Modi  https://www.pmindia.gov
இந்தியா

பிரதமர் மோடி : மக்கள் நம்பிக்கைதான் என்னுடைய பாதுகாப்பு கேடயம்

NewsSense Editorial Team

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் எதிர்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பிப்ரவரி 8ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய நாடளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி என்ன பேசினார்?

இந்திய குடியரசுத் தலைவரின் பிரமாதமான உரைக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பும் பல்வேறு குடியரசுத் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை என் பாக்கியமாக கருதுகிறேன்.

ஆனால் இந்த முறை குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமின்றி, அவரை வரவேற்கவும் விரும்புகிறேன். மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆதிவாசி சமூகத்தினரின் கெளரவத்தையே உயர்த்தி இருக்கிறார்.

சமீபத்தில் சிலர் பேசிய பிறகு, அவர்களின் ஆதரவாளர்களும் பூரிப்படைந்தனர். இந்தியாவின் குடியரசுத் தலைவர் உரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, சிலர் அந்த உரையை தவிர்த்தனர். ஒரு முக்கியமான தலைவர் கூட, குடியரசுத் தலைவரை அவமதித்தார். அவர்கள் இந்த நாட்டில் வாழும் மலைவாழ் மக்களை வெறுப்பதை வெளிக்காட்டினர். குடியரசுத் தலைவர் உரையை எவரும் விமர்சிக்கவில்லை, அவர் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு காலத்தில் இரண்டு முதல் மூன்று தசாப்த காலங்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் அரசியல் நிலையற்றதன்மை நிலவியது. இப்போது இந்த நாட்டில் அரசியல் நிலைத் தன்மையும் இருக்கிறது, எதையும் உடனடியாக தீர்மானிக்கக்கூடிய அரசும் ஆட்சியில் இருக்கிறது.

PM Modi

கொரோனா வைரஸ் பெருந்தொற்று

ஜி 20 நாடுகள் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துவது இந்தியாவிற்கான மிகப்பெரிய கௌரவம். ஆனால் அது கூட சிலரை எரிச்சல் அடையச் செய்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பிரிந்து கிடக்கும் உலகம், போரினால் ஏற்படும் அழிவுகள் என பல்வேறு காரணங்கள் பல நாடுகளில் நிலையற்ற தன்மையை கொண்டு வந்திருக்கின்றன. அதுபோக மிகக் கடுமையான பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், உணவு நெருக்கடி போன்ற பிரச்னைகளும் பல்வேறு நாடுகளில் பார்க்க முடிகின்றன.

இந்த நேரத்தில் கூட இந்தியா உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இருப்பதை கண்டு எந்த இந்தியன் தான் பெருமைப்படமாட்டான். கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் ஆட்சி பீடத்தில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இந்த நாட்டிற்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நெருக்கடிகளாக மாற்றினர். அந்த பத்தாண்டு காலமும் ஊழல்கள் மற்றும் வன்முறைகள் நிறைந்த தசாப்தமாக இருந்தது.

பலருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அறிக்கை மீது அதிக நாட்டம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா பெரிய மற்றும் முக்கிய பல்கலைக்கழகங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்படி வீழ்ந்தது என்பதை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஒட்டுமொத்த உலகமே, இந்தியாவை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில விரக்தி அடைந்த நபர்கள் இந்தியாவின் சாதனைகளை, 140 கோடி இந்தியர்களின் சாதனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இந்தியா உலக அளவில் ஓர் உற்பத்திக் கேந்திரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. உலகம் தற்போது இந்தியாவின் செழுமையை, நம் நாட்டின் வளர்ச்சியில் பார்க்கிறது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் 90,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் ஒரு மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழல் உருவாகியுள்ளது. அது இந்த நாட்டின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பரவி இருக்கிறது.

இன்று உலகின் பல முன்னணி நம்பத் தகுந்த நிறுவனங்கள், உலகத் தாக்கங்களை ஆழ்ந்து கண்காணித்து வரும் நிபுணர்கள் இந்தியா மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

Narendra Modi

விமர்சனங்கள்

அப்படி இவர்கள் இந்தியா மீது நம்பிக்கை வைக்க என்ன காரணம்? ஏன் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருக்கின்றன? இந்தியாவின் நிலைத்தன்மையில் அதற்கான விடை மறைந்திருக்கிறது. உலக அளவில் இந்தியாவிற்கான மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் புதிய சாத்தியக்கூறுகள் & திறன்கள் அதிகரித்து வருகின்றன.

நான் கடந்த காலங்களில், யாரேனும் நல்ல பகுப்பாய்வுகளோடு, நல்ல விமர்சனங்களோடு வருவார்கள், அது நம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் விமர்சனங்களுக்கு பதிலாக குற்றச்சாட்டுகள், தேவையற்ற விஷயங்கள் மட்டுமே எழுந்தன.

நீங்கள் தேர்தலில் தோற்றுப் போனால் இ வி எம் எந்திரங்களின் மீது பழிபோடுகிறீர்கள், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கிறீர்கள். இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கொடுக்கவில்லை என்றால், அதையும் விமர்சிக்கிறீர்கள். ஊழல் விசாரிக்கப்பட்டால், அதை விசாரிக்கும் முகமைகளை குறை சொல்கிறீர்கள்.

Modi

பாதுகாப்பு கேடயம்

இந்திய ராணுவம் தன் வீரத்தைப் பறைசாற்றினால், அதையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறீர்கள், அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து பேச்சு எழுந்தால், மத்திய ரிசர்வ் வங்கியை விமர்சிக்கிறீர்கள். கடந்த 9 ஆண்டுகளில் கட்டாயத்தின் பேரில் விமர்சிக்கிறீர்களே ஒழிய, ஆக்கப் பூர்வமான விமர்சனங்கள் இல்லை.

மக்கள் நரேந்திர மோதி மீது வைத்திருக்கும் நம்பிக்கை பத்திரிகைகளில் பிரசூரமாகும் தலைப்பு செய்திகளாலோ அல்லது தொலைக்காட்சி சேனல்களில் விவாதிக்கப்படும் அல்லது காட்டப்படும் படங்களினாலோ அல்ல, என்னுடைய பல்லாண்டு கால அர்ப்பணிப்பு காரணமாக மக்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தான் என்னுடைய பாதுகாப்புக் கேடயம். அந்த கேடயத்தை உங்களுடைய அவச்சொற்களாலோ, தேவையற்ற வாதங்களினாலும் உடைத்து விட முடியாது.

வாக்கு அரசியலால் இந்தியா பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டது. இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் தடைப்பட்டன. இந்தியாவின் நடுத்தர குடும்பங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. ஆனால் இந்த என் டி ஏ அரசாங்கத்தில் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.

இன்று ஜம்மு காஷ்மீரில் வந்திருக்கும் அமைதி காரணமாகத் தான், உங்களால் நிம்மதியாக அங்கு சென்று வர முடிகிறது. ஜனநாயகம் ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுகிறது என எதிர்கட்சிக்கு பதிலளிக்கும் வகையிலும், தங்கள் கட்சியின் பணிகளைப் பாராட்டியும் பேசினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?