழியாகப் போய்க் கொண்டிருந்த பாபு தவறுதலாக வழுக்கி உள்ளே விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கொடிகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி பாபுவை மீட்க நண்பர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. பாபுவின் நண்பர்கள் மலையிலிருந்து இறங்கி, அப்பகுதி மக்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

மலைப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து சேர மாலை நேரமானது. இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. எனினும் பாதுகாப்புக்காகத் தீயணைப்புத் துறையினர் அங்கேயே தங்கினர். இரவு முழுவதும் 1000 அடி உயரத்தில் கும் இருட்டில் பாபு அமரவேண்டியிருந்தது.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ம்ருண்மயி ஜோஷியின் (Mrunmai Joshi ) வேண்டுகோளின்படி பாபுவை விமானத்தில் ஏற்றிச் செல்லும் முயற்சியில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஹெலிகாப்டரால் பாபு சிக்கிய செங்குத்தான சரிவுக்கு அருகில் செல்லவோ அல்லது மலை உச்சியில் தரையிறங்கவோ முடியவில்லை. சிக்கல் அவர்கள் நினைத்ததை விடத் தீவிரமானது எனப் புரிந்து கொண்டனர்.

இதுகுறித்து கடலோர காவல்படை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹெலிகாப்டர் பைலட் உயிருக்கு பாபு இருக்கும் முகடு அருகே விமானத்தை நகர்த்த முடிவு செய்துள்ளார். ஆனால் "நிலப்பரப்பின் செங்குத்தான மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக ஹெலிகாப்டரால் அவர் அருகே செல்ல முடியவில்லை” என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

பாபுவின் மொபைலில்  எடுக்கப்பட்ட புகைப்படம்

கேரள முதல்வர் பினராயி விஜயனும் தலையிட்டு அந்த இளைஞர்களைப் பாதுகாப்பாக மீட்க ராணுவத்தின் உதவியை நாடினார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் தெற்குப் படையின் லெப்டினன்ட் ஜெனரல் அருண், விரைவில் பெங்களூரிலிருந்து ஒரு சிறப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வரும் என்று முதல்வர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மலையேறுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற குழுவும் தமிழகத்தின் வெலிங்டனிலிருந்து மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மற்றொரு குழுவும் நேற்று மாலையில் பாலக்காட்டுக்குப் புறப்பட்டது.

மேலும், ராணுவம் தவிர, விமானப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், பாரா கமாண்டோக்கள் பெங்களூரிலிருந்து சூலூருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு அங்கிருந்து மலம்புழாவை சென்றடைவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாபு நலமுடன் மீட்கப்பட்ட செய்தி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?