தேங்காய்
தேங்காய் Twitter
உலகம்

உலக தேங்காய் தினம் : தென்னை மரம் டு கோவில் கலசம் - தேங்காயின் பயணம்

ஆர்.ஜே. கிரேசி கோபால்.

சிவ அம்சம் நிறைந்த தேங்காய்

பிரார்த்தனைகள் நிறைவேறக் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுவது வழக்கம். சிலர் விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைத்து வழிபடுவதும் வழக்கம். விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்குப் பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களைக் கொண்ட தேங்காயைச் சிவன் படைத்தார் என்கிறது புராணக்கதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேறப் பக்தர்கள் விநாயகருக்குச் சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

தேங்காய் என்பது மும்மலத்தைக் குறிக்கிறது. தேங்காய் நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை அடிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும். தேங்காய்,இதயத்திற்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. மூன்றாம் கண்ணானது ஞானக் கண் என்பதைக்குறிக்கும். வெண்மை,சத்துவகுணத்தைக் குறிக்கிறது. சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், நமது ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, அந்த சமயத்தில் தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது என்பதுதான் தேங்காய் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

பூரண ஆகுதியில் தேங்காய்

யாகங்களில் மிகவும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் தேங்காய் முதன்மையானது. பூர்ணாஹுதி என்று சொல்லப்படும் யாக நிறைவின் போது தேங்காயைப் பயன்படுத்திச் செய்யப்படும் பூஜையானது நிறைவுபெறுகிறது. வேள்விகள் யாகங்கள் முதலியவற்றில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் யாகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இறுதியாக யாக முடிவில், ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி, அக்னியில் சமர்ப்பிக்கின்றனர். இந்த பூர்ணாஹுதியின்ன் போது இளநீரோ, தேங்காயோ பயன்படுத்தப்படுவதில்லை. கொப்பரைத் தேங்காயே பயன்படுத்தப்படுகிறது. கொப்பரைத்தேங்காயின் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண ஆகுதி” ஆகிற முழுத்தகுதியைப் பெறுகிறது என்பது ஐதீகம்.

செப்டம்பர் 02 தேங்காய் தினம்

செப்டம்பர் 2 ம் தேதி அன்று ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சங்கத்தால் தேங்காய் சங்கத்தால் (APCC) உலக தேங்காய் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக தேங்காய் தினம் முதன்முறையாக 2009 இல் கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் தேங்காய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். நாட்டிலேயே பொள்ளாச்சியில் தான் 40% தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது அறிஞர்கள் கூறுகிறார்கள். தேங்காயிலிருந்து பெறப்படும் எண்ணெய் சோப்பு தேங்காய் சிரட்டை போன்ற பலவிதமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் , உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொள்ளாச்சியிலிருந்து உற்பத்தியாகும் தேங்காய் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் 20 மாநிலங்களுக்கும் உலக அளவில் சுமார் 125 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேங்காய் மற்றும் அதன் இதர பொருட்கள் மனித உடலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கலசத்தில் தேங்காய்

ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி, அதில் நீர் நிரப்பி, அதில் ஏலக்காய், பச்சைக்கற்பூரம், லவங்கம், முதலிய வாசனைத் திரவியங்களைப்போட்டு, அதன் மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்துப் பூஜிப்பதுவே கலச வழிபாடாகும். கலசத்திலேயே இறைவனை ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். மந்திரங்களை எளிதில் கடத்தும் தன்மை கொண்டதால் பித்தளை சொம்பில் அல்லது குடத்தில் வைக்கப்படுகிறது. கூடுதலாக தரப்பை, மாவிலையும் மந்திர சக்திகளைக் கிரகிக்கும் ஆற்றல் பெற்றது.

தேங்காயின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் நடுப்பகுதியிலுள்ள மூன்றாவது கண் நமது ஞானத்தைத் திறக்கும் கண்ணாகவும் அமைந்துள்ளதால் தேங்காய் கலச வழிபாட்டில் முதன்மையாக உள்ளது.

சிதறுகாய் உடைப்பது

சங்கடங்கள், தடைகள் நீங்குவதற்கும், திருஷ்டிகள் அகலுவதற்கும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது மக்களின் வழக்கம். தேங்காய் சுக்கு நூறாய் சிதறுவதைப் போல் பிரச்சனைகளும் சிதறி போகும் என்பது மக்களின் நம்பிக்கை.

கனவில் தேங்காய் வந்தால்

கனவில் தேங்காய் வந்தால் அது மிக நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. கொத்துக்குத்தாக தேங்காயைக் காண்பதோ, மரத்தின் மீது தேங்காய் இருப்பதைப் போன்றோ, உடைந்த தேங்காயைக் கண்டாலோ மிக நல்ல விஷயங்கள் நடக்கப்போவதாகக் கனவு சாஸ்திரங்கள் கூறுகின்றன. காலையில் கண் விழிக்கும் போது தேங்காயில் கண் விழித்தாலும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாகும். தேங்காய் கிடைப்பது போன்று கனவு கண்டால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். அதற்கான சூழல் உண்டாகும்.

தென்னை தலவிருட்சம்

பாடல்பெற்ற திருத்தலங்கள் ஆன திருத்தேங்கூர், வட குரங்காடுதுறை போன்ற தலங்களில் தல விருட்சமாக தென்னை மரம் உள்ளது.

திருத்தேங்கூர் எனப்படும் ஊரானது திருவாரூர் அருகில் உள்ளது. திருவாரூரில் இருந்து திருநெல்லிக்கா எனும் ஊர் சென்று அங்கிருந்து தென்மேற்கே 4கிமீ தொலைவில் உள்ளது திருத்தேங்கூர் எனும் ஊர். திருமகளும் , நவ கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது தனிச்சிறப்பாகும். சோழர்கால கல்வெட்டுகள் நான்கும், பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றும் இந்த தலத்தில் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் பிரஹன் நாயகி சமேத இரஜதகிரீஸ்வரர் ஆலயம். சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர் வழிபட்ட தலமாகும்.

வடகுரங்காடுதுறை எனும் ஊரில் குலைவணங்கீசர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். கர்ப்பிணிப் பெண் ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்க தென்னங்குலையை இறைவன் வளைத்துக்கொடுத்ததால், குலைவணங்கீஸ்வரர் என்றும் இத்தல இறைவன் வழங்கப்படுகிறார். சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வாலி முதலானவர்கள் வழிபட்ட தலமாகும். தாயாரின் பெயர் அழகுசடிமுடியம்மை என்பதாகும். கும்பகோணத்திலிருந்து 20கிமி தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 5கிமீ தொலைவிலும் உள்ளது.

பூமிக்குள் விளையும் பொருட்களை அக்கந்த மூலம் என்று கூறுவார்கள். மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களைக் கந்த மூலம் என்றும் குறிப்பிடுகின்றது. அகந்த மூலமானது மனிதனுக்கு தாம்ச குணத்தைக் கொடுக்கக்கூடியது, கந்த மூலம் சத்வ குணத்தையும் உருவாக்கும் தன்மை உடையது. மரத்தின் உச்சியில் விளையும் கந்த மூலப் பொருளான தேங்காயை மனிதன் உட்கொள்ளும்போது, மனிதனுக்கு சத்வ குணம் மேலோங்கி இன்பத்துடன் வாழலாம். இந்த தேங்காய் தினத்தில் பல்வேறு பயன் தரும் ஒரு தென்னை மரக்கன்றை நட்டு வளர்த்திடுவோம். நம் வீட்டுப்பிள்ளையாய் வளரட்டும் தென்னம்பிள்ளை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?