

இன்று செல்ஃபோன் இல்லாத இடமில்லை. ஒருவரின் அலுவலகப் பணிகள் தொடங்கி அந்தரங்க மருத்துவப் பணிகள் வரை அனைத்துக்கும் செல்ஃபோன் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. மளிகை கடையில் என்ன வாங்க வேண்டும் என்பது தொடங்கி பங்குச் சந்தை டீமேட் கணக்கு பாஸ்வேர்ட் வரை எல்லாமே செல்ஃபோனில் குறிப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.
எனவே செல்ஃபோனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நம் உயிரே போய்விட்டது போல் துடிக்கிறோம். அதை எத்தனை வேகமாக சரி செய்ய முடியுமோ அத்தனை வேகமாக சரி செய்ய விரும்புகிறோம். அப்படி ஒரு நபர் தன் செல்ஃபோனை ரிப்பேர் செய்ய கொடுத்து சில லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரத்தில் சகினாஹா (Sakinaka) பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் பங்கஜ் கதம். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தன் செல்ஃபோனின் ஸ்பீக்கர் சரியாக வேலை பார்க்கவில்லை என, அருகில் இருந்த செல்ஃபோன் பழுது பார்க்கும் கடைக்குச் சென்றுள்ளார்.
அந்தக் கடையில் இருந்த ஊழியர் ஒருவர், செல்ஃபோனில் என்ன பிரச்சனை என்கிற விவரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு, செல்ஃபோனை சிம் கார்ட் உடன் கொடுத்து விட்டுச் செல்லுமாறும், ஒரு சில நாட்களில் பிரச்சனையை சரி செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.
அதை நம்பி, தன் சிம் கார்ட் உடன் அதே கடையில் தன் செல்ஃபோனை கொடுத்துச் சென்றார் பங்கஜ் கதம். செல்ஃபோன் கடை ஊழியர் பங்கஜ் கதமின் செல்ஃபோனில் இருந்த வங்கி செயலிகளைத் திறந்து வங்கிக் கணக்கு வரவு செலவுகளை எல்லாம் பார்த்திருக்கிறார்.
அப்போது பங்கஜ் கதம் லட்சக் கணக்கில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வைத்திருப்பதையும் கவனித்துள்ளார். சட்டென பங்கஜ் கதமின் செல்ஃபோனைப் பயன்படுத்தியே ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்த பணத்தில் 2.2 லட்சம் ரூபாய் வரை வேறு ஒரு கணக்குக்கு பரிமாற்றம் செய்துவிட்டார்.
நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல், அடுத்த நாள் (அக்டோபர் 8ஆம் தேதி), அதற்கு அடுத்த சில நாட்கள் என செல்ஃபோன் ரிப்பேர் கடைக்கு தொடர்ந்து வந்துள்ளார் பங்கஜ் கதம். முதல் நாள் பூட்டி இருக்க, அடுத்த நாள் தன் செல்ஃபோன் குறித்தும், தன் செல்ஃபோனை ரிப்பேர் செய்து தருவதாகக் கூறிய அந்த நபர் குறித்தும் விசாரித்திருக்கிறார். சரியான பதில் கிடைக்கவில்லை.
எனவே தன் நண்பரின் செல்ஃபோனைப் பயன்படுத்தி வங்கி விவரங்களை எல்லாம் சரிபார்த்த போது ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்த பணம் வேறு ஏதோ ஒரு கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்டோபர் 14ஆம் தேதியே சாகினாஹா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை, இது தொடர்பாக விசாரித்து வருகிறது.
வங்கி செயலிகளில் பாஸ்வேர்ட் கேட்கப்படுமே, அதை எல்லாம் எப்படி சமாளித்து பணத்தை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றினார் என்பது குறித்த விவரங்கள் செய்திகளில் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்து காவல்துறை விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களே இனி செல்ஃபோன், லேப்டாப், ஐபேட் போன்ற விஷயங்களை ரிப்பேருக்குக் கொடுக்கும் போது முக்கிய விவரங்கள் ஏதும் இல்லாத படி, ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டுக் கொடுங்கள். இல்லையெனில் அருகிலேயே இருந்து பழுது பார்த்து கையோடு வாங்கி வாருங்கள். இல்லையெனில், பங்கஜ் கதமுக்கு ஏற்பட்ட பண நஷ்டம் நமக்கும் ஏற்படலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust