வெங்கய்யா நாயுடு Twitter
இந்தியா

வெங்கையா நாயுடு : "நாம் அவரவர் வழியில் செயல்படுகிறோம்" - நெகிழ்ச்சியான உரை

Govind

பதவி விலகும் ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடு திங்களன்று, குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என்றும், அதே நேரம் தான் ஒரு அதிருப்திவாதியும் இல்லை என்று பஞ்ச் வரியோடு பேசினார். மக்களுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு அவர்களுடன் தொடர்பு கொள்வேன் என்றும் கூறினார்.

தனது பிரியாவிடை உரையில், நாடாளுமன்ற மேலவையின் நடவடிக்கைகள் அடிக்கடி தடைப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், விவாதிக்கும் போது இடையூறு செய்யாமல் இருக்கவும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார். சபையின் மரபு மற்றும் மரியாதையை பராமரிக்கக் கண்ணியத்தை கடைப்பிடிக்குமாறு ராஜ்யசபா துணைத் தலைவர் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வெங்கய்யா நாயுடு

"அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு என்னவென்றால் எல்லா இடங்களிலும் மரியாதை குறைந்து வருகிறது. ஏனென்றால் பொதுவில் அனைத்து அமைப்புகளைப் பற்றியும் நன்மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும்," என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது நடவடிக்கைகளில் உயர் தரத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

தான் குடியரசுத் தலைவராக ஆசைப்படுவதாக ஊகங்கள் நிலவுவது பற்றிப் பேசிய நாயுடு, "நான் அந்த வகையைச் சேர்ந்தவன் இல்லை, மக்கள் இப்போது அடிக்கடி பேசுகிறார்கள் - ஜனாதிபதி, இல்லையெனில் அதிருப்தியாளன் அல்லது வீட்டில் முடங்கிக் கிடப்பது. இந்த மூன்றையும் நான் செய்யப் போவதில்லை" என்றார். இதை president, otherwise dissident or a resident என ரைமிங்காகச் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மோதல் குறித்து அவர் பேசும் போது நாம் அவரவர் வழியில் செயல்படுகிறோம். நாம் போட்டியாளர்கள் மட்டுமே எதிரிகள் இல்லை என்று கூறினார். நாயுடு, தனது 10 நிமிட உரையில், ராஜ்யசபா மேலவையாக இருப்பது என்பது பெரிய பொறுப்புடன் இயங்க வேண்டுமென என்று கூறினார்.

வெங்கையா நாயுடு

மக்கள் சபையில் உரையாடி விவாதித்து, பின் முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதை - discuss, debate and decide - 3டி என்று கூறினார் . அவர்கள் மற்ற டியை அதாவது இடையூறு எனும் disruptionஐ விரும்பவில்லை என்று வெங்கையா நாயுடு கூறினார். அவர் பாஜகவில் இருந்த நாட்களில் இருந்து நகைச்சுவையான மற்றும் ரைமிங் கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.

"நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். நல்ல பேச்சாளர்கள் பலர் உள்ளனர், வாய்ப்பு வரும்போது புதிய உறுப்பினர்கள் தயாராகி வருவதை நான் காண்கிறேன்.இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில சமயங்களில் நான் தலையிட்டுக் கண்டிப்புடன் இருக்க முயற்சித்தேன். இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை," என்று அவர் கூறினார்.

நாயுடு கூறுகையில்," தான் நாற்காலியை ஆக்கிரமித்த நாள் முதல் யாருக்கும் அல்லது எந்தக் கட்சிக்கும் எதிராக எந்தத் தீமையும் செய்தது இல்லை.” என்றார்.

ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, "கனத்த இதயத்துடன்" பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தபோது, ​​​​தன் கண்களில் கண்ணீர் வந்ததாகவும் அவர் கூறினார். இது புதிய பொறுப்பை ஏற்பதற்கான கண்ணீர் இல்லை, தான் நேசித்த கட்சியை விட்டு விலக வேண்டி வந்ததே அதற்கு காரணம் என்றார்.

சபையின் கண்ணியத்தைக் காக்கவும், எல்லாத் தரப்புக்கும் இடமளிக்கவும் தன்னால் இயன்றவரை முயற்சி செய்ததாக நாயுடு கூறினார். வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு என எல்லா மாநிலங்களுக்கும் சபையில் வாய்ப்பு கொடுத்ததாகவும் பேசினார்.

"சிலருக்கு அவர்கள் விரும்பியபடி நான் போதுமான நேரத்தை வழங்காமல் இருந்திருக்கலாம். அது உங்கள் கட்சியின் எண்ணிக்கையைப் பொறுத்தது. ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, அது பூஜ்ஜிய நேரம், சிறப்பு குறிப்பு, கேள்வி நேரம் அல்லது மசோதாக்கள் மீதான விவாதம் மற்றும் எதுவாக இருந்தாலும் உரிய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

ராஜ்யசபாவில் நாயுடுவிற்கு பிரியாவிடை அளித்த உறுப்பினர்கள், அதன் தலைவராக நாயுடுவின் பங்கைப் பாராட்டி, அவர் எப்படி அவர்களைத் தங்கள் தாய்மொழிகளில் பேச ஊக்குவித்து அனுமதித்தார் என்பதை நினைவு கூர்ந்தனர்.அதைக் குறிப்பிட்டுப் பேசிய நாயுடு முதலில் எங்கும் எதிலும் தாய் மொழி அதற்கு பிறகுதான் சகோதர மொழி என்றார். கல்வி, பள்ளிகள், அரசு நிர்வாகம், நீதிமன்றம் என அனைத்திலும் தாய் மொழி வரவேண்டும் என்பதையும், அதை தான் ராஜ்யசபாவில் கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார்.

மேலும் உறுப்பினர்கள் என்ன மொழியில் பேசினாலும் அவரவர் தாய் மொழியில் அதை மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு தான் பதவி விலகும் முன்பு கடைசி உத்தரவு போட்டு கையெழுத்துப் போட இருப்பதாகக் கூறினார். இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கை தட்டி அவரை வாழ்த்தினர். பிரதமர் மோடி கை தட்டாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நாயுடு தனது பேச்சில் இந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?