Xiaomi Twitter
பிசினஸ்

Xiaomi : ஏன் சியோமியின் 5,500 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத் துறை?

NewsSense Editorial Team

சியோமி நிறுவனத்திற்குப் பெரிய அறிமுகம் தேவையில்லை. கடந்த தசாப்தத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இடம்பிடிக்கத் துடித்துக்கொண்டிருந்த ஒரு சீன நிறுவனம் என்கிற நிலையிலிருந்து, இன்று இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் போக ஸ்மார்ட் டிவி, ஃபிட்னஸ் பேண்ட் என பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களையும் உற்பத்தி செய்துவருகிறது சியோமி.

கடந்த சில மாதங்களாகவே சியோமி நிறுவனத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாகச் சிறு சிறு மோதல்கள் மற்றும் உரசல்கள் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது.

அம்மோதலின் அடுத்த படிநிலையாக, சமீபத்தில் சியோமி நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு சொத்துக்களை இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததைப் படித்திருப்போம்.

எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது? சியோமியின் சொத்துக்களை என்ன காரணத்துக்காகப் பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை? வாருங்கள் பார்ப்போம்.

MI Mobile

சியோமி நிறுவனம் இந்திய அரசின் அந்நிய செலாவணி விதிகளை மீறி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்திய ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, வங்கிக் கணக்குகளிலிருந்த சியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 5,551.27 கோடி ரூபாயை, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 இன் கீழ் பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருந்தது.

சியோமி நிறுவனம் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பியதாக மேலே குறிப்பிட்ட சியோமி நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 2021 முதல் சியோமி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும் இந்த விசாரணையின்போது தான் ராயல்டி பணப் பரிமாற்றங்கள் என்கிற பெயரில், மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணம் அனுப்பி இருப்பதைக் கண்டுபிடித்ததாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது.

Xiaomi

சியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சீனாவில் இருக்கும் தங்களின் தாய் நிறுவனத்தின் அறிவுரைப்படி இத்தனை பெரிய தொகையை ராயல்டி என்கிற பெயரில் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதுபோக சியோமி குடும்பத்தின் நன்மைக்காக, சம்பந்தமே இல்லாத இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சியோமி நிறுவனம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வங்கிகளிடம் தவறான தகவல்களைக் கூறி வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்தை அனுப்பி உள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் பூகோள ரீதியில் நடந்துவரும் அரசியல் பதற்றத்தின் ஒரு வெளிப்பாடாகவே இந்த பிரச்சனை பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் பல்வேறு முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளும் கடந்த சில ஆண்டுகளாகக் கடமையாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

சியோமி நிறுவனமோ அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், சியோமி இந்தியா நிறுவனம் மேற்கொண்ட பணப்பரிமாற்றங்கள் ராயல்டி பணப் பரிமாற்றங்கள்தான் என்றும், அது சட்டப்படி சரியான பணம் பரிமாற்றங்கள்தான் என்றும் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2022-ல் இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை சியோமி மற்றும் ஒப்போ அலுவலகங்களைச் சோதனையிட்டது நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?