Adipurush: "ஜானகி இந்தியாவின் மகள்" வசனத்தால் காத்மண்டுவில் இந்தி திரைப்படங்களுக்கு தடை! ட்விட்டர்
சினிமா

Adipurush: "ஜானகி இந்தியாவின் மகள்" வசனத்தால் காத்மண்டுவில் இந்தி திரைப்படங்களுக்கு தடை!

Keerthanaa R

ஓம் ரவுத் இயக்கியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனத்தின் காரணமாக, இனி எந்த பாலிவுட் திரைப்படமும் நேபாளின் காத்மண்டுவில் திரையிடப்படாது என தடை விதித்துள்ளார் காத்மாண்டு மெட்ரோபாலிட்டன் சிட்டி மேயர் பலேன்தர் ஷா.

இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், க்ருத்தி சனான் சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இது இந்திய இதிகாச கதையான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படமாகும். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது

டீசர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி வந்தது திரைப்படம். இந்த படத்தில் சீதையின் கதாபாத்திரத்தில் க்ருத்தி சனான் நடித்துள்ளார்.

இந்நிலையில், 'ஜானகி இந்தியாவின் மகள்' என்ற வசனம் திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதை தொடர்ந்து, அதனை நீக்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார் காத்மண்டு மெட்ரோபாலிட்டன் சிட்டி மேயர் பலேன் ஷா.

சீதையின் பிறப்பிடம் நேபாளம் என்கிற வாதத்தை முன்வைத்து மேயர் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் என்ற இடத்தில் தான் சீதை பிறந்தார். ஜனக்பூரைஆண்ட மன்னர் ஜனகரின் மகள் என்பதால் தான் அவருக்கு ஜானகி என்ற பெயரும் வந்தது. அவரை மணக்க ராமர் நேபாளத்துக்கு வந்தார் என நம்பப்படுகிறது

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த பலென் ஷா, "ஆதிபுருஷ் என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஜானகி இந்தியாவின் மகள்' என்ற வசனம் நேபாளத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் தவறான செய்தியை பரப்புகிறது.

இதனை சரி செய்ய 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அன்னை சீதைக்கு வணக்கங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது, எந்த பாலிவுட் திரைப்படமும் காத்மண்டுவில் திரையிடப்படக் கூடாது என்று கடந்த ஞாயிறு அன்று உத்தரவை பிறப்பித்துள்ளார். எச்சரிக்கை அளித்த மூன்று நாட்களுக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"மூன்று தினங்களுக்கு முன் ஆதிபுருஷ் படக்குழுவினரிடம் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாப்பது அனைத்து நேபாள அரசாங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நேபாள குடிமக்களின் முதல் கடமையாகும்.

ஆதிபுருஷ் படத்தில் இருந்து இந்த ஆட்சேபனைக்குரிய பகுதி நீக்கப்படும் வரை காத்மாண்டு நகராட்சி பகுதியில் எந்த இந்திய திரைப்படமும் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது." என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் இவ்வாறான சர்ச்சைகள் எழுவது இது ஒன்றும் முதன் முறையல்ல. காலாபானி பிராந்தியம் குறித்த இரு நாட்டு தகராறு இன்று வரை தீர்க்கப்படாமல் இருப்பதும் இங்கு நினைவுக்கூர வேண்டும்.

காலாபானி எல்லை இந்தியா நேபாள நாடுகளை இணைக்கிறது. இதனால் இவ்விடம் எந்த நாட்டிற்கு சொந்தம் என்கிற எல்லை பிரச்னை இன்று வரை நீடித்து வருகிறது

தவிர புத்தரின் பிறப்பிடமாக கருதப்படும் லும்பினி என்ற இடத்தையும் இந்தியா சொந்தம் கொண்டாடுவதாகவும், லும்பினியும் நேபாளத்தின் பகுதி என்கிற விவாதமும் இருந்து வருகிறது.

இதற்கு முன் ஒரு முறை பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், நேபாளத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சில நாட்களுக்கு பிரச்னைகள் எழுந்தன.

தற்போது மீண்டும் ஆதிபுருஷ் திரைப்படத்தினால் ஏற்பட்டுள்ள விவகாரம் இந்நாடுகளின் இரு தரப்பு உறவுகளை பாதிக்கும் விதமாக வந்தமைந்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?