Detective ரஜனி Twitter
இந்தியா

ரஜனி பண்டிட் : 22 ஆண்டுகளில் 80000 வழக்குகளை தீர்த்த லேடி ஜேம்ஸ் பாண்ட் - Detective-ன் கதை

Antony Ajay R

பெண் என்றால் அவர் டீச்சராகலாம், நர்ஸாகலாம் என சில பணிகளை மகளிருக்கானதாக வகைப்படுத்தி வைத்திருக்கிறது சமூகம். இப்போது இந்த நிலை ஓரளவு மாறியிருந்தாலும் 1980களில் எப்படியிருந்திருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்.

அப்போதே இந்தியாவில் ஒரு சிங்கப்பெண் இருந்தார். அவர் பெண்களால் நுழையவே முடியாது என நம்பப்பட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுத்தார். சாகசங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தார். பேர் புகழ் பெற்றார். பெண்களால் எதையும் சிறப்பாக செய்ய முடியாது எனக் கூறிய சமூகத்தின் முன் ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் தலைநிமிர்ந்து நிற்கும் வண்ணம் தனது பணியில் சீறிப்பாய்ந்தார்.

அவர் துப்பறிவாளர் (Detective). பெயர் ரஜனி பண்டிட்.

"நீ பொழப்புக்கு ரௌடி; நா பொறந்ததுல இருந்தே ரௌடி" எனும் சினிமா வசனத்தைப் போல ரஜனி பொறந்ததுல இருந்தே டிடெக்டிவ் தான். அவரது அப்பா மகாராஷ்டிரா காவல்துறையில் துணை ஆய்வாளர். புலனாய்வில் புலி. மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணையில் பங்கேற்றவர். அவரை பல வழக்குகள் தொடர்பாக பலர் சந்திக்க வருவதும் போவதுமாக இருக்கும் வீட்டில் ரஜனி, அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பாராம். ரஜனிக்கு ஆர்வம் வரும் வழக்குகள் குறித்து அப்பாவிடம் தனியாக கலந்துரையாடுவாராம். இப்படி வீட்டுக்குள் பிறந்த இவரது investigation ஆர்வம் வீதியை வந்தடைந்தது கல்லூரிப்பருவத்தில்.

அவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவரது வகுப்பிலேயே ஒரு வழக்கை கையாண்டார். அவரது வகுப்பு பெண் ஒருவர் குடிப்பது, புகைபிடிப்பது என ஆரம்பித்து பாலியல் தொழில் வரை செய்திருக்கிறார். ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண் இந்த செயல்களில் ஈடுபடுவதை ரஜனியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனை அந்த பெண்ணின் தந்தையிடம் சொல்லினார் ஆனால் அவர் அதை நம்பவில்லை. எனினும் இதனை நிரூபிக்க முடிவு செய்த ரஜனி அந்த பெண்ணுக்கே தெரியாமல் புகைப்பட ஆதாரம் ஒன்றைத் தயார் செய்து அவரின் தந்தையிடம் காண்பித்திருக்கிறார். அதன் பின் தந்தை, அந்த பெண்ணை நல்வழிப்படுத்தினார்.

துப்பறியும் பணியை வெறும் தொழிலாகப் பார்த்தால் அதனை திறம்பட செய்ய முடியாது. மாறாக இயல்பான அக்கறையும் துணிவும் இருந்தால் தான் இதில் வெற்றி பெறமுடியும். இந்த குணங்களை சிறுவயதிலிருந்தே ரஜனி பெற்றிருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி. போலிஸ்காரர் மகள் என்றால் சும்மாவா என்ன?

அப்போதிருந்தே துப்பறியும் பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ரஜனிக்கு இருந்தது. எனினும் சிறு சிறு தயக்கங்களால் முழுமையாக அந்த தொழிலில் ஈடுபடவில்லை. ஒரு தனியார் நிறுவனப் பணியில் இருந்தார். அப்போதும் அவரை துப்பறியும் பணி துரத்தியது.

அவருடன் பணியாற்றிய பெண்ணின் வீட்டில் நகை திருடு போனது. அதனை கண்டறிவதற்காக களத்தில் இறங்கிய ரஜனி உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

அன்று தான் துப்பறியும் பணியை செய்ய சிறப்பு பயிற்சியோ, கல்வியோ, தகுதியோ தேவையில்லை. மனதை ஒருநிலைப்படுத்துதல், விடா முயற்சி, விவேகம், துணிவு, நிதானம், சாகச மனப்பான்மை, எதனையும் எதிர்கொள்ளும் மனோதிடம், உள்ளுணர்வு ஆகியவை தான் ஒரு சிறந்த துப்பறிவாளரை உருவாக்கும் என்பதை அறிந்துகொண்டதாக அவர் கூறினார். அப்போது தான் டிடெக்டிவ் தொழிலை தொடங்குவது என முடிவு செய்தார் ரஜனி.

1991ம் ஆண்டு தனது 25 வயதில் "ரஜனி பண்டிட் டிடெக்டிவ் ஏஜென்சி" -யைத் தொடங்கினார் ரஜனி. பொதுவாக இந்தியாவில் பெண்கள் தொழில் செய்வதென்றாலோ வேலைக்கு செல்வதென்றாலோ முதல் தடையாக இருப்பது அவர்களின் குடும்பமாகத்தான் இருக்கும். ரஜனிக்கு அப்படியல்ல, அதுவரை ஆண்கள் மட்டுமே இருந்து வந்த அந்த துறையில் அவர் செயலாற்ற அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். ஆனால் தடைகள் வேறு விதமாக வந்தது.

ரஜனி தனது ஏஜென்சிக்காக ஒரு நாளிதழிதலில் விளம்பரம் செய்ய நினைத்திருக்கிறார். ஆனால் அந்த இதழின் ஆசிரியர் இவர் பெண் என்பதாலேயே விளம்பரத்தை வெளியிட மறுத்தார். இது ரஜனிக்கு மனதளவில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகொள்ள முடியும். அப்போதும் தளர்ந்து போகாத ரஜனி தொடர்ந்து தனது பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார். ஒரு நாளில் அவருக்கான கதவு திறந்தது.

ரஜனியின் விளம்பரத்தை பிரசுரிக்க மறுத்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு, நெருங்கிய நண்பராக இருந்த ஒருவர் ரஜனியிடம் உதவி கேட்டு வந்துள்ளார். அவரின் பிரச்னையை சிறப்பாக தீர்த்து வைத்தார் ரஜனி. பிறகு, அதே நாளிதழின் நிருபர் ரஜனியைத் தேடி வந்து பேட்டி எடுத்து அவர் புகைப்படத்துடன் சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது தான் ரஜனி! உழைப்பு ஒரு போதும் கைவிடாது என்பதற்கு ரஜனி வாழ்க்கையின் இந்த சம்பவமே சாட்சி.

"அதன் பிறகு எனக்கு தனியாக விளம்பரம் கொடுப்பதற்கான தேவையே இருந்ததில்லை" என ஒரு பேட்டியில் கெத்தாக கூறியிருக்கிறார் ரஜனி.

பெண் ஷெர்லாக் ஹோம்ஸாக நிமிர்ந்து நடந்தார் ரஜனி. ஏனெனில் அவரது பணியில் அவர் மிகுந்த அர்பணிப்புடன் செயல்பட்டார். மாறு வேடத்தில் புலனாய்வது அவரின் ஸ்டைல். வேலைக்கார பெண்ணாக, துப்புறவு பணியாளராக, கர்ப்பினிப் பெண்ணாக, கண்பார்வையற்றவராக என பல வேடங்களில் வாழ்பவர் அவர். தன்னை நம்பி வந்திருக்கும் கிளைன்ட் அவரது பிரச்னைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று வேலை செய்யக்கூடியவர் அவர். பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாதவர்.

அவர் கண்டுபிடித்த வழக்குகளில் மிகவும் கடினமான வழக்கு குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது ஒரு கொலை வழக்கு.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரின் நண்பர் ஒருவர் ரஜனியைத் தேடி வந்திருக்கிறார். அவரது சொந்த தம்பியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடமையை சவாலாக ஏற்றுக் கொண்ட ரஜனி அவரின் வீட்டில் பணிப் பெண் வேடத்தில் நுழைந்து துப்பறியத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது தாயை சந்திக்க ஒருவர் மறைமுகமாக வந்து செல்வதைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர்கள் பேசுவதை இவரால் கேட்க முடியவில்லை.

ஒரு நாள் "போலிஸ் தீவிரமாக கண்காணிக்கிறது. இனி இங்கு வராதே" என அந்த அம்மா அந்த வெளி நபரிடம் கூறுவது இவருக்குக் கேட்டிருக்கிறது. அதை வைத்து அவர் கொலையாளியாக இருக்கலாம் என சந்தேகித்த ரஜனி பட்டென்று ஒரு கத்தியை எடுத்து தனது காலில் கிழித்துள்ளார். பின்னர் அதனை அந்த பெண்ணிடம் காட்டி கட்டுப் போட்டு வருவதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு வந்துள்ளார். வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவரது கிளைன்டுக்கும் காவல்துறையினருக்கும் STD கால் செய்து கொலையாளியை கைது செய்ய வைத்துள்ளார்.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகண்டு அதில் கிடைக்கும் நிம்மதியும், பாராட்டும் தரும் மகிழ்ச்சி தனக்கு வேறெதிலும் கிடையாது என்பார் ரஜனி. உண்மையாகவே செய்யும் தொழிலை விரும்பிச் செய்வது என்பதில் இருக்கும் உள்ளார்ந்த மகிழ்ச்சியை ரஜனியிடம் தான் காண முடியும்.

ரஜனிக்கு அதிகமாக வரும் வழக்காக இருப்பது தம்பதிகளின் சந்தேக வழக்கு தான். தன்னை காதலிக்கும் அல்லது தன்னுடன் இணைந்து வாழும் நபருக்கு வேறு யாரிடமும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் இருப்பவர்கள் ரஜனியைத் தேடி வருவதுண்டு. இதில் சாதாரண மக்களில் தொடங்கி தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் வரை அடங்குவர்.

பாலிவுட்டிலும் சின்னத்திரையிலும் இந்த பிரச்னை அதிகம். இதற்காக அவர், படப்பிடிப்புத் தளங்கள் தொடங்கி தயாரிப்பாளர்களின் அலுவலகங்கள் வரை பலரை முழு நேர டிடெக்டிவ்வாக பணியமர்த்தி வைத்திருக்கிறார்.

குடும்ப வழக்குகள், நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களை வேவு பார்ப்பது, காணமல் போனவர்களை கண்டுபிடிப்பது, கொலை வழக்குகளை புலனாய்வது என த்ரில்லான வாழ்க்கையை 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்து வருகிறார் ரஜனி.

"வாடிக்கையாளராக என்னிடம் அறிமுகமானவர்கள் நான் காட்டும் அக்கறையின் பொருட்டு எனக்கு நண்பர்கள் ஆகிவிடுவார்கள்" என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ரஜனி.

திகிலாகவும் த்ரில்லாகவும் தினசரிகளை களித்து வந்த ரஜனிக்கு பணி வாழ்வா? குடும்ப வாழ்வா? என்ற கேள்வி நேரடியாக கேட்கப்பட்டபோது உறுதியாக பணி வாழ்வை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தனது அர்பணிப்பு நிறைந்த சேவையின் பால், தூர்தர்ஷனின் பெண் சாதனையாளர்களுக்கான Hirkani விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவரது டிடெக்டிவ் அனுபவங்களை வைத்து, "Faces Behind Faces" மற்றும் "Mayajal" என்ற இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்த புத்தகங்களும் பல விருதுகளைப் பெற்றுள்ளன.

மும்பையிலிருக்கும் இவர், சர்வதேச அளவில் Investigation Wing மற்றும் 30க்கும் மேற்பட்ட நேரடிப் பணியாளர்களைக் கொண்டுள்ளார். இதுவரையில் 80000 -க்கும் மேற்பட்ட வழக்குகளை கண்டறிந்துள்ளார்.

தினகர் ராவ் என்பவர், இவரைப் பற்றி "லேடி ஜேம்ஸ் பாண்ட்" என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார். யாரும் புறக்கணிக்க முடியாத தலைப்பு தான் "Lady james bond".

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?