இன்னும் சில மணி நேரங்களில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக டெய்லி மிர்ரர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், சில ஊடகங்கள் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாகவும், ராஜிநாமா கடிதத்தை கோட்டபயாவிடம் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றன.
அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கொண்ட ஓர் இடைக்கால அரசை அமைக்க கோட்டப்யாவும், மகிந்த ராஜபக்சேவும் ஒப்புக் கொண்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் தளத்தின் செய்தி விவரிக்கிறது.
பதினொரு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட அரசு விரைவில் அமையும் எனத் தெரிகிறது.
இந்த இடைக்கால அரசை புதிய பிரதமர் தலைமை தாங்குவார்.
தினேஷ் குணவர்தன இந்த இடைக்கால அரசின் பிரதமராக இருப்பார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பசில் ராஜபக்சவிற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் நிதியமைச்சராக முன்மொழியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்தன "ஒரு தொழிற்சங்கவாதி, மனித உரிமை ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர். இலங்கையில் ஒரு முக்கிய சோசலிச அரசியல் கட்சியான மகாஜனா எக்சத் பெரமுனாவின் தலைவராக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 1983 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற 9 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார். குணவர்தன 202 ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியுறவு அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார்.
குணவர்தன, மார்ச் 2, 1949 இல் பிறந்தார், கொழும்பின் ராயல் கல்லூரியில் முறையான கல்வியைப் பெற்றார். நெதர்லாந்தின் நிஜென்ரோட் வணிக பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழகத்தில் முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார்.
அவர் அரசியலில் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தின் நான்காவது பிள்ளை. அவரது தந்தை பிலிப் குணவர்தன, முன்னாள் அமைச்சராக இருந்தார், மேலும் "இலங்கை சோசலிசத்தின் தந்தை" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் மகாஜன எக்சத் பெரமுனாவின் நிறுவனர் ஆவார், அவரது தாயார் குசுமா குணவர்தன இலங்கையில் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
தினேஷ் குணவர்தன ரமணி வத்சலா கொத்தலாவல அவர்களை திருமணம் செய்து கொண்டார், மேலும் ஒரு மகன் மற்றும் மகளுக்கு தந்தை ஆவார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து அவரது மகன் யாதமினி குணவர்தன 9 வது நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார் .