Hezbollah: இஸ்ரேலுக்கு கூடுதல் தலைவலி - ஹமாஸுக்கு ஆதரவு தரும் லெபனான் இயக்கம் - Explained Twitter
உலகம்

Hezbollah: இஸ்ரேலுக்கு கூடுதல் தலைவலி - ஹமாஸுக்கு ஆதரவு தரும் லெபனான் இயக்கம் - Explained

Antony Ajay R

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் அடிக்கடி இடம்பெறுகிறது லெபனானின் ஹெசபொல்லா என்ற அமைப்பு.

இஸ்ரேலுக்கு இந்த அமைப்புக்கும் இடையில் பல தாக்குதல்கள் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக 2006ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய போருக்கு பிறகு இருதரப்பும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன.

ஹமாஸுக்கு ஹெசபொல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்திருப்பதனால், இது இந்த மோதலை இன்னும் விரிவான போராக மாற்ற வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

ஏனென்றால் ஈரானின் துணையுடன் இயங்கிவரும் ஹெசபொல்லா அமைப்பு, கடந்த வாரம் வடக்கு இஸ்ரேலில் சில ஏவுகணைகளை வீசியது. எனினும் இப்போது மிகப் பெரிய போர் ஏற்படாமல் தவிர்க்க ஹெசபொல்லா அமைப்பின் தாக்குதல்கள் கட்டுப்படுப்பட்டுள்ளன.

அக்டோபர் 15ம் தேதி இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், "எங்களுக்கு வடக்கு எல்லையில் போரிடுவதில் விருப்பம் இல்லை. ஹெசபொல்லா அவர்களது தாக்குதலை கட்டுப்படுத்தினால் நாங்களும் அப்படியே இருப்போம்" எனக் கூறினார்.

ஹெசபொல்லாவின் தொடக்க காலம்.

ஹெசபொல்லாவின் தொடக்க காலத்தை அப்பட்டமாக கூறிவிட முடியாது. இந்த இயக்கத்தின் கருத்துக்கள் 1960,70களில் வேர்களைக் கொண்டுள்ளது.

ஆனால் இயக்கமாக ஹெசபொல்லா உருவானது 1982களில் தான். அது தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்திய காலகட்டம். அப்போது ஈரானின் ஷியா முஸ்லீம் தலைவர்கள் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இயக்கம்.

இது ஈரானின் இஸ்லாமிய புரட்சியை பரப்பும் முயற்சியாக பார்க்கப்பட்டது. உள்நாட்டுப்போர் நடந்துவந்த லெபனானில் இருந்த ஷியா முஸ்லீம்களை சேர்த்துக்கொண்டு வலுவடைந்தது ஹெசபொல்லா அமைப்பு.

2000களில் லெபனானை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கிய பிறகு. ஹெசபொல்லா அமைப்பு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இஸ்ரேல் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய ஹெசபொல்லா, தங்களது இராணுவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தியது.

ஒரு மறைமுகமான அமைப்பாக தொடங்கப்பட்டு இன்று லெபனான் அரசில் ஆதிக்கம் செலுத்தும் இடத்துக்கு வந்திருக்கிறது ஹெசபொல்லா அமைப்பு.

அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள் மற்றும் சில அரபு நாடுகளும் இந்த இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக கருதுகின்றன.

ஹெசபொல்லாவின் இராணுவம்

ஹெசபொல்லா இராணுவம் தெற்கு லெபனானில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் வளர்ந்திருக்கிறது. இந்த பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற முயன்ற போது பல கொரில்லா போர்களை மேற்கொண்டு 2000ம் ஆண்டு இஸ்ரேலை பின்வாங்க செய்தது.

2006ம் ஆண்டு இஸ்ரேலுடன் மீண்டும் போர் ஏற்பட்டபோது தங்களது இராணுவம் முன்னேற்றமடைந்துள்ளதை உலகுக்கு வெளிப்படுத்தியது ஹெசபொல்லா அமைப்பு. சில இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கொன்று இருவரை கடத்தி வந்தது.

5 வாரம் நீடித்த இந்த மோதலில் ஹெசபொல்லா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவியது. இதில் லெபனான் மக்களும் பாதிக்கப்பட்டனர். லெபனானில் 1200 பேர் வரைக் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் பொதுமக்கள். இஸ்ரேல் வீரர்கள் 158 பேர் கொல்லப்பட்டனர்.

முன்னரே கூறியது போல ஹெசபொல்லா ஈரானின் ஷியா முஸ்லீம்கள் ஆதரவுடன் செயல்படுகிறது. சிரியாவில் அதிபர் அல்-அசத்துக்கு ஆதரவாக சன்னி முஸ்லீம்களை எதிர்த்து போரிட்டது ஹெசபொல்லா அமைப்பு. இந்த தருணத்தில் ஹெசபொல்லா அமைப்பின் இராணுவபலம் பெருகியது.

இந்த அமைப்பிடம் துல்லியமான ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் இருக்கின்றன. இஸ்ரேலின் எந்த ஒரு பகுதியையும் தங்களால் தாக்க முடியும் என்கின்றனர்.

2021ம் ஆண்டு ஹெசபொல்லா அமைப்பின் தலைவர் செய்யது ஹசன் நஸ்ரல்லா, அவர்களிடம் 1 லட்சம் வீரர்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் ஹமாஸ் போரில் என்ன செய்கிறது ஹெசபொல்லா?

ஹமாஸும் சரி, ஜெசபொல்லாவும் சரி மற்றொரு பாலஸ்தீன அமைப்பான இஸ்லாமிக் ஜிகாத்தும் சரி ஈரானின் துணையுடனே செயல்பட்டு வருகின்றன.

ஈரானிய ஆதரவு குழுக்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளது ஹெசபொல்லா. ஏமனில் ஹவுதி படையினருக்கு ஆதர்வாக ஹெசபொல்லா சண்டையிட்டது என சவுதி அரேபியா குற்றம் சாட்டியிருக்கிறது ஆனால் இதனை ஹெசபொல்லா மறுத்துள்ளது.

இதுபோலவே ஹமாஸுக்கு ஆதரவாக வடக்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை வீசியது ஹெசபொல்லா. ஆனால் இஸ்ரேலின் அடுத்தடுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் ஹெசபொல்லா

ஹெசபொல்லா இஸ்ரேல் தாக்குதலில் இருந்து லெபனானைக் காப்பதாக கூறிக்கொள்கிறது. அங்குள்ள ஷியா மக்களிடம் பிரசித்தி பெற்ற அமைப்பாக திகழ்கிறது.

லெபனான் நாடாளுமன்றத்தில் ஹெசபொல்லாவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.

ஆனாலும் அமெரிக்காவையும் அதன் நட்புநாடுகளான அரபு நாடுகளும் இஸ்ரேலும் ஹெசபொல்லாவை தீவிரவாத அமைப்பாகவே கருதுகின்றனர். மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மீது ஹெசபொல்லா தாக்குதல் நடத்தியதாக மேற்கத்திய நாடுகள் குற்ற்ம் சுமத்துகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?