ஹனிமூன் போறீங்களா? இந்த ஐந்து கடற்கரையை டிரை பண்ணுங்களேன்! | Travel
யானை, குழந்தை, கடல். இவையனைத்தும் எப்போதும் மனிதர்களுக்குச் சலிக்காத விஷயங்கள். நல்ல சுத்தமான நீரைக் கொண்ட கடலுக்காக, பல்வேறு பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மாலத் தீவு, சியாசெல்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா... போன்ற நாடுகளுக்குச் சென்று வருவதைப் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம்.
அங்கெல்லாம் போக வேண்டுமென நாம் கூட ஆசைப்பட்டிருப்போம். புதிதாக பாஸ்போர்ட் எடுத்து, பல்லாயிரக்கணக்கில் விமான டிக்கெட்டுக்கு செலவு செய்து, அந்த நாடுகளில் இருக்கும் சுத்தமான கடற்கரைக்குச் சென்று கொண்டாடுவதை விட, இந்தியாவிலேயே குறைந்த செலவில் நல்ல கடற்கரையைச் சுற்றிப் பார்க்கலாம் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்குப் பிரமாதமான கடற்கரைகள் நம் இந்தியாவிலேயே இருக்கின்றன.
மால்பே கடற்கரை, கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு நகரத்திலிருந்து சுமார் 90 நிமிடம் பயணித்து மால்பே கடற்கரையைச் சென்றடையலாம். வெள்ளை மணல், சுத்தமான நீர் எனப் பார்க்க விண்டோஸ் ஸ்கிரீன் சேவர் போல இருக்கும். இந்த கடற்கரையில் ஜெட் ஸ்கையிங், வாட்டர் ஸ்கூட்டர் ரைட்ஸ், பனானா போட் ரைட், பாரா செயிலிங்... போன்ற பல விளையாட்டுக்களையும் விளையாடலாம். அது போக செயின்ட் மேரிஸ் தீவு என ஒரு சுற்றுலா தளமும் அருகில் இருக்கிறது.
வார்கா கடற்கரை, கோவா
இந்தியாவில் ஒரு நல்ல கடற்கரையில் அருமையாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசிக்க விரும்புபவர்கள், கோவாவில் உள்ள வர்கா கடற்கரைக்குச் செல்லலாம். மிக முக்கியமாக இந்த கடற்கரையில் ஆள் நடமாட்டம் கொஞ்சம் குறைவு. ஆக, புதுமணத் தம்பதிகள் அமைதியாக அமர்ந்து காதலிக்க இயற்கை கொடுத்திருக்கும் அருமையான இடம் இந்த கடற்கரை. இப்பவே போடுங்க ரெண்டு டிக்கெட்ட.
கன்பதிபுலே, மகாராஷ்டிரா
இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையை தன்னுள் கொண்டிருக்கும் மகாராஷ்டிராவில் ஜன நெருக்கடி மிக அதிகம். அதைத் தாண்டி, நிம்மதியாக ஒரு நல்ல கடற்கரைக்குச் செல்ல வேண்டும், வெள்ளை மணலில் சுத்தமான நீர் நம் கால்களைக் கழுவிச் செல்ல வேண்டுமானால், கன்பதிபுலே கடற்கரை ஒரு கச்சிதமான இடமாக இருக்கும். அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் பயணித்தால் 'அரெ வாரே' கடற்கரை உள்ளது. இங்கு மோட்டார் படகு, வாட்டர் ஸ்கூட்டர், ஸ்கூபா டைவிங், பாரா செயிலிங் என பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. ரொமான்டிக்காக பொழுதைக் கழிப்பதோடு, கொஞ்சம் விளையாட்டுகளும் வேண்டுமானால் இந்த வெள்ளை மணல் கடற்கரையைத் தேர்வு செய்யலாம்.
ராதாநகர், அந்தமான் நிகோபார்
ஆசியாவின் மிக அருமையான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடற்கரை, புகைப்படம் எடுப்போரின் சொர்க புரி எனலாம். அந்த அளவுக்கு இந்த கடற்கரையின் வெண்மையான மணல் மற்றும் சுத்தமான நீல நிற நீரும் பார்ப்போரைச் சொக்க வைக்கும். இது போகக் கடற்கரையில் பச்சை பசேலென இருக்கும் செடி கொடிகள், மரங்கள் ஒட்டுமொத்த கடற்கரைக்குக் கொடுக்கும் அழகை வார்த்தைகளில் வருணிப்பதற்கு இல்லை. ஒரு டிரப் போய் பாருங்கள், பிறகு நீங்களே ஃபேஸ்புக்கில் புகழ்ந்து தள்ளுவீர்கள்.
வார்கலா, கேரளா
கடவுளின் தேசமான கேரளத்தில் உள்ள கடற்கரைகளைக் குறிப்பிடாமல் இந்தியக் கடற்கரைகளின் பட்டியலை நிறைவு செய்ய முடியாது. திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வார்கலா கடற்கரை இப்போதும் அதே இயற்கை எழில் கொஞ்சம் சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. இதை பாபநாசக் கடற்கரை என்றும் கூறுகிறார்கள். இங்கும் பல்வேறு நீர் சார்ந்த விளையாட்டுகள் இருக்கின்றன. அருமையான வெள்ளை மணலும், கடல் அழகும் உங்களைச் சொக்க வைக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp