எடப்பாடியின் எழுச்சி மாநாட்டில் எழுந்த சர்சைகள் - உணவு விரயம் முதல் கட்சிக்காரர் மரணம் வரை Twitter
தமிழ்நாடு

எடப்பாடியின் எழுச்சி மாநாட்டில் எழுந்த சர்சைகள் - உணவு விரயம் முதல் கட்சிக்காரர் மரணம் வரை

Antony Ajay R

அதிமுகவின் மதுரை மாநாடு உணவு வீணாக்கல், கட்சிக்காரர்களின் மரணம் என பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

கிட்டத்தட்ட 100 கோடி செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடவில்லை. அதே நேரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் உருவாகியிருக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது செல்வாக்கை நிலைநாட்ட ஏற்பாடு செய்யப்பட்டது இந்த மாநாடு. கட்சி முழுவதுமாக அவர் கைக்குச் சென்றுவிட்டது, பாஜக அவரை அங்கீகரித்துவிட்டது என்பதனால் மிகவும் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டனர்.

மாநாட்டுக்கென எல்லா ஊர்களிலும் கூட்டங்கள் நடத்தினர். கிராமங்கள் வரை பரப்புரை செய்தனர். மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆட்களை திரட்டவும் மாநாட்டை விளம்பரப்படுத்தவும் 25 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. தவிர, அதிமுகவின் 74 மாவட்ட செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் மாநாட்டுக்கு செலவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தொண்டர்களை திரட்ட ஆண்களுக்கு மதுபானம், பெண்களுக்கு சேலை என வழக்கமான யுத்திகளை பின்பற்றியுள்ளனர். மாநாட்டுக்கு வருபவர்கள் தலைக்கு ஒரு தொகை. தங்கும் செலவு, வாகன செலவு என எக்கச்சக்கமாக பணத்தை இறக்கியுள்ளனர்.

மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து டிராக்டரில் மக்கள் குவிந்தனர். மதுரை பைபாஸ் பக்கம் சென்ற போது படையப்பா பட கிளைமாக்ஸ் காட்சி நினைவுவருவதைத் தவிர்க்க முடியாது.

வேன், பஸ், கார் என வாகனங்களில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர்.

ஒன்றரை லட்சம் பேருக்கு மாநாட்டில் நாற்காலி போடப்பட்டது. காலை முதலே கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. விஜய் டிவி ஸ்டார்ஸ் காமடி முதல் எஸ்.பி.வேலுமணியின் ஒயிலாட்டம் வரை தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எவ்வளவு பார்த்துப்பார்த்து மாநாட்டை திட்டமிட்டும் முக்கியமான விஷயத்தில் சறுக்கியது அதிமுக நிர்வாகம். அதுதான் உணவுப் பிரச்னை.

மாநாட்டுக்காக 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டதாக ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.

சமைக்கப்பட்ட உணவு சுவையாக, சாப்பிட முடியும்படி இல்லாததால் வீணானதாக பத்திரிக்கை அறிக்கைகள் வெளியாகியிருக்கிறது. மேலும் அண்டா அண்டாவாக உணவு கொட்டப்பட்டு கிடக்கும் காட்சிகளையும் இணையத்தில் பார்க்க முடிந்தது.

சமைக்காமலே 500 கிலோவரை காய்கறிகள் வீணானதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் வீணான உணவுப்பொருட்கள் பல்லாயிரம் கிலோ இருக்கும் என்கின்றனர்.

ஒரு பக்கம் சமைத்த உணவுகளை சாப்பிட முடியாமல் தவித்த தொண்டர்கள், சமையல்கட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் தான் மாநாட்டிலும் உணவு வழங்கலுக்கு பொறுப்பாளியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 107வது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 கோடி பேர் நம் நாட்டில் தினசரி உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இத்தனை மக்களுக்கு நாட்டில் உணவு இல்லாமல் இல்லை, ஆனால் கிடைக்காமல் இருக்கிறது. நாம் வீணாக்கும் ஒரு பிடி உணவு அடுத்தவருக்கானது என மக்கள் உணர வேண்டும். தன்னை விவசாயி என அடிக்கடி கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியாவது உணர வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக மாநாட்டில் கலந்துகொள்ள வரும்போதும், வீடு திரும்பும் போதும் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் தலா 6 லட்சம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

உணவுப்பொருள் வீணாக்கல் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மறுத்துள்ளார். மேலும் சிறிய அளவு மிச்சமிருந்த உணவுகளை ஊடகங்கள் பூதாகரமாக பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?