எரியும் இலங்கை  NewsSense
உலகம்

எரியும் இலங்கை : தீவு தேசத்தில் அவசர நிலை பிரகடனம் - Latest 10 Updates

Govind

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு அவரது வீட்டிற்கு வெளியே போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதற்கு பிறகு இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. போலீஸ் தாக்குதலில் சிலர் காயமடைந்து பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையின் பொருளதார நெருக்கடி குறித்த பத்து அப்டேட்ஸ்

1. அவசரநிலையை பிரகடனப்படுத்துவதற்கான முடிவு, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கு நிலைநாட்டுவது, பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டதாக அறிக்கைகளில் அதிபர் ராஜபக்சே மேற்கோள் காட்டினார்.

2. இலங்கையின் வரலாற்றில் இதுதான் மிகமோசமான பொருளாதார நெருக்கடி. கோவிட் பொதுமுடக்கம் மற்றும் சுற்றுலாத் துறை பாதிப்பினால் இந்நெருக்கடி துவங்கியது. இதன் போக்கில் மக்கள் கோபம் கொண்டதால்தான் அதிபர் இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் மோதினர். இது மக்கள் பொறுமை இழக்கிறார்கள் என்பதன் அறிகுறி.

3. ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபோது கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகள் போலீசால் பயன்படுத்தப்பட்ட போது மக்கள் அஞ்சாமல் "கோத்தபய ராஜபக்சேவே வீட்டுக்கு போ" என்று முழங்கினர்.

4. இலங்கை தினசரி 10 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்கிறது மற்றும் பல பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.

5. கடந்த மாதம் ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இலங்கை திவாலாகும் சிக்கலை சுட்டிக் காட்டியது. சர்வதேச கடனை பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவருவதற்கான நிதி ஒருங்கிணைப்பை சரி செய்தால் மட்டுமே சிக்கல் தீரும் என அது சுட்டிக்காட்டியது

6. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பிப்ரவரியில் கடன் திட்டம் தொடர்பாக ஐஎம்எஃப் உடனான பேச்சு வார்த்தைக்கு முன்னதாக, அரசு திடீரென அதன் நாணய மதிப்பை வெகுவாகக் குறைத்தது.

7. பொருளாதாரத்தின் தவறான நிர்வாகமே நெருக்கடிக்கு காரணம் என ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். "இலங்கை அதிகமும் இரட்டை பற்றாக்குறை உள்ள பொருளாதாரமாகும். ஒரு நாட்டின் தேசிய செலவினம் அதன் தேசிய வருமானத்தை விட அதிகமாக இருப்பதையும், அதன் வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதையும் இரட்டை பற்றாக்குறைகள் காட்டுகின்றன," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 2019 ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலை அறிக்கையை மேற்கோளிட்டு கூறுகிறது.

8. கையிருப்பில் 2.31 பில்லியன் டாலர்களை மட்டுமே வைத்திருக்கும் இலங்கை 4 பில்லியன் டாலர் கடனை எதிர்கொண்டுள்ளது.

9. முக்கிய கடன் வழங்குபவர்களில் ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை உள்ளன. அவர்களும் இதற்கு மேல் கடன் வழங்கும் நிலையில் இல்லை.

10. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவுடன் 1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இது குறைவான காலத்திற்கு எடுபடலாமே அன்றி நீண்ட காலத்தில் மாற்றத்தை கொண்டு வராது.

இப்படியாக இலங்கை வரலாற்றுத் துயரத்தில் உள்ளது. நாட்டை நாசமாக்கிய ராஜபக்சே குடும்பம் தற்போது அவசரநிலையை பிரகடனம் செய்து மக்கள் மீது வன்முறையை ஏவி வருகிறது. ஆனால் இலங்கை மக்கள் இதை பொறுக்கும் நிலையில் இல்லை என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் காட்டுகின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?