Mafia Twitter
உலகம்

உலகை பதற வைத்த மாயாவி : உளவு பார்த்து பிடித்த அதிகாரி - ஒரு த்ரில்லர் கதை

ஆதிரை

ஒரு பெரிய மாஃபியா குழு, பல நாடுகளுக்குத் தண்ணீர் காட்டுகிறது. பின் அந்த குழுவைப் பிடிக்க ரகசிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவர் அந்த கூட்டத்தின் தலைவனோடு உறவாடி அந்த கூட்டத்தைச் சிக்க வைக்கிறார்.

என்ன எதாவது ஹாலிவுட் படத்தோட கதையா இது?

இல்லை. பல வருடங்களாக ஜப்பானைக் கலக்கிக் கொண்டிருந்த யாகுசா என்ற மாஃபியா கூட்டத்தின் தலைவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஒரு த்ரில்லர் நாவலுக்குச் சற்றும் சளைக்காத அந்த கைதின் கதையைப் பார்ப்போம்.

இந்த கூட்டத்தின் தலைவர் அதாவது யாகுசாவின் தலைவர் டகேஷி எபிசாவா. இவருக்கு சுமார் 57 வயது வரை இருக்கும்.

இவர்தான் தன்னை பிடிக்கவந்த அதிகாரியின் திட்டத்தில் கச்சிதமாகச் சிக்கியுள்ளார்.

இதற்காக ஒரு உளவாளி அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவால் பணம் கொடுத்து எபிசாவாவை வேவு பார்க்க நியமிக்கப்பட்டார்.

மூன்று வருடமாகப் பல நாடுகளில் ரகசிய சந்திப்பை நடத்தி ஒரு வழியாக எபிசாவாவை மன்ஹட்டனுக்கு இரவு உணவுக்காக அழைத்து வந்தார் அந்த ரகசிய உளவாளி.

Gun

டான்கள் என்றால் கோட் வேர்டுகள் இல்லாமல் இருக்குமா என்ன?

எபிசாவாவும் பல கோட் வேர்டுகளை வைத்துள்ளார். ‘பேம்பூ’ அதாவது மூங்கில் என்றால் ஆயுதம், ஐஸ் க்ரீம், கேக் என்றால் போதைப் பொருள். இதை எல்லாம் அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு பிரிவும் கண்டறிந்து வந்தது.

இந்த யாகுசா கும்பலுக்கு பெரிய வரலாறே இருக்கிறது. ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பாலியல் தொழில் என அனைத்திலும் ஈடுபடுவார்கள். ஆனால் இவர்களுக்கு வேறுவொரு கதையும் உண்டு. ஏதேனும் பேரழிவு நடந்தால் முதல் ஆளாக வந்து உதவி செய்வார்கள் என்பதுதான் அது.

சரி மீண்டும் கதைக்கு வருவோம். எபிசாவையும் அவரது கூட்டத்தையும் அதிகாரிகள் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பின் தொடர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவால் பணம் கொடுத்து நியமிக்கப்பட்ட உளவாளி எபிசாவை வர்த்தகம் சார்ந்த விஷயமாக டோக்யோவில் சந்தித்தார். இதை அமைப்பும் கவனித்து கொண்டிருந்தது.

போதைப் பொருள்

அந்த உளவாளியை முழுமையாக நம்பினார் எபிசாவா, மியான்மரில் உள்ள கிளர்ச்சி குழு ஒன்றுக்கு ஆயுதங்கள் தேவைப்படுவதாகத் உளவாளியிடம் தெரிவித்துள்ளார்.

அந்த குழு அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. அவர்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது என்றார். ஆயுதங்களுக்குக் கைமாறாக ஹெராயினையும், மெதாம்பெடமைன்னையும் அந்த குழு வழங்குவார்கள் என்றும் எபிசாவா தெரிவித்துள்ளார்.

அதன்பின் அந்த உளவாளி எபிசாவாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ரகசிய அதிகாரியிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த அதிகாரி ஆயுதக் கடத்தல்காரராக எபிசாவாவின் முன் தோன்றினார். இந்த மூவரும் 2019ஆம் ஆண்டு பாங்காங்கில் சந்தித்து போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் குறித்துப் பேசியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஆயுதங்களை மூங்கில் என்ற கோட் வேர்டிலேயே அழைத்துள்ளார் எபிசாவா.

ஆயுதங்கள்

மீண்டும் ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார் எபிசாவா. அதற்குப் பதிலாக மெதாம்பெடமைன்னை வழங்குவதாக அந்த ரகசிய அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அவரும் என்ன ஆயுதங்கள் வேண்டுமோ அதை தன்னால் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

அதன்பின் அவர்கள் மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அடுத்த ஆண்டு அதாவது பிப்ரவரி 2020, தாய்லாந்தில் சாம்பூ என்று அழைக்கப்படும் யாகுசாவின் பாஸ் ஒருவர் மியான்மர் கிளர்ச்சி குழுவிடமிருந்து ஹெராயின் பெற்றதாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட ரகசிய உளவாளி தானும் அந்த ரகசிய அதிகாரியும் ஹெராயினை வாங்கி நியூயார்க் சந்தையில் விற்க முயற்சி செய்யவிரும்புவதாகத் தெரிவித்தார்.

அதன்பின் அடுத்த மாதமே சந்தித்து அவர்கள் ஹெராயினை வாங்கினர். அதில் திருப்தி அடைந்தால் வர்த்தகத்தை விரிவு படுத்தலாம் எனப் பேசினர்.

ஆனால் கொரோனாவால் பயணம் தடைப்பட்டது. ஒரு வழியாக ரகசிய அதிகாரி, சாம்பூவை 2021ஆம் ஆண்டு பாங்காங்கில் சந்தித்தார். ரகசிய அதிகாரியும் ஹெராயினை பெற்றுக் கொண்டார். அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர்கள் சந்தித்தனர். இது விற்றுத் தீர்ந்தால் ஒரு கிலோ மதிப்பிலான பொருளைத் தருவதாக சாம்பூ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாஃபியா கும்பல் தலைவர்

இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக எபிசாவா, மிஷின் கன்ஸ், ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும் ஆயுதங்களைப் பார்க்க டென்மார்க்கில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 3ஆம் தேதி 2021, எபிசாவா ரகசிய அதிகாரியைச் சந்தித்தார். அவருடன் டென்மார்க் போலிசார் இருவர் வந்தனர். ரகசிய அதிகாரி எபிசாவாவிடம் அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆயுதங்களைக் காட்டினார். நிலத்திலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை ஒன்றின் புகைப்படத்தையும் காட்டினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இந்த டீல் குறித்துப் பேசத் தான் இலங்கை செல்லவுள்ளதாக ரகசிய உளவாளியிடம் வாட்சப்பில் தெரிவித்தார் எபிசாவா. அதேபோல மியான்மரில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், எனவே மியான்மரின் கிளர்ச்சி குழுவுக்கு மேலும் ஆயுதங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.


2021ஆம் ஆண்டு மே மாதம் அந்த கிளர்ச்சி குழுவின் தலைவருக்கு வேண்டிய ஆயுதத்தின் பட்டியலை ரகசிய உளவாளிக்கு அனுப்பினார் எபிசாவா. இருவரும் மியான்மாருக்கு ஆயுதங்களை எப்படிக் கடத்துவது எனத் திட்டமிட்டனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஏர் ஃபோர்ஸ் ஜெனரல் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உதவியாக இருப்பர் என்றும் எபிசாவா தெரிவித்தார்.

அங்கிருந்து வர்த்தகம் தொடர்ந்து கொண்டே இருந்தது. மியான்மரின் மூன்று கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தும் அளவிற்கு வர்த்தகத்தை விரிவுப் படுத்தினார் எபிசாவா.

ஒரு கட்டத்தில் ரகசிய அதிகாரி எபிசாவாவுக்கு கமிஷன் தருவதாக ஒரு இடத்திற்கு வரவைத்துத் திட்டமிட்டு அவரை கைது செய்துவிட்டனர்.

எபிசாவா மற்றும் அவரின் கூட்டாளிகளைக் கைது செய்ததை அமெரிக்க அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?