![ரிஷி சுனக்](http://media.assettype.com/newssensetn%2F2022-07%2Fabcfb971-d7d0-4f6f-a0df-59e8922e10c9%2FScreenshot_2022_07_15_162317.png?rect=0%2C0%2C1172%2C659&w=480&auto=format%2Ccompress&fit=max)
பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த 2022ஆம் ஆண்டில் போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரைத் தொடர்ந்து பிரிட்டனை ஆளப் போகும் 3ஆவது பிரதமர் ரிஷி சுனக்.
கடந்த 200 ஆண்டுக் கால பிரிட்டன் வரலாற்றில் மிக இளம்வயது (42 வயது) பிரதமரும் ரிஷி சுனக் மட்டுமே. அதோடு ஒரு கறுப்பினத்தவர் (ஆசிய பிரிட்டிஷ்) பிரிட்டன் பிரதமர் ஆவதும் இதுவே முதல் முறை என்கிறது 'தி இந்து' பத்திரிகை.
வெறும் 7 ஆண்டுகள் மட்டுமே பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், சட்டெனப் பிரதமராவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் வெறும் 9 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து பிரதமர் பதவியை எட்டிப் பிடித்தது வரை சாதனையாகக் கருதப்பட்டது நினைவுகூரத்தக்கது.
பிரிட்டன் பொருளாதாரத்தில் உள்ள விலைவாசிப் பிரச்னை, அடிப்படை மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளைக் கட்டுப்படுத்துவது, ரெசசன் அபாயத்தை எதிர் கொள்வது, பிரெக்ஸிட் பிறகான தாக்கங்களைச் சமாளிப்பது, கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருக்கும் சலசலப்புகளைச் சமாளிப்பது எனப் பதவி ஏற்ற அடுத்த நொடி முதல் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஸ்டார் வார்ஸ் சினிமாவில் வரும் ஜேடி நைட் ஆக விரும்பியவர், பிற்காலத்தில் பிரிட்டனின் தீவிர அரசியலில் ஈடுபட்டு, பிரெக்ஸிட்டை ஆதரித்தார். தன் மனைவி அக்ஷதா மூர்த்தியின் வரிப் பிரச்னையின் போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரிஷி சுனக்கிடம் தற்காலிகமாக அமெரிக்க கிரீன் கார்ட் வேறு இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
பிரிட்டன் அரசியலிலேயே நல்ல பணம் படைத்த அரசியல்வாதிகளில் ரிஷி சுனக் டாப் லிஸ்டில் வருவார். ரிஷி சுனக் & அவரது மனைவி அக்ஷாவின் சொத்துக்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தார் சுமார் 730 பவுண்ட் ஸ்டெர்லிங் வரும் என்கிறது பிபிசி வலைதளம். இதில் சுமார் 0.91% இன்ஃபோசிஸ் பங்குகளே மிகப்பெரிய சொத்து என்கிறது தி கார்டியன் பத்திரிகை.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் கையில் செலவுக்குப் பணம் சென்று சேரும் பல திட்டங்களுக்குப் பொறுப்பாளராக இருந்தவர், அப்போதைய நிதி அமைச்சர் ரிஷி சுனக் தான்.
லிஸ் ட்ரஸ் பிரதமராக இருந்த சில வாரங்களில், பிரிட்டன் பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிக்க கடன் வாங்கும் திட்டத்தை முன்வைத்தார். பணவீக்கம் அதிகமாக இருக்கும் காலத்தில் இப்படி கடன் வாங்கினால் அது பிரிட்டன் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்யும் என முன்பே கணித்தார் ரிஷி சுனக்.
1960களில் பிழைப்பு தேடி கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்குக் குடியேறியவர்களில் ரிஷி சுனக்கின் குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பத்தின் ஆணி வேர் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் இருக்கிறது. அம்மா உஷா, அப்பா யஷ்வீர் பல்வேறு போராட்டங்களுக்கு இடையிலேயே ரிஷி சுனக்கை வளர்த்தனர். இந்த குடும்பத்தின் ஆணி வேர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பஞ்சாபில் இருக்கிறது. அம்மா சிறிய மருந்துக் கடையை நடத்தி வந்தார். தந்தை யஷ்வீர் பிரிட்டன் அரசின் தேசிய சுகாதார சேவை நிறுவனத்தில் பணியாற்றினார்.
1980 மே 12ஆம் தேதி செளத்ஹாம்ப்டனில் பிறந்த ரிஷி சுனக் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். பெற்றோர் தங்கள் மகனின் கல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தன் இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்துவிட்டு, 2001 - 04 ஆண்டுகள் வரை கோல்ட்மேன் சாக்ஸில் பகுப்பாய்வாளராக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். பிறகு 'தி சில்ட்ரன்ஸ் இன்வெஸ்மென்ட் ஃபண்ட்'-ல் கூட்டாளியாக பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு தெலெமெ (Theleme) நிறுவனத்தின் கூட்டாளியானார்.
2009ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் (கிருஷ்ணா & அனொஷ்கா) இருக்கிறார்கள். தன் மாமனார் நாராயண மூர்த்தியின் கட்டமரான் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் இயக்குநர் ஆனார் ரிஷி சுனக்.
2014ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் ரிச்மண்ட் (யார்க்) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான கமிட்டியில் உறுப்பினரானார்.
2017ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உள்ளூர் அரசாங்கங்களுக்கான அமைச்சரவையில் துணை அமைச்சருக்கு இணையான பதவியில் அமர்ந்தார்.
2019ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டன் கருவூலத்தின் முதன்மைச் செயலராக போரிஸ் ஜான்சனால் நியமிக்கப்பட்டார். மறுபக்கம் கட்சியின் பிரிவி கவுன்சில் (Privy Council) உறுப்பினர் ஆனார்.
பிப்ரவரி 2020-ல் பிரிட்டனின் நிதியமைச்சர் ஆனார். அப்போது கொரோனா தலைவிரித்தாடத் தொடங்கி இருந்தது. கடந்த ஜூலை 5ஆம் தேதி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது போதிய நம்பிக்கை இல்லாததால் தன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இன்று பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த பிரதமராவது நிலைத்து நிற்க, பிரிட்டன் மக்களை பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து மீட்டு எடுக்க ரிஷி சுனக்குக்கு நம் வாழ்த்துகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust