தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன?

 

NewsSense

தமிழ்நாடு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன?

NewsSense Editorial Team

எம்.ஜி.ஆர் இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் அவர்தான் தமிழநாட்டின் முதலமைச்சர் என்று நம்பிய மக்கள் இருந்த மாநிலம் இது. இப்போது படிப்பறிவு, இணையம், செல்பேசி என்று தமிழகம் வளர்ந்திருந்தாலும் இன்னொருபுறம் வாட்சப் வதந்தி பல்கலைக் கழகம் பரப்பும் தவறான செய்திகளை நம்புவோரும் இருக்கிறார்கள். போகட்டும். நாளை பிப்ரவரி 19 சனிக்கிழமை தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

வாக்குப்பதிவு நேரம்

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

எத்தனை இடங்களில் தேர்தல்?

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 12,800 வேட்பாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. அதிலும் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி முதன்முறையாக பட்டியிலின (எஸ்சி) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கும் பட்டியிலின பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சிக்கு பட்டியிலினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் இந்த தேர்தலில் சில சிறப்புகள் இருக்கிறது. இளவயதினர், சமூக ஆர்வலர்கள், திருநங்கைகள் ஆகியோரும் கூட போட்டியிடுகின்றனர். வேலூர் மாநகராட்டசியின் 37-வது வார்டில் திமுக சார்பில் கங்கா நாயக் எனும் திருநங்கை போட்டியிடுகிறார்.

தேர்தல் காரணமாக நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் குறித்து எது தெரியுமோ தெரியாதோ நம் மக்களுக்கு டாஸ்மாக் விடுமுறை மட்டும் கண்டிப்பாக தெரியும். ஆனால் மக்களே, இந்த தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளப் பெருமக்களும், வேட்பாளர்களும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். முக்கியமாக தேர்தல் அமைதியாக நடைபெற இந்த விதிமுறைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது மீறப்பட்டால் தேர்தல் அலுவலகர்களிடம் புகார் அளிக்க வேண்டும். வாக்களிப்பது மட்டுமல்ல, வாக்களிக்கும் போது இடையூறுகள் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்வதும் நமது கடமை.

என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?

1. பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வந்து தமக்கு வாக்களிக்குமாறு நிர்ப்பந்திப்பதோ, இல்லை அவர்கள் தமக்கு எதிரானவர்கள் எனத் தெரிந்து அவர்கள் வாக்களிப்பதை தடை செய்வதோ வேட்பாளர்கள் செய்யக் கூடாது.

2. வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே வேட்பாளர்கள் சார்பில் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளோ, துண்டறிக்கைகளோ ஒட்டப்படக்கூடாது.

3. வேட்பாளர்கள் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் தமது அலுவலகங்களை வைக்கக் கூடாது. இந்த அலுவலகங்களில்தான் பூத் ஸ்லிப்புகள் கொடுப்பார்கள்.

4. ஒருவேளை வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அதற்கு பதில் ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் நீங்கள் குறிப்பிட்ட வார்டில் வாக்களாராக பதிவு செய்திருக்க வேண்டும்.

5 வேட்பாளர்களோ அவர்களது ஆதரவாளர்களோ ஒலிபெருக்கியின் மூலம் பிரச்சாரம் செய்வதோ, கூச்சல் குழப்பம் விளைவிப்பதோ கூடாது.

6 எல்லாக் கட்சிகளும், அவர்களது வேட்பாளர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் சாதி, மத, மொழி மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே வேறுபாட்டையும், வெறுப்பையும், பதற்றத்தையும் உருவாக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது. (இந்த தேர்தலில் மதத்தை முன்னிறுத்தியும், உள்ளூர் சாதிகளை முன்னிறுத்தியும் சில கட்சிகள் போட்டியிடுவதோடு அப்படி தனிப்பட்ட முறையில் பிரச்சாரமும் செய்திருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்) தேர்தல் விதிமுறைப்படி இப்படி சாதி,மத வேறுபாடுகளை முன்னிறுத்தி செயல்படும் கட்சிகள், வேட்பாளர்கள் குறித்து நீங்கள் உடனே தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யலாம்.

7 மக்களை வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று வாக்களிக்க வைப்பதை வேட்பாளர்கள் செய்யக்கூடாது. இது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வாக்களார்களுக்கு உணவு, மது, இதர போதைப்பொருட்களை தேர்தல் அன்று அளிப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அப்படி நடந்தால் நீங்கள் தேர்தல் அலுவலரிடம் உடன் புகார் செய்யலாம்.

8 தேர்தல் அன்றும், தேர்தல் முடிந்த 48 மணி நேரத்திலும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்தக் கூடாது.

9 பார்க்க இயலாத, முழுமையாக நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் பொருட்டு ஒரு உதவியாளர் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் பொருட்டு அனுமதிக்கப்படுவார்.

10 வேட்பாளர்களோ அவர்களது முகவர்களோ ஏதேனும் குறிப்பான புகார் அளிக்க விரும்பினால் அதை விளக்கமாக தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் அளிக்கலாம். தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.

11. வாக்குச்சாவடி மையத்தின் அருகே தேவையற்ற கூட்டத்தையும் கும்பலையும் கட்சிகளும் வேட்பாளர்களும் திரட்டி வைத்திருக்க கூடாது. இதனால் கட்சிகளுக்கிடையே உள்ள பதற்றத்தையும், முரண்பாடுகளையும் தவிர்க்க முடியும்.

மற்றபடி மக்களே மறக்காமல் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயகக் கடமை ஆற்றிட வாழ்த்துகள்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?