Putin

 

Twitter

உலகம்

உக்ரைன் போர்: வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா - முடிகிறதா சகாப்தம்?

Antony Ajay R

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை அடுத்து ரஷ்யா தனது கடனை எப்படி அடைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நேற்று மட்டும் ரஷ்யா 2 டாலர் மதிப்பிலான பத்திரங்களின் மூலம் 117 மில்லியன் டாலர் வட்டியை முதலீட்டாளர்களுக்குச் செலுத்த வேண்டும்.

உலகளாவிய கடன் ரேட்டிங் ஏஜென்சிகள் ரஷ்யா கடனை திருப்புச் செலுத்தாது என்று எச்சரித்திருக்கின்றன. எவ்வாறாயினும் செலுத்த வேண்டிய வட்டியை இப்போது செலுத்தி விட்டதாகவும், அதற்கு அமெரிக்க வங்கிகளின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் ரஷ்ய நிதி அமைச்சர் கூறினார்.

எனினும் வட்டி செலுத்துவதற்கான நேற்றைய காலக்கெடு பூர்த்தி செய்யப்பட்டதா இல்லையா என்பது இதுவரை தெளிவாக இல்லை.

ரஷ்யா ஏன் கடனை செலுத்த முடியாது?

ரஷ்ய அரசாங்கம் மற்றும் ரஷ்ய நிறுவனங்களான Gazprom, Lukoil மற்றும் Sberbank போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 150 பில்லியன் டாலர் வரை கடன்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை டாலர் மற்றும் யூரோ செலாவணிகளில் உள்ளது. மேலும் கடன் திருப்புதல், வட்டி செலுத்துதல் ஆகியவை மேற்கண்ட செலாவணிகளில் செய்யப்பட வேண்டும்.

உக்ரைன் போருக்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, ரஷ்யா தனது அன்னிய செலாவணி இருப்பான 630 பில்லியன் டாலரில், பெரும்பாலான பகுதியைப் பயன்படுத்த முடியாத படி இருக்கிறது. இருப்பினும் தற்போதும் ரஷ்யா வெளிநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயுவை விற்று வருகிறது. இதற்காகக் கிடைக்கும் அன்னியச் செலாவணியை அது பயன்படுத்த முடியும்.

ரஷ்யா கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், இதுதான் 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகக் கடன் செலுத்தா நிலையை அடையும். 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு கம்யூனிச அரசு பழைய ஜார் வம்ச ஆட்சியின் கடனை திருப்பிச் செலுத்த மறுத்து விட்டது. அதற்குப் பிறகு அன்னிய செலாவணி கடனை திருப்பிச் செலுத்தா நிலை இதுவாகத்தான் இருக்கும்.

Russia

ரஷ்யா தனது கடனை ரூபிள் செலாவணியில் செலுத்த முடியுமா?

தற்போதைக்கு ரஷ்யா உள்நாட்டில் வைத்திருக்கும் டாலர்களைப் பயன்படுத்தி கடன், வட்டி செலுத்தினால் இப்போதைக்குக் கவலைகள் இல்லை.

இன்று ரஷ்யாவுக்கு 117 மில்லியன் டாலர் வட்டி நிலுவையிலிருந்தாலும் உண்மையில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பணம் செலுத்த அவகாசம் உள்ளது. எனவே அந்த நாள் வரை ரஷ்யா கடனை திருப்பிச் செலுத்தாத நாடு என்று கருது முடியது எனக் கடன் ரேட்டிங் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது வாய்ப்பு ரஷ்யா பணத்தை ரூபிளில் செலுத்துவது. ஏற்கனவே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் டாலர் அல்லது யூரோ செலாவணி நிறுத்தப்பட்டால் அதற்குப் பதில் ரூபிளில் கடன், வட்டியைக் கட்டுவதாகச் சர்வதேச முதலீட்டாளர்களிடம் கூறியிருக்கிறது.

இருப்பினும் நேற்று செலுத்த வேண்டிய இரண்டு டாலர் மதிப்பிலான பத்திரங்களின் மூலம் செலுத்தப்பட வேண்டிய கடனை வேறு செலாவணியால் செலுத்த முடியாது. இந்த நிபந்தனை ரஷ்யாவைக் கடன் செலுத்த முடியாத நிலைக்குக் கொண்டு போகும். ரஷ்யாவின் சில கடன் ஒப்பந்தங்கள் வேறு செலாவணிகளில் திருப்பித் தருவதை அனுமதிக்கின்றன. அந்த ஒப்பந்தங்களின் படி ரூபிளில் செலுத்தலாம்.

அதிலும் ஒரு பிரச்சினை என்னவென்றால் டாலர் மற்றும் யூரோவிற்கு நிகராக ரூபிளின் மதிப்பு என்ன என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பார்கள். இன்றைக்கு ரூபிளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை ஒட்டி இந்த பிரச்சினை எழும்.

ரஷ்யாவிற்குக் கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நாடுகளின் நிலை என்ன?

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவில் தங்களது முதலீடுகளின் மதிப்பு சரிந்து போயிருப்பதை முதலீட்டாளர்கள் உணர்ந்துள்ளனர். ரஷ்யாவின் நிதி நம்பகத்தன்மை குறைந்து போயிருக்கும் நேரத்தில் முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்பதன் மூலம் எதிர்வினையாற்றுவதற்கு நேரமே இல்லாமல் போய் விட்டது.

கடன் ரேட்டிங் நிறுவனமான மூடிஸ், ரஷ்யாவின் கடன் திருப்பும் திறனைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. தற்போது 2 ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் நிலை மேலும் வீழ்ச்சியடையலாம். இந்த மதிப்பீட்டின் படி ரஷ்யாவில் முதலீடு செய்த அன்னிய நிதி முதலீட்டாளர்கள் தமது பணத்தை 35% முதல் 65% வரை இழக்க நேரிடும் என மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கிறது.

Economy

ரஷ்யாவின் நிதி பிரச்சினையால் உலகப் பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பு?

1998 ஆம் ஆண்டில் ரஷ்யா கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலை நிதிச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போதைய நெருக்கடி ஒரு குறியீடு என்றாலும் அது மேலும் கடுமையான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனநர்கள் கூறுகிறார்கள்.

ரஷ்யாவின் போரால் 2022 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சி 4.4% இருக்குமென ஐஎம்எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி முனையம் கூறியிருக்கிறது. இருப்பினும் இதற்கு மேல் ரஷ்ய நெருக்கடி உலக நிதி அமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்காது என்றும் அது கூறுகிறது.

அதே நேரம் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டில் பொருளாதார மந்தை நிலைக்கு வழிவகுக்கும். கூடவே உலக உணவு மற்றும் எரிசக்தி விலைகைள உயருமென ஐஎம்எஃப் கூறுகிறது.

கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நிலை ரஷ்யாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

எந்த ஒரு கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ரஷ்யாவில் பெரும் பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உக்ரைன் மீதான போருக்கு முன்பு ரஷ்யா கடனை திருப்பிச் செலுத்தும் நம்பகமான நாடு என்ற நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

தடை காரணமாகப் பெருந்திரளான வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி விட்டன. ரூபிளின் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே கடுமையான கடன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 7% குறையும்.

உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யாவில் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தின்படி 9.15% ஆகும். தற்போது ரஷ்ய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 9.5% இதிலிருந்து 20% ஆக உயர்த்தியிருந்தாலும் பண வீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் என்றால் ஏதோ குண்டு வெடித்து ஒரு நாட்டின் மக்கள் மட்டும் சாகவில்லை. அதன் பாதிப்புகள் ரஷ்யா முதல் உலக நாடுகள் வரை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம். இப்படி உக்ரைன் நாட்டு மக்களைக் கொன்று சொந்த நாட்டு மக்களை நெருக்கடியில் தள்ளிவிடும் ரஷ்ய அதிபர் புடினிடம் பதில் ஏதும் இருக்கிறதா?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?