சக்கர நாற்காலியில் சபரிமலை பயணம்  Twitter
இந்தியா

சபரிமலை: இஸ்லாமிய ஆசிரியருக்காக சக்கர நாற்காலியில் 300கி.மீ செல்லும் இந்து மாற்றுத்திறனாளி

எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் கண்ணன், உதவிப் பேராசிரியர் சமீராவை அழைத்து நன்றி கூறுவதாக, சமீரா சில ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.

NewsSense Editorial Team

கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஒரு குழு விவாதம் நடத்தினால், மறுபக்கம் யார் உண்மையான கடவுள் என விவாதம் நடத்துபவர்களைப் பார்க்க முடியும்.

இந்த மதம் தான் சிறந்தது, இந்த கடவுள் தான் சக்தி வாய்ந்தவர், இவரை மட்டுமே உலக மக்கள் அனைவரும் வணங்க வேண்டும் என்பது போன்ற அபத்தமான வாதங்களுக்கு இடையில்... ஒருவருக்காக மற்றொருவர் உதவும் மனிதம் தான் கடவுள் என பல்வேறு மதம் சார்ந்த நூல்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாக ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்கிற பொன்மொழிதான் இங்கு நினைவுக்கு வருகிறது.

அப்படி ஓர் இந்து ஏழை மாற்றுத்திறனாளியின் கண்ணீரை ஓர் இஸ்லாமிய ஆசிரியர் துடைத்திருக்கிறார். அந்த மாற்றுத்திறனாளி இந்துவோ, இஸ்லாமிய ஆசிரியரின் நலனுக்காகச் சக்கர நாற்காலியில் சபரி மலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

என்ன சம்பவம் இது?

கேரளா மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஒரு தினக்கூலியாக, லாரியில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கிக் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்தார்.

அவர் வீட்டில் கண்ணனின் வருமானத்தை வைத்தே அவரது மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் வாழ்ந்து வந்தனர்.

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு லாரியில் இருந்து மரக் கட்டைகளை இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில், கண்ணன் தன் காலை இழந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கைக் கால் வைக்கப்பட்டது. மற்றொரு காலும் சில மருத்துவப் பிரச்சனைகளால் செயலற்றுப் போய்விட்டது.

ஒரு வீடு

கண்ணனின் நிலையைக் குறித்துத் தெரிய வந்த கொண்டோட்டி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் எம் பி சமீரா, அவருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பாகப் பல உதவிகளை மேற்கொண்டுள்ளார். அவர் அக்கல்லூரியின் என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

அடித்துப் பிடித்து நான்கு ஆண்டுகளுக்கு முன், கண்ணனுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டார் உதவிப் பேராசிரியர் சமீரா. அதற்கு இந்த நொடி வரை நன்றி கூறி வருகிறார் கண்ணன். 

எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் கண்ணன், உதவிப் பேராசிரியர் சமீராவை அழைத்து நன்றி கூறுவதாக, சமீரா சில ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.

பிரார்த்தனையும் பயணமும்

ஆசிரியர் சமீரா எனக்கும் என் குடும்பத்துக்கும் கடவுள் போன்றவர். இந்த ஒட்டுமொத்தப் பயணமுமே ஆசிரியர் சமீராவுக்காகத் தான்.

நான் மனதாரப் பிரார்த்தனை செய்தால், என் இறைவன் ஐயப்பன் அவருக்கு எல்லா ஆசிகளையும் வழங்குவார் என சில ஊடகங்களிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார் கண்ணன்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தடப்பரம்பு கிராமத்திலிருந்து புறப்பட்ட கண்ணன் சபரிமலை வரை சக்கர நாற்காலியிலும் (சுமார் 300 கிமீ), பம்பை ஆற்றங்கரையிலிருந்து கால்நடையாகவும் பயணிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

தற்போது சபரி மலை நோக்கிப் பயணித்து வரும் கண்ணன், காலை 6 மணி முதல் நண்பகல் வரை சக்கர நாற்காலியில் பயணிக்கிறார். பிறகு வழி நெடுக உள்ள பல கோயில் அன்னதானங்களில் வழங்கப்படும் பிரசாதத்தைச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொள்கிறார்.

மீண்டும் மாலை 6 மணிக்குத் துவங்கி 11 மணி வரை பயணிக்கிறார். இரவு நேரங்களிலும் கோயில்கள் & அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறார். 

கண்ணனின் மகள் செவிலியர்களுக்கான பட்டப்படிப்பை படித்து வருகிறார். அவரது மனைவி உணவு விடுதியில் சுத்தம் செய்பவராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தான் கண்ணன் லாட்டரி சீட்டுகளை விற்று கொஞ்சம் காசு பார்க்கத் தொடங்கியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?