Morning News Today: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை - பின்வாங்கிய எலான் | அடுத்து என்ன?
ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தைக் கைவிட்டார் எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்க முடிவு செய்திருந்தார். இதையடுத்து, 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விற்க ட்விட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் உடன் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ட்விட்டர் நிறுவனப் பங்குகளை எலான் மஸ்கிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் எலான் மஸ்க், ட்விட்டரில் உள்ள போலிக் கணக்குகள் உட்பட சில விவரங்களைத் தரும்படி ட்விட்டர் நிர்வாகக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், எலான் மஸ்க் கேட்ட விவரங்களைத் தர ட்விட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் இன்று அதிரடியாக அறிவித்தார். ட்விட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொடரப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு - ஐ.நா. இரங்கல்
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே. நேற்று காலை ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பிரசாரத்தில் அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்றிருந்த மர்ம நபர் அவரைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். உடனடியாக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். ஷின்ஜோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ரஷிய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் ஷின்ஜோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. சபை இரங்கல் தெரிவித்திருக்கிறது.
பணியின்போது இறந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் - இழப்பீடு வழங்கிய தமிழக அரசு
சென்னை, மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நெல்சன் என்ற கட்டாரி (வயது 26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிக்குமாரும் (35) எந்திரத் துளையில் தவறி விழுந்தார். இதில் இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இருவரின் குடும்பத்துக்கும் இழப்பீடாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நிவாரணத் தொகை காசோலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில், அமெரிக்க - பிரிட்டன் ஜோடி சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ எப்டன் மற்றும் சாம் ஸ்டோசர் ஜோடி, தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை டெசிரே க்ராவ்சிக் மற்றும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியில் அமெரிக்கா வீராங்கனை டெசிரே க்ராவ்சிக்வும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கியும் வேறு வேறு ஜோடிகளுடன் கலந்து கொள்ள இருந்த நிலையில், திடீர் மாற்றமாகக் கடைசி நிமிடத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து இறுதிப் போட்டியை எதிர்கொண்டனர். இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அவர்கள் தட்டிச் சென்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust