![சீனா நாட்டின் வளையில் ஆப்ரிக்கா](http://media.assettype.com/newssensetn%2F2022-06%2F5970cc2c-48c0-4e3c-99d1-451c3203c1d8%2Fhandshake_g072029b1f_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&w=480&auto=format%2Ccompress&fit=max)
சீனா நாட்டின் வளையில் ஆப்ரிக்கா
Pixabay
கடன் ஒரு நாட்டின் மிகப்பெரிய சர்வதேச ஆயுதமாக இருக்குமா? அச்சடித்த ஆயுதமான பணத்தைக் கொண்டு சீனா நடத்தும் இந்த யுத்தத்தில் ஆப்பிரிக்க நாடுகள் அதிகம் சிக்குவது ஏன்? சீனாவிடம் கடன் வாங்கிய ஆப்பிரிக்க நாடுகள் அதனைத் திருப்பிச் செலலுத்தவில்லையெனில் என்னவாகும்?
கடன் ராஜதந்திரம்
Pixabay
ஒரு நாட்டுக்கு தேவையான போது ஒரு சில விதிமுறைகளோடு கடனைக் கொடுத்துவிட்டு, பிறகு அக்கடனை வைத்து தனக்கு தேவையான காரியங்களை அந்நாட்டில் (கடன் பெற்ற நாட்டில்) சாதித்துக் கொள்வது தான் கடன் ராஜதந்திரம்.
1950-களில் ஒரு ஏழை விவசாய நாடாக இருந்த சீனா, இன்று ஜிடிபி அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. முதலாம் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
வல்லரசு நாடு என்கிற பெருமையை எட்டிப்பிடிக்க வெறுமனே உழைப்பு, வருமானம் மட்டும் போதுமா? சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்தவும், உலக அளவில் தீட்டப்படும் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவும், தங்கள் கருத்துக்களுக்கு போதுமான ஆதரவு இருக்கிறது என்பதை நிறுவவும், ராஜரீக ரீதியிலும், பூகோள அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சீனா தன் ஆதிக்கத்தைச் செலுத்த... என பல விஷயங்களில் பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு தேவை.
அப்படி பல்வேறு உலக நாடுகளை வளைக்க சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கடன். அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றன? என்று கேட்டால் விடை இயற்கை வளங்கள் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
Africa
Pixabay
கென்யா, நைஜீரியா, கானா, அங்கோலா, அல்ஜீரியா, மொசாம்பிக், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வளம், தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியாவில் உள்ள தங்கச் சுரங்கங்கள், சாம்பியாவில் உள்ள காப்பர் உலோகம்... போன்றவைதான் சீனாவைத் துணிந்து பில்லியன் டாலர் கணக்கில் கடன் கொடுக்க வைத்துள்ளது.
எந்த அளவுக்கு சீனா, ஆப்பிரிக்க கண்டத்தில் கடன் விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால், ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய கடன்கொடுக்கும் நிதி நிறுவனம் போன்றதொரு இடத்தில் உள்ளது என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Carnegie Endowment for International Peace அமைப்பு வெளியிட்ட ஜூன் மாத அறிக்கை ஒன்றில், கடந்த 2000 - 2019 வரையான காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாட்டின் பொதுத் துறைக்கு சீனா 153 பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடனின் தன்மை தொடர்ந்து மாறி வருவதாகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா கொடுக்கும் கடன் அளவு குறைந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அங்கோலா ($21.5 பில்லியன்), எத்தியோப்பியா ($13.7 பில்லியன்), கென்யா ($9.8 பில்லியன்), காங்கோ குடியரசு ($7.4 பில்லியன்), சாம்பியா ($6.3 பில்லியன்), கெமரூன் ($5.5 பில்லியன்) என பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு பல பில்லியன் டாலர் பணத்தை சீனா கடனாக வாரி இரைத்துள்ளதாக ஒரு பொருளாதார நாளிதழில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான கட்டுரையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
2010 - 15 வரையான காலகட்டத்தில் நைஜீரியா சீனாவிடமிருந்து கடன் வாங்கிய தொகையின் அளவு 1.4 பில்லியன் டாலரிலிருந்து 3.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. டிஜிபூட்டி என்கிற நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 75 சதவீதக் கடனாக 1.4 பில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது சீனா. இந்த நாட்டில் தான் சீனா அதிகாரபூர்வமாக தன் ராணுவ தளத்தை அமைத்துள்ளது என்பதும் நினைகூரத்தக்கது.
சீனா
pixabay
கடந்த இரு தசாப்தங்களில், பல்வேறு காலகட்டங்களில் பல பில்லியன் டாலர் கடன் வாங்கிய ஆப்பிரிக்க நாடுகள் பலதும் தற்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே சீனாவுக்குச் செலுத்த வேண்டிய கடனை மறுசீரமைக்க, அந்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன என மற்றொரு முக்கிய வணிக நாளிதழ் சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
சீனா வெறுமனே கடன் கொடுப்பதைவிட, எரிபொருள், அடிப்படைக் கட்டுமானம், சுரங்கத் துறை சார் திட்டங்களுக்கு அதிகம் கடன் கொடுத்துள்ளது. ஒருவேளை எதிர்பார்த்தபடி கடனைத் திருப்பிச் செலுத்தாத போது, கடனில் கட்டியெழுப்பிய திட்டத்தை சீனா அபகரித்துக் கொள்ளும் அபாயம் நிலவுகிறது.
ஆப்ரிக்கா
Photo by Nicola Barts from Pexels
இதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா?
2015ஆம் ஆண்டு, அங்கோலா நாடு சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாத போது, பணத்துக்கு பதிலாக அந்நாட்டின் கச்சா எண்ணெய்யை சீனா எடுத்துக் கொண்டதால், அந்நாடு ஏற்றுமதி செய்ய போதுமான கச்சா எண்ணெய் இல்லாமல் போனது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சமீபத்தில் யுகாண்டாவின் ஒரேயொரு சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்காக சீனா கொடுத்த 200 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்தாததால், அவ்விமான நிலையத்தை சீனா கையகப்படுத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாயின. அதை சீனா மறுத்துள்ளது என்றாலும், கடனைக் குறித்து சீனா வாய்திறக்கவில்லை. அதே போல கடன் விதிமுறைகள் குறித்தும் செய்திகள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust