திருகோணமலை Twitter
உலகம்

திருகோணமலை: இலங்கை அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு பதுங்குவது ஏன்? அதன் முக்கியத்துவம் என்ன?

Govind

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிரான போராட்டம் தீப்பிடித்து எரிகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தாலும் அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக போராடும் மக்களைத் தாக்கினர். வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்சேவின் வீடுகளை எரித்தும் அவரது தந்தை சிலையை தரைமட்டமாக்கியும் உள்ளனர். தற்போது இலங்கையில் முப்படைகளும் போராடுபவர்களை சுடலாம் என்று இலங்கை அரசு உத்திரவு போட்டிருக்கிறது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.

முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் குடும்பம் ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அவரது குடும்பம் மட்டக்களப்பில் இருப்பதாகவும், மகிந்த கொழும்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயாகியுள்ளன. இத்தகவல்களில் முரண்பாடு இருந்தாலும் மகிந்த ராஜபக்சே குடும்பம் பீதியடைந்திருப்பது மட்டும் உண்மை.

இக்கட்டுரையில் திருகோணமலை நகரின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம். இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் திருகோணமலையும் ஒன்று. அங்கிருக்கும் மாவட்டத்தின் பெயரும் இதுதான்.

திருகோணமலை

இலங்கையில் கிழக்கு கடற்கரையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உள்ளது. இதன் எல்லைகளாக அனுராதாபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருகோணமலை மாவட்டத்தில் 3,79,541 மக்கள் வாழ்கின்றனர். திருகோணமலை நகரத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்கள் வாழ்ந்தாலும் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இலங்கையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் மையத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள துறைமுகம் ஒரு பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம் ஆகும். ஐரோப்பிய குடியேற்றக் காலத்திலேயே இத்துறைமுகத்தைக் கைப்பற்ற பல போர்கள் நடந்திருக்கின்றன. போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இத்துறைமுகத்தைக் கைப்பற்றி வைத்திருந்தனர்.

திருகோணமலைத் துறைமுகம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. உள் துறைமுகம், மற்றும் வெளித் துறைமுகம் ஆகும். உட்துறைமுகம் பாறைகளும், நிலங்களும் சூழ்ந்தது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமானதும் ஆகும். இதனால் நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக இருக்க முடியும். ரேடார் மற்றும் சோனார் (Sonar) மூலமான கண்காணிப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடியும். திருகோணமலைத் துறைமுகம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். மே நாளில் மட்டும் பூட்டப்பட்டிருக்கும்

திருகோணமலைக்கு போட்டிப் போடும் உலகநாடுகள்

இத்துறைமுகத்தில் 1630 எக்டேர்கள் நீர் தேங்கியுள்ளது, நுழைவாயில் 500 மீட்டர்கள் அகலமானது.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் முழுவதிலும் உள்ள புவிசார் அரசியலில் திருகோணமலை துறைமுகம் மிகவும் முக்கியமானது ஆகும். அமெரிக்கா இத்துறைமுகத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. இதன் மூலம் சீனாவை கண்காணிப்பதற்கு இது பயன்படும் என்பது அமெரிக்காவின் நோக்கு. திருகோணமலை துறைமுகம் உலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமாகும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் முதல் பிற நாசகார போர்க்கப்பல்கள் வரை இங்கே அடிக்கடி வந்து செல்லும். 2019 ஜனவரியில் அமெரிக்காவின் நிமிட்ஸ் வகை விமானந் தாங்கிக் கப்பல் இங்கே நங்கூரமிட்டது. இது அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவைச் சேர்ந்த கப்பலாகும். இங்கே கப்பல் போக்குவரத்து வசதிகளை பெறும் பொருட்டு அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் வந்து போகின்றன.

திருகோணமலை

விடுதலைப் புலிகளுடனான போரில் திருகோணமலை

தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் வேளையில் அமெரிக்கா புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துள்ளது. இதை கொழும்புவில் உள்ள மேற்கத்திய தூதரக அதிகாரிகள் பலர் கூறுகின்றனர்.

இதற்காகவே அமெரிக்கா இலங்கை அரசுடன் 2007 ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன்படி அமெரிக்க கப்பல்கள் இங்கே எரிபொருள் உள்ளிட்ட பிற தேவைகளை பெற்றுக் கொள்ளலாம். அந்நேரத்தின் இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான ஒரு நீண்ட போரில் ஈடுபட்டு வந்தது. அந்தப் போர் 2009 இல் முடிவு பெற்றது. இந்தப் போரில் ஆதரவு வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் ஒப்பந்தத்தை இலங்கை அரசு அப்போது ஏற்றது.

மேலும் திருகோணமலையில் அமெரிக்காவின் பசிபிக் கடற்படை பிரிவோடு சேர்ந்து இலங்கை கடற்படையும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இத்தகைய அமெரிக்க கூட்டுப் பயிற்சி இலங்கையில் நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்தியப் பெருங்கடலில் திருகோணமலை துறைமுகம் போர்க்கப்பல்கள் இளைப்பாறுவதற்கு ஒரு முக்கியமான நிறுத்தம் என்று அமெரிக்க கருதுகிறது. மேலும் இலங்கையில் உள்ள திருகோணமலை, கொழும்பு, ஹம்பந்தோட்டா ஆகிய மூன்று துறைமுகங்களையும் அமெரிக்கா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. 2008 ஆம் ஆண்டு வரை இத்துறைமுகங்களில் சராசரியாக வருடத்திற்கு 20 கப்பல்கள் வந்து சென்றிருக்கின்றன

2017 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 65 ஆக உயர்ந்திருக்கிறது.

திருகோணமலை

அமெரிக்காவின் ஆசை

2008 ஆம் ஆண்டில் இருந்து 28 நாடுகளைச் சேர்ந்த 450 போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகங்களுக்கு வந்து சென்றிருக்கின்றன. இது இந்தியப் பெருங்கடலின் இராணுவமயமாக்கத்தைக் குறிக்கிறது. இதில் இந்தியப் போர்க்கப்பல்கள் 90, ஜப்பானின் போர்க்கப்பல்கள் 65, சீனாவின் 30 கப்பல்களும் அடக்கம். இப்படி இந்த நாடுகள் அனைத்தும் இலங்கை துறைமுகங்களை விரும்புகின்றன. பதிலுக்கு இலங்கை அரசுக்கு ரோந்து படகுகள், கடலோரக் காவற்படை சிறு கப்பல்களை இந்நாடுகள் வழங்கியிருக்கின்றன. இந்த நாடுகள் எவையும் இலங்கை துறைமுகங்களை விடுவதாக இல்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன.

2019 ஆம் ஆண்டில் ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தார். மேலும் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கும் சென்று வந்தார். தற்போது இந்த துறைமுகம் சீனாவின் பிடியில் உள்ளது. இதற்கென சீனா 1.5 பில்லியன் டாலர்கள் கடன் கொடுத்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா பின்னுக்கு போய்விட்டது. இந்தியாவின் இடத்தை பிடிக்க ஜப்பானும், அமெரிக்காவும் முயல்கின்றன.

ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா எடுத்துக் கொண்டிருப்பதால் திருகோணமலை துறைமுகத்தை எடுப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது.

தமிழீழத்தின் தலைநகரம்

தற்போது இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்தாதலும் அந்த போராட்டங்கள் முடிவுக்கு வருவதை மேற்கண்ட நாடுகள் விரும்பவே செய்யும். ஏனெனில் மூன்று துறைமுகங்களும் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவிற்கும் இன்னும் பல உலக நாடுகளுக்கும் முக்கியம். அந்தக் கோணத்தில் பார்த்தால் இலங்கை போராட்டம் ஓரளவிற்கு மேல் போவதற்கு இந்நாடுகள் விரும்பாது என்று சொல்லலாம். ராஜபக்சே குடும்பம் போய் வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் துறைமுக அரசியல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

1987 இலங்கை இந்திய அரசின் ஒப்பந்தப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலைநகரமாக திருகோணமலையே விளங்கியது. விடுதலைப்புலிகளும் தமது தமிழீழம் அமைந்தால் திருகோணமலையையே தலைநகராக அறிவிப்போம் எனக் கூறியிருந்தார்கள்.

1957 வரை திருகோணமலை பிரிட்டன் கடற்படையின் முக்கிய தளமாக இருந்தது. திருமலைக் கோட்டையில் பிரிட்டீஷ்காரர்கள் கட்டிய பல பங்களாக்கள் இன்றும் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் சிங்கப்பூரை கைப்பற்றிய பின்பு திருகோணமலையே பிரிட்டனின் முக்கியக் கடற்படை தளமாக செயற்பட்டது.

திருகோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் தற்போது நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கி வருகின்றது. திருகோணமலையும் கொழும்புவும் இரயில் பாதைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதே போல இரு நகரங்களுக்கும் பேருந்துகளும் போக்குவரத்து சேவையை செய்து வருகின்றன.

இப்படி எல்லா வகையிலும் திருகோணமலை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. தற்போதைய இலங்கை பிரச்சினையில் முடிவு எப்படி வந்தாலும் வல்லரசு நாடுகளின் பார்வை திருகோணமலை துறைமுகத்தின் மீது இருக்கும் என்பது உறுதி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?