நீரவ் மோடி : மீண்டும் இந்தியா வருகிறாரா? விரிவான தகவல்கள்

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் போன்ற வரி இல்லா நாடுகளில் செயல்படும் தன் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி LoU ஆவணங்களைப் பணமாக மாற்றியதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் வலைதளமும் சொல்கிறது.
Nirav Modi
Nirav ModiTwitter
Published on

பணம் என்கிற விஷயம் மனித நாகரிகத்துக்குள் வந்தது முதல், அதை மனிதர்கள் துரத்துவதும், மனிதர்களை பணம் துரத்துவதும் சாதாரண ஒன்றாகிவிட்டது.

பணம் என்கிற சொல்லைக் குறிப்பிடும் போது, வங்கி என்கிற சொல்லும் உடன் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது. அப்படி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சமீபத்திய வங்கி ஊழல் என்றால் அது பஞ்சாப் நேஷனல் பேங்க் நீரவ் மோடி ஊழல் தான்.

நீரவ் மோடி எப்படி ஊழல் செய்தார்? இதில் வங்கியின் பங்கு என்ன? என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன்... Letter of Understanding (LoUs) என்றால் என்ன? என்பதில் இருந்து தொடங்குவோம்.

லெட்டர் ஆஃப் அண்டர்ஸ்டேண்டிங் (LoU) :

ஒரு வாடிக்கையாளர் சார்பாக, ஒரு வங்கி, மற்றொரு வங்கிக்கு பணம் கொடுப்பதாகக் வழங்கப்படும் ஒருவித உத்தரவாதத்தையே லெட்டர் ஆஃப் அண்டர்ஸ்டேண்டிங் (LoU) என்கிறார்கள்.

பொதுவாக இதை வெளிநாடுகளிலிருந்து பொருட்களை வாங்கும் போது, பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப் பயன்படுத்துவர். இந்த சேவையை தனி நபர்கள் பயன்படுத்த முடியாது, நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

ஒரு LoU வழங்கப்பட்டால் அதை 180 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இப்படி ஒரு வங்கியிடம் LoU வாங்க வேண்டும் என்றால், அவ்வங்கி வழங்கும் LoU தொகைக்கு நிகரான பிணையாக சொத்து பத்துக்கள் (பொதுவாக பணம்) கேட்பர்.

Nirav Modi
கெளதம் அதானி Vs முகேஷ் அம்பானி: இந்திய 5ஜி சந்தையை பிடிக்க நடந்த போட்டி - விரிவான தகவல்கள்

ஊழலின் தொடக்கப் புள்ளி:

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரத்தில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் பேங்கின் பிராடி ஹவுஸ் கிளையில், சட்ட விரோதமாக எந்தவித பிணையும் இல்லாமல் பல போலி LoU ஆவணங்கள் வெளிநாட்டில் உள்ள இந்திய வங்கிகளுக்கு வழங்கப்பட்டன. அதைப் பயன்படுத்தி நீரவ் மோடியின் நிறுவனங்கள் முத்து போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக இந்த LoUகள் வழங்கப்பட்டன.

இப்படி கடந்த 2011 மார்ச் மாதம் முதல் LoU ஆவணத்தைப் பெற்ற நீரவ் மோடியின் நிறுவனங்கள் அடுத்த 74 மாத காலத்துக்குள் 1,212 LoU ஆவணங்களைப் பெற்றது. இதில் 53 LoU ஆவணங்கள் உண்மையானவை என்றும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது.

செயல்பட்டது எப்படி?

பஞ்சாப் நேஷனல் பேங்கின் துணைப் பொது மேலாளரான (DGM) கோகுல் ஷெட்டி வெளிநாட்டில் உள்ள இந்திய வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் படி, எந்தவித பிணையுமின்றி LoU ஆவணங்களை வெளியிடுவார்.

அதன் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நாஸ்ட்ரோ கணக்கில் வெளிநாட்டுக் கரன்சியில் பணம் வந்து சேரும். அப்பணத்தைக் கொண்டு நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு முத்து, வைரம் போன்றவற்றை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தலாம் என்பதே இந்த ஊழலின் அடிப்படை ஓட்டை.

ஒரு LoU காலாவதி ஆகிவிட்டால், பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய LoU ஆவணத்தை வெளியிடும். இப்படி பிணையே இல்லாமல் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி பல கோடிக்கு LoU ஆவணங்களை வெளியிட்டுள்ளது. எனவே ஊழலின் அளவும் சரமாரியாக அதிகரித்துள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட LoU ஆவணங்களைப் பயன்படுத்திப் பெற்ற பணத்தை வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தாமல், சில பஞ்சாப் நேஷனல் பேங்கின் ஊழியர்கள் துணையோடு மற்ற பயன்பாடுகளுக்கு திசை திருப்பிக் கொண்டது நீரவ் மோடி நிறுவனங்கள். இதை இந்தியாவில் உள்ள பல விசாரணை முகமைகளும் சொல்கின்றன.

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் போன்ற வரி இல்லா நாடுகளில் செயல்படும் தன் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி LoU ஆவணங்களைப் பணமாக மாற்றியதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் வலைதளமும் சொல்கிறது. இங்குதான் இது வெறுமனே ஒரு வங்கி மோசடி என்கிற நிலையிலிருந்து ஊழல் வழக்காக உருவெடுக்கிறது.

Nirav Modi
உலகின் 3வது பணக்கார நாடாகும் இந்தியா - என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

வெளிவந்த ஊழல்:

2018ஆம் ஆண்டு, அதே பாஞ்சாப் நேஷனல் பேங்கின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் டைமண்ட் ஆர் யூ எஸ் (Diamond R US) சோலார் எக்ஸ்போர்ட்ஸ் (Solar Exports), ஸ்டெல்லர் டைமண்ட்ஸ் (Stellar Diamonds) போன்ற 3 நிறுவனங்களும் புதிதாக LoU கேட்டுள்ளனர். அப்போது வங்கி தரப்பு 100% பிணையாக பணத்தைக் கேட்ட போது, நீரவ் மோடி தரப்பு மறுத்துள்ளது. இதற்கு முன் பணம் இல்லாமல் LoU வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி வங்கி தரப்பிடம் எடுத்துச் சொல்லியதிலிருந்து நீரவ் மோடியின் ஊழல் குறித்து வங்கி தரப்பு துருவத் தொடங்கியது.

அப்படி ஏதாவது LoU வழங்கப்பட்டு இருப்பதாகக் கணக்குகள் இருக்கின்றனவா என்று பார்க்கும் போது, எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பஞ்சாப் நேஷனல் பேங்க் நிர்வாகத்துக்குள்ளேயே இது குறித்து ஒரு விசாரணை நடத்தப்பட்ட போது, சில வங்கி அதிகாரிகள் சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு வங்கிக் கிளைகளுக்கு LoU வழங்கி இருப்பது தெரிய வந்தது.

அதோடு பஞ்சாப் நேஷனல் பேங்கின் ஊழியர்கள் சர்வதேச அளவில் வங்கி பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் SWIFT முறையைப் பயன்படுத்தி அலஹாபாத் வங்கி & ஆக்ஸிஸ் வங்கிக்கு பணத் தேவை தொடர்பாக செய்தி அனுப்பியது தெரிய வந்தது.

எனவே பஞ்சாப் நேஷனல் பேங்கின் கணக்கு வழக்குகள் வைக்கப்பட்டு இருக்கும் சி பி எஸ் மென்பொருளில் இந்த LoUக்கள் தொடர்பான எந்த விவரங்களும் இணைக்கப்படவில்லை. எனவே வங்கிக் கணக்கு வழக்குகளை சோதனை செய்த ஆடிட்டர்கள் கண்களிலும் இப்பிரச்னை படாததால் இந்த ஊழல் நீண்ட நாட்களாக வெளி உலகுக்குத் தெரியவே இல்லை.

தப்பிய நீரவ் மோடி:

இந்த பிரச்னை மேகம் தன்னைச் சூழ்வதை அறிந்த நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரர், கடந்த 2018ஆம் ஆண்டு, தனக்கு எதிராக இந்திய அரசு & அரசு முகமைகள் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் நீரவ் மோடி தொடர்பான LoU ஊழலால் மட்டும் சுமார் 14,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாயின. வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற பல இந்திய முகமைகள் நீரவ் மோடியின் வழக்கை கையில் எடுத்தன. நீரவ் மோடிக்குச் சொந்தமான பல சொத்து பத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல ஆண்டுகளாக லண்டனில் தன்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என வாதாடி வந்த நீரவ் மோடிக்கு, சமீபத்தில் அவரை இந்தியா அனுப்பலாம் எனப் பிரிட்டன் கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவு சரியானது என பிரிட்டன் உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழிமொழிந்துள்ளது. எனவே விரைவில் நீரவ் மோடி இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nirav Modi
SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com