Morning News Wrap: ஆன்மிகத்துக்கு அல்ல; இவர்களுக்கு தான் நாங்கள் எதிரி - மு.க.ஸ்டாலின்
சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரி - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடந்த அரசுவிழாவில் பங்கேற்று, ரூ.340 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,
"தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்யவும், கிரிவலம் செல்லவும் வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவின் போது மற்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு நிச்சயமாக நிறைவேற்றித்தரும். நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல. சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரி. அறிவார்ந்த யாரும் அரசுக்கு ஆலோசனை சொல்லலாம்" எனப் பேசினார்.
இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 30 வாராந்திர சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. 31-வது வாரமாகத் தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ள மெகா தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இனி தனியார் அமைப்புகளும் செயற்கைக்கோளை இயக்கலாம் - இஸ்ரோ தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "விண்வெளித் துறையைச் சீர்படுத்துவதற்கென `விண்வெளிக் கொள்கை 2022' உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கையின்படி, இனி தனியார் அமைப்புகளும் செயற்கைக்கோள்களுக்கு உரிமையாளராகலாம். அவற்றை இயக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் சிறிய ரக, செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ராக்கெட்டுகளுக்கு இனி தனியார் அமைப்புகளும் உரிமையாளராக இருக்கலாம். தனியார் அமைப்புகளே ராகெட்டை உருவாக்கி, விண்வெளிக்கு அனுப்பலாம். இதற்கான ஏவுதளம்கூட அவர்களே கட்டிக் கொள்ளலாம். விண்வெளி துறையில் புதிய தளங்களை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு" என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust