marx iStock
உலகம்

கார்ல் மார்க்ஸ் : யார் இவர்? 200 ஆண்டுகளுக்கு பின்னும் உலகம் இவர் குறித்து பேசுவது ஏன்?

Govind

2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உலகம் முழுவதும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இத்தகைய நெருக்கடி பத்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது நடக்கிறது. அப்போது ஊடகங்களில் பொருளாதாரம் குறித்து எழுதுபவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் பெயர் கார்ல் மாரக்ஸ்.

ஆம். இன்றைய முதலாளித்துவ சமூகம் எப்படி இயங்குகிறது, எப்படி தன்னளவில் முரண்படுகிறது, அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதை எதிர்த்து ஏன் போராடுகிறார்கள் என்று 19 ஆம் நூற்றாண்டிலேயே ஆய்வு செய்து சொன்ன பேரறிஞர் அவர். அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கெல்சோடு இணைந்து அவர் உருவாக்கிய கம்யூனிச தத்துவம் உலகையே புரட்டி போட்டது என்றால் மிகையில்ல.

ரசிய, சீன புரட்சிகளாக இருக்கட்டும், மாபெரும் வல்லரசு நாடு அமெரிக்காவை சின்னஞ்சிறிய நாடான வியட்நாம் தோற்கடித்தாக இருக்கட்டும், இன்று வரை அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நின்று சவால் விடும் கியூபாவாக இருக்கட்டும்........ இத்தகைய புரட்சிகள், சமூக மாற்றங்களின் மூலவர் என்ற முறையில் கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் நினைவுகூரப்படுகிறார். மறுபுறம் வல்லரசு நாடுகளின் கல்வித்துறை அவரது பெயரையே இருட்டடிப்பு செய்கிறது. ஆயினும் ஒளி வீசும் ஆதவனை பூமிவாழ் உயிரினங்கள் மறுக்க முடியாதோ அது போல இன்றைக்கு மக்கள் தாம் பெற்றிருக்கும் பல்வேறு சமூக உரிமைகளுக்காக கார்ல் மார்க்சுக்கு கடமைப் பட்டிருக்கிறார்கள்.

தொழிற்சங்க உரிமை, தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம், பணிநேரம், ஓய்வூதியம், மக்களுக்கான நலத்திட்டங்கள், அரசாங்கமே நடத்தும் பொதுத்துறைகள், கல்வி - சுகாதாரம் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டியதின் முக்கியத்துவம், அறிவியல் பார்வையின் அவசியம் அனைத்தும் மார்கஸ் துவங்கி வைத்த போராட்டத்தின் அறுவடைகள்.

இன்றை ஜெர்மனியில் மே 5, 1818 இல் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். அவரது காலத்தில் அவர் புரட்சியாளர், சமூகவியலாளர், வரலாற்றாசிரியர், பொருளாதார நிபுணர் என பல பரிமாணங்களைக் கொண்டிருந்தார். அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கெல்சுடன் இணைந்து 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் உலகப் புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். இன்றும் தொழிலாளர்களுக்கு அந்தப் புத்தகம் ஒரு பாலபாடம். ஒரு தொழிலாளி ஏன் தொழிலாளியாக மேலும் மேலும் ஏழையாகிறார், ஒரு முதலாளி மேலும் மேலும் பணம் சேர்த்து ஏன் பணக்காரராகிறார் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்த புத்தகம் இது. உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலும் அதுதான்.

பின்னர் பல ஆண்டுகள் ஆய்வு செய்து தாஸ் கேப்பிட்டல் அல்லது மூலதனம் எனும் மாபெரும் பொருளாதார ஆய்வு நூலை மார்க்ஸ் எழுதினார். அதன் முதல் தொகுதி 1867 ஆம் ஆண்டில் பெர்லினில் வெளியிடப்பட்டது. அந்த நூலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை அவரது நண்பர் ஏங்கெல்ஸ், மார்க்சின் மறைவுக்கு பிறகு வெளியிட்டார். அந்த நூல் இன்றைய பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது, அதன் முரண்பாடுகள் என்ன, அந்த முரண்பாடுகள் என்ன நெருக்கடிகளை ஏற்படுத்தும், உலக நாடுகளுக்கிடையே போர் வருவதற்கு காரணம் என்ன என்று அபாரமாக விளக்கியிருப்பார். அந்த நூலை படித்துப் புரிந்து கொள்வதற்கு நமக்கு வரலாறு, இலக்கியம், பொருளாதாரம், கணிதம், சமூகவியல், அறிவியல் போன்ற பல்துறை அறிவுப் பரிச்சயம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

கார்ல் மார்க்ஸ் மார்ச் 14, 1883 அன்று இலண்டனில் காலமானார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்தார். மார்க்ஸ் இறந்த போது அவரது நண்பர் ஏங்கெல்ஸ், “ மனித குலத்தில் ஒரு தலை குறைந்து விட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை" என்று எழுதினார். ஆம். அது உண்மையிலேயே மாபெரும் தலைதான்.

மார்க்சின் முக்கியத்துவம் என்ன? மார்க்சுக்கு முன்பே கூட மனிதனுடைய அறிவு பல இயற்கை நிகழ்வுகளையும், விதிகளையும் விஞ்ஞான ரீதியாக விளக்கியிருக்கிறது. ஆனால் சமூகவியல் துறையில் உள்ள உறவுகளை எவராலும் விளக்க முடியவில்லை. சொல்லப் போனால் அத்துறை விற்பன்னர்கள் இருட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். மார்க்ஸ் மட்டுமே இத்துறையில் வெளிச்சத்தை பாய்ச்சினார். சமூகவியல் பிரச்சினைகளை முற்றிலும் விளக்கிக் கூற முடியும் என்று மார்க்ஸ் சொல்லவில்லை. ஆனால் சமூகப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள ஒரு விஞ்ஞான ரீதியான பாதையை அவர் கட்டியமைத்தார்.

மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகில் வாழ்கிறது. தொடர்ந்து போராடவும் செய்கிறது. அது விஞ்ஞானி, தத்துவஞானி, அரசியல்வாதி ஆகியோரது பணியில் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும், சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனிதகுலத்தினருக்கு துன்பங்களையும், யுத்தங்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த பூமியில் மனிதனுடைய மாபெரும் தகுதிகளுக்கேற்ப சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு அது உதவி செய்கிறது.

மார்க்ஸ் வேறு எந்த மாபெரும் எழுத்தாளரைக் காட்டிலும் ஒரு வாக்கியத்தில் ஆழமான சிந்தனையை ஏற்றிச் சொல்வது எப்படி என்பதை நன்றாக அறிந்திருந்தார். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்..

“மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி"

“விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல, அது உணர்ச்சியின் அறிவு. அது சிறு கத்தியல்ல, அது ஒரு ஆயுதம்"

“அநியாயமான முறைகள் அவசியமாக இருக்கின்ற குறிக்கோள், நியாயமான குறிக்கோள் அல்ல.”

“கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.”

நல்லது, நீங்கள் இன்றைய அரசியல், பொருளாதாரம், வரலாறு மூன்றையும் படிக்க விரும்புகிறீர்களா? அதற்கு மார்க்ஸின் எழுத்துக்கள் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?