Saudi Arabia

 

Pexels

உலகம்

செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

அந்தக் காலத்திய அரேபியாவில் வணிகர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடும் திறனையும், அறிவையும் கொண்டிருந்தனர். விவசாயமோ, மேய்ச்சலோ அற்ற அரேபிய தீபகற்பத்தின் நாட்டுப்புற சமூகம் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து கிடந்தது.

Govind

நவீன செளதி அரேபியாவின் வரலாறு என்பது அதன் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பின் துவங்குகின்றது. ஆனால், அரேபியாவிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர்கள் உலவிய நிலம் அது. அப்போது அரேபிய தீபகற்பம் வளமான பகுதியாக இருந்தது. ஆறுகளும், குளங்களும், புல் வெளிகளும் என அந்த நிலப்பரப்பு செழுமையாக இருந்தது.

Saudi Arabia

மனிதக் குலத்தின் யாத்திரை

பின்னர் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய நவீன மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து தனது யாத்திரையைத் துவங்கிய போது முதலில் கால் வைத்தது மத்திய கிழக்குப் பகுதியில் தான். அங்கிருந்து தான் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் நம் முன்னோர்கள் தங்கள் பயணத்தை விரிவுபடுத்தினர்.

சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி சில நூறாண்டுகள் நீடித்த கடைசி பனியுகம், பூமியின் நிலவியல் தன்மைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. வளமான அரேபிய தீபகற்பம் கொடும் பாலைவனமானது. காடுகளும், அழகிய புல்வெளிகளும் அழிந்து போயின. அவற்றின் இடங்களை மணற்குன்றுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அரேபிய தீபகற்பத்தை அலங்கரித்த பல விலங்கினங்கள் அழிந்து போயின. எனினும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த நவீன மனித இனம் இயற்கையின் கொடும் தாக்குதலைத் தீரத்துடன் எதிர் கொண்டு அங்கேயே தங்கியது. போராடியது.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் செழிப்பாய் விளங்கியது எகிப்து ராஜ்ஜியம். அது கிழக்கத்திய நாடுகளுடன் நடத்திய வணிகத்திற்கு நில வழியையே பெரிதும் சார்ந்திருந்தது. கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக மத்திய கிழக்கு விளங்கியது. கடல் வழித்தடங்களும் அரேபியத் தீபகற்பத்தின் கரைகளோடு பிணைந்திருந்தன.

அந்தக் காலத்திய அரேபியாவில் வணிகர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடும் திறனையும், அறிவையும் கொண்டிருந்தனர். விவசாயமோ, மேய்ச்சலோ அற்ற அரேபிய தீபகற்பத்தின் நாட்டுப்புற சமூகம் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து கிடந்தது. அந்த இனக்குழுக்களில் பல நிலம் மற்றும் கடல் வழி வணிகத் தடங்களில் கொள்ளையடிக்கும் வேலையையே செய்து வந்தன.

Saudi Arabia

நபிகளுக்குப் பின்

கி.பி 570-ம் ஆண்டு மெக்காவில் பிறந்தார் நபிகள் நாயகம் எனப்படும் முகமது நபி. இஸ்லாமியர் அல்லாதவர்கள் நபிகள் நாயகத்தை பெரும்பாலும் ஒரு இறைத்தூதராக மட்டுமே நம்புகின்றனர். உண்மையில் அவர் மிகச் சிறந்த இராணுவ நிபுணர். சிறு சிறு இனக்குழுக்களாகப் பிரிந்து தமக்குள் சதா நேரமும் அடித்துக் கொண்டிருந்த அரபு மக்களை ஒருங்கிணைக்கும் அளவுக்கு அபாரமான அரசியல் அறிவும், நிர்வாகத் திறனும் வாய்த்தவர்.

நபிகள் நாயகத்தின் காலத்திற்குப் பின் அவரது மாமனார் அபுபக்கர் மிகப் பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அவர் முதலாம் காலீஃபா என்று அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் ரஷீதுன் கிலாஃபத் என்றிழைக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் செல்வாக்கு செலுத்திய முக்கியமான கிலாஃபத்துகளாக ரஷீத்துன், உமாயத், அப்பாஸித் மற்றும் ஒட்டோமன் கிலாஃபத்துகளைச் சொல்லலாம். இவை முகமது நபியின் காலத்திற்குப் பிறகு 20-ம் நூற்றாண்டின் துவக்கம் வரை மத்திய கிழக்குப் பகுதியில் வெவ்வேறு காலகட்டங்களில் செல்வாக்கு செலுத்தி வந்தன. முக்கியமாக மத்திய காலங்களில் ஐரோப்பியக் கிறித்தவ நாடுகள் தொடுத்த சிலுவைப் போர்களுக்கு இந்த இசுலாமியச் சாம்ராஜ்ஜியங்கள் பதிலடி கொடுத்தன. பல நூற்றாண்டு காலமாக நடந்த அந்தப் போர்களில் கோடிக்கணக்கானோர் மாண்டனர்.

போரும் வாழ்வும்

போரும் கலாச்சாரமும்

அரபு தீபகற்பத்தின் வரலாறும், அந்த மண்ணின் கலாச்சாரமும் இந்தப் போர்களின் ஊடாகவே வடிவமைக்கப்பட்டன. பாலைவனத்தின் தாங்க முடியாத வெப்பம் ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் பிழைப்பதற்கான வாய்ப்பாக இருந்த வணிகமும் அத்தனை எளிதானதல்ல. போர்க்காலச் சூழல், நீண்ட வணிகத் தடம், கடல் மார்க்கமான வணிகப் பாதையின் சவால்கள் என அரபு தீபகற்பத்தின் வாழ்வியல் எந்நேரமும் கொந்தளிப்பான நிலையிலேயே இருந்தது.

நபிகள் நாயகத்தின் பிறப்பிற்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து அரபு தீபகற்பத்தின் வரலாற்றைத் தீர்க்கமாக மாற்றும் மற்றொரு நிகழ்வு என்றால் அது அந்நிலத்தில் கச்சா எண்ணெய் கண்டறியப்பட்டது தான். சென்ற 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மத்திய கிழக்கிலும் 1938-ம் ஆண்டு சவுதி அரேபியாவிலும் பெட்ரோல் கண்டறியப்பட்டது.

மத்திய கிழக்கின் மண்ணுக்குள் எண்ணை வளம் புதைந்து கிடப்பதை மேற்குலக நாடுகள் அறிந்த கொண்ட பின் வரலாறு வேறு திசைக்குத் திரும்பியது. அது வரை ‘இசுலாமிய காட்டுமிராண்டி இனக்குழுக்கள்’ என வெறுப்போடு பார்த்த மேற்குலகம் அரேபியத் தீபகற்பத்தின் மீது தனது காதல் பார்வையை வீசத் துவங்கியது.

செளதியின் எண்ணெய் வளம்


செளதியின் எண்ணெய் வளம்

நவீன சவுதி அரேபியாவின் அரசியலை தீர்மானிக்கக் காரணமாக இருந்தது எண்ணெய் வளம்தான். 20-ம் நூற்றாண்டில்தான் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தான் நவீன தொழிற்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. இந்த நாடுகளின் தொழில் வளர்ச்சியை உந்தித் தள்ள எண்ணெய் தேவையாக இருந்தது. இத்தனைக்கும் அமெரிக்க நிலத்தினடியிலும் அள்ள அள்ளக் குறையாத எண்ணை வளம் இருக்கத் தான் செய்தது. இன்றளவும் தனது நிலத்தடி எண்ணை வளத்தைப் பெரிதும் சுரண்டாமல் வைத்திருக்கும் அமெரிக்கா, சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே தனது கவனத்தை மத்திய கிழக்கின் பக்கம் திருப்பியது.

தொழிற்துறையில் வளர்ந்திருந்த மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு இடையே வளைகுடா நாடுகளின் எண்ணை வளத்தைக் கைப்பற்றும் போட்டி முதலாம் உலகப் போருக்கு பிந்தைய ஆண்டுகளில் உக்கிரமடைந்தது.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் மதரீதியாக நடந்து வந்த இன்னொரு மாற்றமும் நமது கவனத்திற்கு உரியது. அது என்ன என்பதை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?