Vladimir Komarov : First cosmonaut to die in space Twitter
உலகம்

Vladimir Komarov: உலக வரலாற்றில் முதல் முறையாக வானில் உயிரிழந்த விண்வெளி வீரர்- யார் இவர்?

NewsSense Editorial Team

அமெரிக்கா மற்றும் ரஷ்யா எல்லா துறைகளிலும் நேரடியாக போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருந்த காலம். அந்த இரு நாடுகளும் ஆயுதங்களை ஏந்தி போர் தொடுக்கவில்லையே தவிர, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, உணவு… என எல்லாத் துறைகளிலும் நேரடியாக மோதிக்கொண்டன. இதன் வெளிப்பாடு விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி திட்டங்களிலும் எதிரொலித்தன.

1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, யூரி காகரின் என்கிற சோவியத் ரஷ்யாவின் விண்வெளி வீரர், வோஸ்டாக் 1 (Vostok 1) என்கிற விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்கிற பெருமையை தட்டிச் சென்றார். 108 நிமிட விண்வெளி பயணத்திற்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கும் உயிரோடு திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளியில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட இன்னும் அதிகம் பிரயத்தனப்பட்டனர். அதில் பலியான உன்னத விண்வெளி வீரர் தான் விளாதிமிர் கொமரொவ்.

யார் இந்த விளாதிமிர் கொமரொவ்?

1927 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி மாஸ்கோ நகரத்தில் ஒரு கூலித் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த விளாதிமிர் கொமரொவ், 1942 ஆம் ஆண்டு தன்னுடைய பதின் வயதிலேயே ஃபர்ஸ்ட் மாஸ்கோ ஸ்பெஷல் ஏர் ஃபோர்ஸ் பள்ளியில் சேர்ந்தார்.

சிறுவயதிலிருந்தே கொமரொவ்வுக்கு கணிதத்தின் மீதும், ஏவியேஷன் துறை மீதும் காதல் இருந்தது. அதன்பின் ராணுவ விமானப்படை கல்லூரியில் தன் பயிற்சியையும் நிறைவு செய்தார்.

1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் விமானப்படையில் லெப்டினண்ட் அதிகாரியாக பணியில் அமர்த்தபட்டார். இந்த அடிப்படை கல்வித் தேர்ச்சிகளை எல்லாம் தாண்டி சோவியத் ரஷ்யாவின் மிகச்சிறந்த சோதனை விமானிகளில் ஒருவராக பணியாற்றி வந்தார்.

விளாதிமிர் கொமரொவ்வுக்கு எந்த அளவுக்கு விமானங்கள் மீது காதலும் ஈர்ப்பும் இருந்ததோ, அதே அளவுக்கு சோவியத் ரஷ்யா என்கிற தன் தாய் நாட்டின் மீதும் அளப்பரிய மரியாதை வைத்திருந்தார் என்கிறது பிபிசி காணொளி ஒன்று.

1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்வெளி வீரர்களுக்கான தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று பரிசோதனைகள் மற்றும் தேர்வுகளில் கலந்து கொண்ட 3,000 பேரில் வெறும் 20 பேர் மட்டுமே ஏர்போர்ஸ் குரூப் 1 என்கிற பெயரில் தேர்வு செய்யப்பட்டனர்.

1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Voskhod 1 என்கிற விண்வெளி பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் விளாதிமிர் கொமரொவ்.

சோவியத்தின் அதிரடித் திட்டம்:

பனிப்போர் காலத்தில் விண்வெளி துறையில் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் ரஷ்யா முதலில் தன் காலடித்தடத்தை பதித்தது. ஸ்புட்னிக் 1 என்கிற செயற்கைக் கோளை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பியது ரஷ்யா தான். அதேபோல முதன் முதலில் விண்வெளிக்கு லைக்கா என்கிற நாயை அதாவது பூமியில் வாழும் ஒரு உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பி வைத்ததும் ரஷ்யா தான்.

விளாதிமிர் கொமரொவ்வின் வெற்றிகரமான வொஸ்கோட் 1 திட்டத்தைத் தொடர்ந்து, சோயுஸ் திட்டத்தை கையில் எடுத்தது சோவியத் ரஷ்யா. 1967ஆம் ஆண்டு சோயுஸ் திட்டத்தை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் படி விளாதிமிர் கொமரொவ் ஒரு விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது விண்கலமும் விண்வெளிக்கு ஏவப்பட்டு, முதல் விண்கலத்துக்கு இணையான வேகத்தில் இணைந்து கொள்ளும். இந்த இரண்டாவது விண்கலத்தில் இரு விண்வெளி வீரர்கள் இருப்பர். ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் கொமரொவ், தன்னுடைய முதல் விண்கலத்தை விட்டு இரண்டாவது விண்கலத்திற்கு வந்து சேருவார். அதன்பின் மூன்று பேர் கொண்ட விண்கலம் பூமிக்கு திரும்புவது தான் திட்டமாக வகுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தேதி நெருங்க நெருங்க சோயூஸ் 1 விண்கலத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக திட்டத்தை கைவிட சோவியத் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தயாராக இல்லை.

இதையெல்லாம் கடந்து 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி சோயூஸ் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விண்ணில் ஏவப்பட வேண்டிய சோயுஸ் 2, பல்வேறு காரணங்களால் நிலத்திலிருந்து விண்வெளியை நோக்கி புறப்படவே இல்லை. இந்த விவரங்கள் எல்லாம் பூமியை சுற்றிக் கொண்டிருந்த விளாதிமிர் கொமரொவ்வுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின் அவரை மீண்டும் பூமிக்கு வருமாறு உத்தரவு கொடுக்கப்பட்டது.

அந்த உத்தரவை ஏற்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து தரையிறங்க முயற்சிக்கும்போது சோயூஸ் 1 விண்கலத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறுகள் ஒவ்வொன்றாக அதிகரிக்க தொடங்கின.

கடைசியில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த விண்கலத்தை பாதுகாப்பாகவும் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்திலும் தரையிறங்க உதவிச் செய்யும் என நம்பப்பட்டு வந்த பாராசூட் சரியாக செயல்படவில்லை.

வந்து கொண்டிருந்த சோயுஸ் ஒன் விண்கலம் அதீத வேகத்தில் பூமியில் விழுந்து நொறுங்கியது. விளாதிமிரின் உடலின் மீது ஏற்பட்ட அபரிவிதமான ஜி ஃபோர்ஸ் அழுத்தத்தினாலேயே அவர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு வேளை, ஜி ஃபோர்ஸ் அழுத்தத்தைச் சமாளித்து இருந்தால் கூட, அதிவேகமாக பூமியின் தரையில் விண்கலம் மோதி வெடித்து போது ஏற்பட்ட தீயில் அவர் இறந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. விண்களம் விழுந்த இடத்தை அலசிய போது வெறும் சதைப் பிண்டங்கள் மட்டுமே கிடைத்தன.

கடைசியில் விளாதிமிர் கொமரொவ்வின் உடல் 1967ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி இறுதியஞ்சலி செலுத்தப்பட்டு கிரெம்ளின் வால் நெக்ரோபொலிஸ் என்கிற பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விண்வெளியில் உயிர் நீத்த முதல் மனிதர் என்கிற பெயரை விளாதிமிர் கொமரொவ் பெற்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?