கௌதம் அதானி : கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் உலகப் பணக்காரராக வளர்ந்தது எப்படி? Adani
பிசினஸ்

கௌதம் அதானி : பணத்திற்காக கடத்தப்பட்ட வரலாறு தெரியுமா? - ஒரு விரிவான அறிமுகம்

Antony Ajay R

கடந்த வாரங்களில் இந்தியாவே அதிகமாக உச்சரித்த பெயர் கௌதம் அதானி. ஹிண்டென்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதும் இவரது சொத்துமதிப்பு சடாலென சரிந்தது.

இவருக்கு ஒப்பந்தம் அளித்திருந்த வெளிநாடுகள் பின் வாங்கின. இவருக்கு கடன் அளித்திருந்த வங்கிகள் நட்டத்தை சந்தித்தன.

சில மாதங்களுக்கு முன் உலகின் 3வது பெரிய பணக்காரராக இருந்தவர் அதானி. திடீரென 17வது இடத்துக்கு கீழிறக்கப்பட்டார். இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் அதானிக்கு புதிது இல்லை என்பது அவரது வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும் போது நமக்குத் தெரியவரும் விஷயமாக இருக்கும்.

அதானி ஓர் அறிமுகம்

கௌதம் அதானிக்கு நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் திறமை உண்டு. அவர் இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் பணத்திற்காக கடத்தப்பட்டார். மற்றும் 2008 ஆம் ஆண்டில் 160 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் போது மும்பையின் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலின் பணயக்கைதிகளில் அவரும் ஒருவர்.

அப்போதிருந்து, அவரது வணிக புத்திசாலித்தனமும் தடைகளை சமாளிக்கும் திறனும் அவரை இந்தியாவின் பணக்காரர்களின் வரிசையில் உயர்த்தியது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தேசத்தை இரண்டு ஆண்டுகளில் மந்தநிலையில் மூழ்கடித்தபோதும், அதானியின் குழுமம் தொடர்ந்து வளர்ந்தது.

32.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து மதிப்புடன், சிலிக்கான் பள்ளத்தாக்கின் சில முக்கிய பெயர்களோடு செய்தி தலைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியவர் முகேஷ் அம்பானி. அவருக்குப் பிறகு இந்தியாவின் நட்சத்திர பணக்காரர் அதானி மட்டுமே ஆவார்.

பல பணக்காரர்கள் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு ஓடும் செய்திகளைப் படித்திருப்போம். அவர்களிடம் இருந்து வேறுபட்டவராக உள்ளார் அதானி.

ஏனெனில், வணிகம் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் இவரது பெயர் அடிக்கடி அடிபடும். அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு பின் மோடி இருப்பதாக ஒவ்வொரு முறை குற்றம்சாட்டப்படும் போதும் உறுதியாக மறுத்து வருகிறார்.

ஆனால், அதானி குழுமம் மோடி அரசின் ஆதரவோடு குஜராத்தில் துவங்கி இந்தியா, உலகம் வரை இன்று ஒரு மிகப்பெரும் குழுமமாகப் பல்துறைகளில் வளர்ந்து வருகிறது என்பது தான் நிதர்சனம்.

கோவிட் பொது முடக்கத்தில் பல சிறு குறு நடுத்தர தொழில்கள் முடங்கிய போது அதானி போன்றவர்களின் சொத்து மதிப்பும், நிறுவன மதிப்பும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இது உழைப்பின் வளர்ச்சியா இல்லை அரசின் உதவியா என்பது கார்ப்பரேட் உலகமே நன்கு அறிந்த செய்தி.

வைர வியாபாரி டு உலகப் பணக்காரர்

குஜராத்தில் ஒரு சாதாரண, பணக்கஷ்டம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அதானி. அவரது அப்பா ஒரு ஜவுளி வியாபாரியாக இருந்துவந்தார். இவரது குடும்பத்தில் மொத்தம் 7 குழந்தைகள்.

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய பிறகு, அவரது தந்தையயின் தொழிலை எடுத்து நடத்துமாறு குடும்பத்தினர் அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதனை மறுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் அதானி.

மும்பையில் வேலை செய்தவர் அங்கே முதன் முதலாக வைர வியாபாரத்தைத் தொடங்கினார். வியாபாரத்தின் நெளிவுசுழிவுகள், தந்திரங்கள் எல்லாம் அப்போதே அவருக்கு அத்துபடி.

கெளதம் அதானி

மும்பையில் இருந்து தனது சகோதரரின் பிளாஸ்டிக் வணிகத்திற்கு உதவுவதற்காக அவர் சொந்த மாநிலமான குஜராத்திற்கு திரும்பும் போது அவர் ஊரில் பணக்காரராக இருந்தார். ஏழை ஜவுளி வியாபாரியின் மகன் என்ற தனது விதியை மாற்றி எழுதத் தொடங்கியிருந்தார்.

அண்ணனின் தொழிலில் இறங்கியவர் பல மாற்றங்களை மேற்கொண்டு லாபம் சேர்த்தார். பிவிசி பைப்புகளை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். அது தான் அவரது முதல் சர்வதேச வியாபாரம்.

1988 ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் குழுமத்தை ஆரம்பித்தார். தாரளமயமாக்கல் பொருளாதார கொள்கையை புரிந்துகொண்டு தனக்கு ஏற்றபடி பயன்படுத்தி வளர்ந்தார் அதானி. ஒரு பத்தாண்டிற்குப் பிறகு, அவர் அரபிக் கடலின் கடற்கரையில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகத்தை செயல்படுத்தத் தொடங்கினார். இறுதியில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை துறைமுக நிறுவனமாக உருவெடுத்திருக்கிறார்.

அதானி குழுமமானது நாட்டின் மிகப்பெரிய அரசு சாரா மின்சார உற்பத்தியாளராகவும், நிலக்கரி சுரங்கத்தில் முன்னணி நிறுவனமாகவும் மாறியுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் விரிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், அதானி தனது கார்மைக்கேல் வெப்ப-நிலக்கரி திட்டத்திற்கு எதிர்மறையான விளம்பரத்தைத்தான் இன்றும் பெறுகிறார். இதற்காக அவர் ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் ஒரு பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு ஒப்புதல் பெற்றார்.

போட்டி குறைவாக இருக்கும் சில தொழில்களை இந்திய அரசு முன்னேற்ற நினைக்கிறது. மற்ற தொழில்முனைவோரைப் போலவே, அதானியும் மீண்டும் மீண்டும் அரசு சொல்லும் புதிய தொழில்களைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்துகிறார்.

முதலமைச்சர் மோடியோடு சேர்ந்து வளர்ந்த அதானி

குஜராத்தைச் சேர்ந்த மோடி ஆட்சியைப் பிடித்தது போல் அதானியும் இணையாக தனது தொழிலில் உயர்ந்தார். அதானி முந்த்ரா துறைமுகத்தின் வணிக நடவடிக்கைகளைத் துவங்கியதோடு தனது தொழிற்துறை மண்டலத்தையும் தொடங்கினார். அப்போது மோடி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகளாக மோடியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக அதானி இருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதானி, பாஜகவின் மோடிக்கு முக்கியமான பரவலராகத் திகழ்ந்தார்.

அதானி எனும் பில்லியனரின் விரைவான பல்வகைத் தொழில்கள் 2015 இல் தொடங்கியது. பாதுகாப்பு உபகரணங்களின் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த மோடி உறுதியளித்தபோது, ​​​​பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுடன் கூட்டு சேர்ந்து இராணுவத்திற்கு உபகரணங்களை வழங்குவதற்கான திறனை விரைவாக உருவாக்கினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எரிவாயு துறையில் நுழைந்தார். இறுதியில் அவரது சாம்ராஜ்யம் எரிபொருள் விநியோகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சில்லறை விற்பனையாளராக மாறியது. 2019 ஆம் ஆண்டில், அவர் விமான நிலையங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இப்போது அவர் தரவு சேமிப்பு எனப்படும் டேட்டா சர்வர் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளில் நுழைய முயற்சிக்கிறார்.

"மோடியின் கொள்கைகள் குஜராத்திலிருந்த வணிகக் குழுக்களுக்கு உதவியது. அதானி குழுமம் போன்ற கூட்டு நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்கு பங்களித்தது" என்று அகமதாபாத்தில் உள்ள மேம்பாட்டு மாற்று மையத்தின் இயக்குநர் இந்திரா ஹிர்வே கூறினார். "கார்ப்பரேட் உத்திகளை அரசாங்க முன்னுரிமைகளுடன் இணைப்பது - இதுவே இந்தியாவில் வணிகம் செய்வதற்கான வழி." என்கிறார் அவர்.

ஆனால் அதற்கு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நபர்களோடு நட்பு இருப்பது அவசியம்.

அதானியின் நிறுவனம் இதோடு முடங்கிப்போய்விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். "சர்வதேச முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தையில் ஏற்கனவே பணம் சம்பாதிக்கும் சொத்துக்களில் அமர்ந்திருக்கும் அதானியை அவர்கள் தவறவிட முடியாது." - என்ற ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் கருத்தையே இதற்கு பதிலாகவும் வைத்துக்கொள்ளலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?