Putin

 

NewsSense

உலகம்

Morning News Tamil : 'உக்ரைன் இருக்காது' - Putin எச்சரிக்கை - முக்கிய செய்திகள்

Antony Ajay R

உக்ரைன் என்ற நாடு இருக்குமா எனத் தெரியாது? - புடின் எச்சரிக்கை

உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம். இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும்,’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனில் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று விமானப்பணிப் பெண்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: உக்ரைனில் நடக்கும் அனைத்து அவலத்திற்கும் அந்நாட்டின் தலைமைதான் காரணம். இதை அந்நாட்டின் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்வதை இனியும் தொடர்ந்தால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழக்கூடும். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும்.

உக்ரைன் அரசு ஆபத்தில் இருக்கிறது. தற்காலிக போர் நிறுத்த முயற்சியை நாசம் செய்து விட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்கின்றன. திணிக்கப்படும் இந்த தடைகள், ஒருவகையில் போர் அறிவிப்பதற்கு சமமானவை. ஆனால், கடவுளுக்கு நன்றி, நாங்கள் இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை. இவ்வாறு புடின் கூறி உள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஏரோபிளோட், நாளை முதல் பெலாரஸ் தவிர அனைத்து சர்வதேச விமானங்களையும் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று 3ம் கட்ட பேச்சு வார்த்தை

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்கனவே 2 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பெலாரஸ் நாட்டு எல்லையில் இப்பேச்சுவார்த்தை நடக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐஸ்வர்யாவின்  பதிவு

செல்வராகவன் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உருக்கமான பதிவு

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்வதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். கடந்த 2004-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்

இந்நிலையில், இவர்களின் பிரிவு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரு தரப்பு குடும்பத்தினரும் தம்பதியை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது அதிலும் குறிப்பாக தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே குடும்ப சண்டைதான் அவர்கள் பிரியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்

இந்நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் பிறந்தநாளன்று, ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் செல்வராகவனுக்குபிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் வகையில், அவரை கட்டிப்பிடித்ததுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குரு, நண்பர், தந்தை உருவம் என்று பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஒட்டுமொத்த செல்வராகவன்-தனுஷ் குடும்பமும் உணர்ச்சி மிகுதியில் ஆழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் உள்ள ரசிகர்கள், திரை பிரபலங்கள் அனைவரும், தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே சின்ன சண்டைதான் விரைவில் இருவரும் பேசி சமாதானம் ஆகிவிடுவார்கள். அதற்கு இந்த பதிவு மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Students

'நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் உக்ரைன் சென்றேன்' - கோவை திரும்பிய மாணவி பேட்டி

கரூரில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டுபிளஸ் 2 தேர்வில் 425 மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சி பெற்ற நிலையில் நீட் தேர்வில் 210 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் உக்ரைன் நாட்டின் டெனிப்ரோ நகரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது அங்கு 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதால் அச்சமடைந்த ஸ்ரீநிதியின் பெற்றோர் உக்ரைன் டெனிப்ரோவில் உள்ள மகளுடன் அன்றைய தினம் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை போனில பேசி அங்குள்ள நிலவரங்களை தெரிந்துக் கொண்டனர். மேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநிதி இன்று (மார்ச் 6ம் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை விமானநிலையத்தை வந்தடைத்தார். அவரது தந்தை கேப்ரியல் மகளை வரவேற்று அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான குன்னூருக்கு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து ஸ்ரீநிதிகூறியது, ”நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ இடம் கிடைக்காததால் உக்ரைனில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கிய நிலையில் டெனிப்ரோவில் விடுதி அருகே பெரியளவிலான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால், அதன்பிறகு தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை. 5 நாட்கள் விடுதியில்தான் தங்கியிருந்தோம்.

கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனின் அண்டைநாடான ருமேனியா சென்றடைந்தோம். அங்கு தங்கியிருந்த நிலையில் கடந்த 4ம் தேதி இரவு ருமேனியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்று காலை டெல்லியை வந்தடைந்தோம். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு கோவையை வந்தடைந்தேன்” என்றார்.

Chennai Book fair

சென்னை புத்தக கண்காட்சி நிறைவடைந்தது; 12 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விறப்னை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் முடிந்த நிலையில், சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை ரூ.12 கோடிமதிப்பு புத்தகங்கள் விற்றுள்ளதாக, பபாசி சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது புத்தகக் காட்சி பிப்ரவரி 16ம் தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியில் 800 அரங்குகள் இடம் பெற்றன. இவற்றில் சுமார் 1 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. 18 நாட்கள் நடந்த, இந்த புத்தக காட்சியை கண்டுகளிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்ததால், காட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே 40 ஆயிரம் பேர் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

கடந்த 3300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருநை ஆற்றின் நாகரிக தொல்பொருள் கண்காட்சி அரங்கு காட்சி வளாகத்தை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்ததால் அதிக அளவில் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். கடந்த 18 நாட்களாக நடந்த புத்தக காட்சிக்கு நேற்று வரை சுமார் 15 லட்சம் வாசகர்கள், பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதுவரை ரூ. 12 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த புத்தக காட்சி, வரும் 18ம் தேதி முதல் திருவள்ளூரில் தொடங்க உள்ளது.

ரவீந்திர ஜடேஜா

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாக வென்றது இந்திய அணி

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.


100வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 4 ரன்களில் சதம் தவற விட்டார். அவர் 96 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து இருந்தது.


நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. அதில் அஸ்வின் 61 ரன்களில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது.


இதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அந்த அணியில் நிசாங்கா அரை சதம் (61) எடுத்துள்ளார். அவரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களிலும், சிலர் 30 ரன்களுக்குள்ளும் சுருண்டனர். இதனால், இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது.


இதனால், 400 ரன்கள் பின்தங்கி இருந்த இலங்கை 2வது இன்னிங்சை விளையாடியது. இந்த போட்டியின் தேநீர் இடைவேளையில் இலங்கை 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. அசலன்கா (20), மேத்யூஸ் (28) ரன்கள், லக்மல் (0) எடுத்து ஆட்டமிழந்தனர்.


ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய நிரோஷான் டிக்வெல்லா அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் இலங்கை அணி 178 ரங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.


இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினர். ஷமி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இறுதியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் அடித்திருந்த போது டிக்ளர் செய்யப்பட்டதனால் 200 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. "இலங்கை வீரர்கள் சோர்வுற்றிருந்ததால் அவர்களை எளிமையாக வீழ்த்திவிட முடியும் என்பதால் டிக்ளர் செய்தோம். டிக்ளர் செய்தது என் முடிவு தான்" என ஜடேஜா கூறியுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?